தங்கையைக் காதல் திருமணம் செய்துகொண்டவரை வீட்டில் புகுந்து சகோதரர் சரமாரியாக வெட்டியுள்ளார். தட்டிக்கேட்ட காதலனின் தாயாரும் வெட்டப்பட்டுள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை காமராஜர் சாலை காதர்கான் பட்லர் லைன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பொன்ராஜ். 29 வயதான இவர், தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இவரும், உறவினர் மீனா (23) என்பவரும் சில ஆண்டுகளாகக் காதலித்துவந்துள்ளனர். பின்னர், இரு வீட்டாரின் சம்மதத்துடன் 6 மாதங்களுக்கு முன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, இரு வீட்டாருக்குமிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டதால், திருமணம் நிறுத்தப்பட்டது. இருந்தபோதிலும், பொன்ராஜ்- மீனா ஆகியோரின் காதல் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் முருகன்கோயிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தகவல் மீனாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பொன்ராஜ் வீட்டுக்கு மீனாவின் சகோதரர் அரிவாளுடன் வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த பொன்ராஜிடம் பிரபு தகராறு செய்துள்ளார். “எப்படி என் தங்கையை நீ திருமணம் செய்துகொள்ளலாம்” என்று ஆவேசத்துடன் கேட்ட பிரபு, பொன்ராஜை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதைத் தடுக்க வந்த பொன்ராஜியின் தாயாரையும் பிரபு வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்களுக்குத் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து மதுரை தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பிரபுவைத் தேடிவருகின்றனர்.