எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கரைப்பற்றில் காணாமற் போனார். அப்போது அந்தப் பகுதி முழுவதும் கருணாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. எனவே எனது மகனை அவர்களே கடத்தியிருக்க வேண்டும் என கந்தையா சங்கரப்பிள்ளை என்ற காணாமல் போன ஒருவரின் தந்தை ஆணைக்குழுவிடம் இன்று தெரிவித்தார்.
.
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு இன்று வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுவரும் நிலையில் சாட்சியமளித்த கந்தையா சங்கரபிள்ளை என்ற தந்தையே இவ்வாறு கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்தும் அங்கு சாட்சியமளித்த அவர்,
எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கரைப்பற்றில் காணாமற் போனார். அப்போது அந்தப் பகுதி முழுவதும் கருணாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. எனவே எனது மகனை அவர்களே கடத்தியிருக்க வேண்டும்.
நான் செட்டிகுளம் மெனிக்பாம் எனும் கிராமத்தில் தான் வசித்து வருகின்றேன். எனது மகன் வேலைவாய்ப்புக்காக அக்கரைப்பற்றில் தங்கியிருந்த சமயம் கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காணாமல் போயிருந்தார்.
இதன் போது அக்கரைபற்று யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பினர் அதற்கு கருணா அம்மானின் கட்டுப்பாட்டில் இருந்தது என தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து ஆணைக்குழுவின் தலைவர் கருணா வடபகுதியில் தானே இருந்தார் என கேட்க, இல்லை அவர் கிழக்கு மாகாணத்தில் இருந்தார். அங்கு முகாம்களை அமைத்து அவர்கள் தங்கியிருந்தனர். அந்தக் காலப்பகுதியில் எனது மகன் காணாமல் போனார்.
எனவே கருணா குழுவினரே எனது மகனைக் கடத்தியிருக்க வேண்டும் என தெரிவித்த அவர் காணாமல் போன எனது மகனுக்கு எப்படி மரணச் சான்றிதழைப் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.