கருட புராணம் இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது.
மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகின்றது.
இப்புராணத்தில் வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தின கட்டமைப்பு மற்றும் பண்புகள் பற்றி விவாதிக்கிறது.
தவறு செய்பவர்களுக்கான தண்டனைகள் குறித்தும் புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐம்புலன்களையும் அலையவிடாமல் கட்டுப்படுத்தி ஒழுக்கமாக வாழ்பவருக்கு சொர்க்க பதவி கிட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள்…
1. பிறன்மனைவி, குழந்தை, பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.
2. கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள், கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.
3. அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.
4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.
5. ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.
6. பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.
7. பிறரை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.
advertisement
8. அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக் கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.
9. சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம் அந்தகூபம்.
10. தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.
11. பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால் அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினி குண்டம்.
12. கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும் மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.
13. நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டு எல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.
14. அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.
15. கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன வழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் பிராணரோதம்.
17. டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.
18. வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்கு ஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.
19. வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவா வதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.
20. பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள் அடையும் நரகம் அவீசி.
21. எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.
22. தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும், நல்லோரையும் அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.
23. நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.
24. எவ்விதத் தீமையும் புரியாதோரைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.
25. தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.
26. பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரேவதம்.
27. வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும் பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம் பரியாவர்த்தனகம்.
28. செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம் என்பதாகும்.
இதேவேளை, ஐம்புலன்களையும் அலையவிடாமல் கட்டுப்படுத்தி ஒழுக்கமாக வாழ்பவருக்கு சொர்க்க பதவி கிட்டுகிறது.மேலே கூறப்பட்டவை ஒரு சாம்ப்பிளுக்குத்தான்…
தவறு செய்பவர்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்பதை அனைத்து மதங்களும் எச்சரிக்கின்றன என்பதே உண்மை. வரம்பு மீறி தவறு செய்யும் சகோதரர்கள் சிந்திப்பார்களா?
உயிர் வதையும் நரக தண்டனைகளும் (புராணங்கள் அறிவுறுத்தும் ஜீவ ஹிம்சைக்கான தண்டனைகள் – ஆதார பூர்வ விளக்கங்கள்):
வியாசர் இயற்றிய 18 புராணங்களிலும் நரக லோக வர்ணனை; பாவச் செயல்கள் மற்றும் அதற்குரிய தண்டனைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்பினைக் காணலாம். 28 வகையான நரகங்களைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன நமது புராணங்கள் (குறிப்பாக கருட புராணத்தில் இவை விஸ்தாரமாகக் கூறப் பட்டுள்ளது).
மரணத்திற்குப் பின் ஜீவாத்மா ஜனனம் எடுத்த உடலை விட்டு வெளியேறுகிறது. சுவர்க; நரக அனுபவங்களை நுகரும் பொருட்டு அதற்கு ‘யாதனா சரீரம்’ வழங்கப் படுகிறது.
எவ்விதக் கொடுமைகளுக்கு உள்ளானாலும் (தண்டனைக் கால வரையறை முடியும் வரை) ஆன்மா யாதனா சரீரத்தை விட்டு நீங்குதல் இயலாது. அதாவது அச்சரீரமானது வலியை நுகரும்; ஆனால் மரணிக்காது.
சுவர்க நரக அனுபவங்களை நுகர்ந்த பின்னர் ஆன்மா எஞ்சியுள்ள கர்மங்களின் தொடர்ச்சியால் மீண்டும் இப்புவியில் ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினமாகப் பிறவி எடுக்கிறது. அகிம்சையையே அடி நாதமெனக் கொண்ட ஒப்பற்ற இந்து மதத்தில் ஜீவ ஹிம்சைக்கான தண்டனைகளை இனிக் காண்போம்.
