திருவனந்தபுரம் அருகே உள்ள ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் சுதீரன் (வயது48). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி பிந்து (44). இந்த தம்பதியின் மகள் அகிலா (14). மகன் அனந்து (12). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அகிலா 9–ம் வகுப்பு படித்து வந்தார்.
சுதீரன் அந்த பகுதியில் சுரேஷ் என்பவர் வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டு உரிமையாளரின் ஒரே மகன் மிதுன் (19) என்பவருக்கும் அகிலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இந்த காதலுக்கு சுரேஷ் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுதீரன் குடும்பத்தினரிடம் தகராறு செய்து அவர்களை வீட்டை காலி செய்யவும் கூறி இருந்தனர். இதனால் மிதுன் மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறிய மிதுன் அந்த பகுதியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் கிடைத்ததும் சுரேஷ் குடும்பத்தார், அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.
இதனால் பயந்து போன சுதீரன் தனது மனைவி பிந்து மகள் அகிலா ஆகியோரை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். மிதுன் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்ற அவர்கள் 3 பேரும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
காதல் விவகாரத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி ஆலுவா பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.