அரியலூரில், காதலனின் தாயாரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக காதலியின் சகோதரர் கத்தியுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை. இவரது மகன் விஜய்.. இவர் அதே கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் சங்கீதாவை காதலித்து வந்தார்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு விஜய் சங்கீதாவை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
இது குறித்த புகாரின் பேரில் குவாகம் காவல்துறையினர் விசாரித்துவந்த நிலையில் விஜய்யின் தாய் அஞ்சலை போலீஸ் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை.
வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இதனால் விஜய் – சங்கீதா இருக்கும் இடம் தெரியாமல் செல்வராஜ் குடும்பத்தினர் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் காட்டில் விறகு பொறுக்கிக்கொண்டிருந்த அஞ்சலையை மடக்கி பிடித்த, சங்கீதாவின் 17 வயது சகோதரர், காதல் ஜோடி மறைந்து இருக்கும் இடத்தை கேட்டு கத்தியை காட்டி மிரட்டி இருக்கிறார்.
தெரிவிக்க மறுத்ததால் அஞ்சலையின் கழுத்தை கொலை செய்த அந்த சிறுவன் கத்தியுடன் குவாகம் காவல் நிலையத்தில் சரண் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனது சகோதரியை காதல் வலையில் வீழ்த்தி தங்களிடம் இருந்து பிரித்த காதலன் விஜய்க்கு பாடம் கற்பிக்கவே அவரது தாயை கொன்றதாக 17 வயது சிறுவன் தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் ஜோடியை கண்டுபிடிக்காமல் வழக்கை கிடப்பில் போட்ட காவல்துறையினரின் கவனக்குறைவால் இந்த கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.