உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவாட் மாவட்டத்தில் நேற்று, ‘பாக்வால்’ எனும் கற்களை எறிந்து காயப்படுத்தும் விநோத திருவிழா கொண்டாடப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் சம்பவாட் மாவட்டத்தில் ஆண்டுதோறும், ரக்ஷா பந்தன் நாளில், ‘பாக்வால்’ என்ற பெயரில் ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதன்போது, இரண்டு பிரிவினராக பிரியும் மக்கள், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொள்கின்றனர்.
‘பழங்காலத்தில், கடவுளை சாந்தப்படுத்த ஆண்டுக்கு ஒருமுறை ஒருவரை பலியிட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்துள்ளது.
ஒருமுறை, வயதான பெண்மணி ஒருவர் தன்னுடைய ஒரே பேரனை பலி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடவுளிடம் முறையிட்டுள்ளார்.
இதையடுத்து, ஒரு பக்தரின் கனவில் தோன்றிய கடவுள், முதியவரின் வேண்டுதலை தான் ஏற்பதாகவும், மனித பலிக்கு பதிலாக ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக்கொண்டு மண்ணில் ரத்தம் சிந்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதை ஏற்ற பக்தர்களும், அன்று முதல் ஆண்டுதோறும் கற்களால் தாக்கிக்கொள்ளும் விழாவை கொண்டாடி வருகின்றனர்.
சம்யல், கஹர்வால், ஒல்கியா, லாம்கரியா ஆகிய நான்கு கடவுள்கள் தங்கள் நிலங்களை காப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
இந்த நான்கு கடவுள்களை வணங்குபவர்களும் இரு குழுவாகப் பிரிந்து கற்களால் தாக்கிக்கொள்கின்றனர். மூத்த மதகுருவிடமிருந்து உத்தரவு வந்தவுடன் தாக்குதலை நிறுத்தி விடுகின்றனர்.
இந்த கல் வீச்சு விளையாட்டின்போது, ‘மண்ணில் சிந்தப்படும் ரத்தத்துக்குப் பிறகே கடவுள் மகிழ்ச்சி அடைகிறார்’ என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
நேற்று நடந்த கல் எறியும் நிகழ்வு 10 நிமிடங்கள் நீடித்ததாகவும், இதில் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் மூத்த மதகுரு ஜோஷ் தெரிவித்துள்ளார்.