பிராணிகள்; மிருகங்களை தம்முடைய மகிழ்விற்காகக் கொல்வோருக்கு ‘கும்பி பாகம்’ எனும் நரகம் (மாமிச உணவே மிகச் சுவையானது என்று கூறி உயிர்களைக் கொல்வதும் கொன்றதைத் திண்பதும் இதில் அடங்கும்). இச்செயலுக்குத் தண்டனையாக ‘வெப்பம் மிகுந்த எண்ணைப் பாத்திரத்தில் பல முறை மூழ்கியெழுமாறுச் செய்தல்’ கூறப்பட்டுள்ளது.
உண்ணும் பொருட்டு ஒரு பிராணியை துன்புறுத்திக் கொல்வது; புலால் உணவினை உண்பது இப்பாவச் செயல்களுக்கு மற்றொரு நரகமாக ‘பிராணரோதம்’ கூறப் பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு உறுப்பாக உடலில் இருந்து துடிக்கத் துடிக்க வெட்டப் படும். பின் அனைத்து உறுப்புகளும் மீண்டும் இணையும். தண்டனை மறுபடி தொடங்கும்.
இன்னும் உயிர் வதைகளின் பல வகைகளையும் அதனால் அடையப் பெறும் தண்டனைகளையும் புராணங்கள் பேசுகின்றன. ‘வதைப்பவர் வதைக்கப் படுவர்’ என்பது இந்து தர்மச் சித்தாந்தம். ‘சுவர்கமாவது நரகமாவது! நாங்கள் 21ஆம் நூற்றாண்டு நவ நாகரீக மனிதர்கள்’ என்று கூறுவோரும் உண்டு. சான்றுகளை இனிக் கண்டு தெளிவு பெறுவோம்.
ஞான சம்பந்தர் ‘நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்’ என்று ‘திருநல்லூர் பெருமணம்’ தல தேவாரத்தில் குறிக்கிறார்.
அப்பர் அடிகள் ‘கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார்’ என்று திருவையாறு தேவாரத்தில் குறிக்கிறார். சுந்தரர் திருவிடைமருதூர் தேவாரத்தில் ‘நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி’ என்று குறித்துள்ளார்.
‘பொய்யா நரகம் புகினும்’ என்று 11ஆம் திருமுறையில் குறிக்கிறார் சேரமான் பெருமாள் நாயனார்.
இதில் பொய்யா நரகம் எனும் பதம் ‘தீவினை செய்வோருக்கு தப்பாமல் கிட்டுகின்ற நரகம்’ என்று பொருள் படும். திருமூலர் ‘எட்டாம் தந்திரம் – உடலில் பஞ்ச பேதம்’ எனும் பகுதியில் ‘உண்டு! நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு விடும் சூக்கம்!’ என்று குறிக்கிறார்.
உண்டு! நரக சுவர்க்கத்தில் உள்ளன
கண்டு விடும் சூக்கம் காரணமாச் செலப்
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்டம் எடுக்கும் பிறப் பிறப்பு எய்தியே!!!உயிரைத் துறக்கும் ஆன்மாவானது உடலைத் துறந்து சூட்சும சரீரம் கொண்டு ‘சுவர்க்க நரக’ அனுபவங்களைப் பெறுகிறது. பின்னர் எஞ்சியுள்ள கர்மத்தினை நுகரும் பொருட்டு (யோகிகள் ஒரு உடல் விட்டு வேறு உடலுக்குக் கூடு விட்டு கூடு பாய்வது போல்) வேறொரு பிறப்பினை எடுத்து இப்புவியில் மீண்டும் பிறப்பெடுக்கிறது!!!
இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே!!!
சுந்தரர் தேவாரம் (திருவிடை மருதூர்):
கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்
குற்றம் செற்றம் இவை முதலாக
விடுக்க கிற்றிலேன் வேட்கையும் சினமும்
வேண்டில் ஐம்புலன் என் வசமல்ல
நடுக்கமுற்றதோர் மூப்பு வந்தெய்த
நமன் தமர் நரகத்திடல் அஞ்சி
இடுக்கணுற்றனன் உய்வகை அருளாய்
இடைமருதுறை எந்தை பிரானே!