பஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டது. இதையடுத்து, அவசர அவசரமாக கூட்டப்பட்ட பஞ்சாயத்தில், ஒரு திடீர் முடிவு எடுக்கப்பட்டது.
அதில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆணோ, பெண்ணோ அவரவர் சொந்த விருப்பத்தின் பேரில் காதல் திருமணம் செய்துகொண்டால், அவர்களை கிராமத்தை விட்டு ஒதுக்கிவைப்போம். அவர்களோடு யாரேனும் பழகினால் அவர்களையும் கிராமத்தை விட்டு ஒதுக்கிவைப்போம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி காதல் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு எந்தக் கடைகளிலும் பொருட்கள் தரமாட்டார்கள். கிராமத்தின் பொது நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்துகொள்ள முடியாது. பஞ்சாயத்து தரும் எந்த நலத்திட்ட உதவிகளும் அவர்களுக்குக் கிடைக்காது. இதனை அப்படியே பிரசுரமாக அச்சிட்டு கிராமத்தில் உள்ள முக்கிய இடங்களில் ஒட்டியுள்ளனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒருவரை தாராளமாக திருமணம் செய்துகொள்ளலாம். இதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது.
ஒருவேளை அப்படி தடை ஏதும் விதிக்கப்பட்டால், அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்கள் முறையிட்டு, அரசு தரப்பிலிருந்து தங்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ளலாம். எனவே அந்த கிராம பஞ்சாயத்து எடுத்துள்ள முடிவு சட்டரீதியில் செல்லுபடியாகாது.
அதேசமயம், அந்த கிராமத்தில் இதுபோல் இதற்கு முன் நடந்த 6 காதல் திருமணங்களுக்கும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.