சுமந்திரன், நளின் பண்டார எம்.பி. கேள்வி; டக்ளஸ் திரும்பி வந்துவிட்டேன் என்று கூறுவதாகவும் சுட்டிக்காட்டு
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கருணா அம்மான் இருக்கின்றார் என்ற சந்தேகம் இருக்கின்றது. மஹிந்த ராஜபக் ஷ வின் தூண்டுதலிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நளின் பண்டார நேற்று சபையில் தெரிவித்தார்.
அத்துடன் இந்த சம்பவத்தில் கருணா மீது சந்தேகம் இருக்கின்றது அதனால் இதுதொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் வலிறுத்தினார்.
பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.
இதன்போது சட்டம் மற்றும் ஒழுங்குகள் முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருமான நலின் பண்டார ஒழங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் உத்தியோகத்தர் இருவர்மீது (நேற்று) நேற்று முன்தினம் மேறட்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தால் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறானதொரு சம்பவம் தற்போதே இடம்பெற்றுள்ளது. இதுமிகவும் பயங்கரமான நிகழ்வாகும்.
அத்துடன் விடுதலைப்புலி உறுப்பினராக இருந்த கருணா அம்மான் அவரது டுவிட்டர் செய்தியில். ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் என்னை மிரட்டுகின்றனர்.
நான் மட்டக்களப்பைச் சேர்ந்த கருணா அம்மான், 2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் கருணா அம்மான் யார் என்பதை மட்டக்களப்பு மக்களிடம் கேளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
கருணா அம்மானின் இந்த டுவிட்டர் தகவல் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் மற்றும் மட்டக்களப்பில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் ஆகியவற்றுக்கு சம்பந்தம் இருக்கின்றதா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது.
நாட்டை ஸ்திரமற்றதாக்க 2004இல் இருந்த கருணா அம்மான் மீண்டும் தலைதூக்குகின்றாரா, ஆயுதம் தூக்க ஆரம்பிக்கின்றாரா என்ற சந்தேகம் இருக்கின்றது.
அதேபோன்று நேற்று) நேற்று முன்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து அவர்களின் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை கையளித்திருக்கின்றனர்.
இனங்களுக்கிடையிலான இந்த நல்லிணக்கத்தை குழப்ப கருணா அம்மான் போன்றவர்களை பயன்படுத்திக்கொண்டு ராஜபக்ஷ் கும்பல் திட்டமிடகின்றாரா என்ற சந்தேகம் இருக்கின்றது.
அத்துடன் கடந்த மூன்று வருடங்களில் எமது அரசாங்க காலத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சு எமக்கு கீழே இருந்தது. ஆனால் இவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை.
அன்று வடக்கில் ஆவா குழு பட்டாசு கொளுத்தினாலும் இந்த பிரதேசத்தில் இருக்கும், தேசப்பற்றாளர்கள் என தெரிவித்துக்கொண்டிருக்கும் விமல் வீரவன்ச, கம்பன்பில போன்றவர்கள் புலிகள் தலை தூக்குவதாக பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர்.
ஆனால் தற்போது சட்டம் ஒழுங்கு அமைச்சு ஜனாதிபதிக்கு கீழே இருக்கின்றது. இவர்கள் யாரும் இப்போது வாய்திறப்பதில்லை.
அதனால் மட்டக்களப்பு சம்பவத்துக்கு கருணா அம்மான தொடர்பு பட்டிருக்கின்றாரா என்பது தொடர்பாக தெளிவான அறிவிப்பொன்று எங்களுக்கு தேவையாகும்.
ஜனாதிபதி இந்த விடயத்தில் தலையிட்டு மீண்டும் இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனை பயன்படுத்திக்கொண்டு நாங்கள் தெற்கில் இனவாத பிரசாரம் செய்ய மாட்டோம்.
அத்துடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் வடக்கில் மாவீரர் தினம் பல இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு இந்த காலப்பகுதியில் வந்தமையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். இல்லாவிட்டால் மாவீரர் தினத்தை வைத்துக்கொண்டு விமல் வீரவன்ச, உதய கம்பன்பில போன்றவர்கள் தெற்கில் பாரியளவில் இனவாத பிரசாரத்தை மேற்கொண்டிருப்பார்கள்.
ஆனால் நாங்கள் இனவாதிகள் அல்ல என்பதை தெளிவாக தெரிவித்திருக்கின்றோம். எமது உறுப்பினர்கள் மிகவும் பொறுப்புடன் இந்த விடயத்தில் செயற்பட்டார்கள்.
எனவே எமது உண்மையான நிலைப்பாட்டை இந்த ஒருமாதத்தில் நாட்டு மக்களுக்கு விளங்கிக்கொள்ள முடியுமாகியுள்ளது. அதற்கு ஜனாதிபதிக்கே நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவராக இருக்கும் கருணா அம்மான் மீண்டும் நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தப்போகின்றாரா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றார்.
சுமந்திரன் எம்.பி.
இதையடுத்து எழுந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உரையாற்றுகையில் , நலின் பண்டார எம்.பி.யின் கருத்தை நான் வழிமொழிகின்றேன்.
பதுங்கியிருந்த கருணா மீண்டும் பேச தொடங்கியுள்ள நிலையிலேயே மட்டக்களப்பில் இரு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் எமக்கு ஆழமான சந்தேகங்கள் உள்ளன. எனவே, இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும்.
அதேவேளை, இன்னொருவர் யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைத்தூக்கியுள்ளார். இவர் தன்னை ஒரு அமைச்சராக தெரிவித்துக்கொண்டு, நான் மீண்டும் வந்துட்டேனு சொல்லு என்று ஒரு சினிமா நடிகரின் தொணியில் கூறியுள்ளார்.
இந்த போலி அமைச்சரின் கட்சியினராலேயே அங்கு தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எனவே இவை தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உரையாற்றுகையில், மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூட்டில் இரு பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம் செய்தவர்கள் ஒரு பொலிஸ் அதிகாரியின் கையை துண்டித்துள்ளனர். எமது மூன்றறை வருட ஆட்சியில் இவ்வாறாதொரு சம்பவம் இடம்பெறவில்லை.
இதேபோன்றே எமது ஆட்சியில் 27 இடங்களில் மட்டுமே மாவீரர் தினங்கள் கொண்டாடப்பட்டன. ஆனால், கடந்த 27ஆம் திகதி 38 இடங்களில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
இதேவேளை, மகஜர் கையளிக்கச் சென்ற பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவமும் தற்போதைய ஆட்சியில் இடம்பெற்றுள்ளது.
அரசியல் செய்யும் தேரர்கள் தற்போது இதுதொடர்பில் மெளனம் காத்து வருகின்றனர். அத்துடன், சிறிசேன , மஹிந்த அரசு இராணுவத்தினரையும் சிறையில் அடைக்க ஆரம்பித்துள்ளது
எமது ஆட்சியில் வடக்கில் சிறிய சம்பவங்கள் இடம்பெற்றாலும் அதனை பெரிது படுத்திய தேசப்பற்றாளர்கள் தற்போது மௌனம் காக்கின்றனர். ஆவா குழுவை பாரியதொரு பிரச்சினையாக்கிய இவர்கள் தற்போது அதுகுறித்து வாய் திறப்பதில்லை என்றார்.
இக்கருத்துகளுக்கு சபாநாயகர் கருஜயசூரிய பதிலளிக்கையில், நீங்கள் கூறிய விடயங்கள் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதியினதும் பாதுகாப்புச் செயலாளரினதும் கவனத்திற்குக் கொண்டுசெல்வேன் என்றார்