கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி மதியம் 12 மணியளவில் 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிலிருந்து பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு தகவலொன்று கிடைத்தது. விஹாரை மாவத்தை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவே அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட தகவல் கிடைத்தபோது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வேறு ஒரு கடமையின் நிமித்தமாக வெளியில் சென்றிருந்தார். எனவே இந்தத் தகவலை உடனடியாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்த குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி விசேட பொலிஸ் குழுவொன்றுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பெண்ணொருவர் வீட்டின் அறையொன்றுக்குள் கிடந்துள்ளார். அவ ரின் காதுப் பகுதியில் இரத்தம் சிந்தியிருந்துள்ளது.
அத்தோடு அருகிலிருந்த கட்டிலொன்றில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆணொருவரும் கிடந்துள்ளார். இருவரும் உயிருடனேயே இருந்துள்ளனர். எனவே துரிதமாக செயல்பட்ட பொலிஸார் அயலவர்களின் உதவியுடன் அவ்விருவரையும் முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிக்கொண்டு களுபோவில வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
குறித்த இருவரையும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்த பொலி ஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டைச் சோதனையிட்டுள்ளனர். அப்போது வீட் டின் அலுமாரியின் கதவு உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த ஆடைககௌல்லாம் கிளறப்பட்டுள்ளன.
வீட்டில் வேறுயாரும் இல்லாததால் அவ்விடத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்புப் போட பொறுப்பதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதன் பின்னர் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைக்கான தடயங்களை தேடத் தொடங்கினர்.
அதுமாத்திரமன்றி மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இவ்வாறு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவரிடமும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள முயன்றபோதும் ஒருவரிடம் மாத்திரமே வாக்கு மூலத்தினை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
பத்மசிறி மற்றும் புஸ்பா ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்கள். புஸ்பா கடுமையாக தாக்குதலுக்குள்ளாகி இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வந்தமையினால் அவரிடம் வாக்குமூலம் பெற முடியாமல் போயுள்ளது.
பத்மசிறி தனது வாக்குமூலத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் :-
“அவர்கள் இருவரும் என்னருகே ஓடிவந்தார்கள். அவர்களில் ஒருவர் என்னை கத்தியால் குத்த முயன்றார். அப்போது நான் என்னை கத்தியால் கொலை செய்யாதீர்கள். எனக்கு இரு பிள்ளைகள் இருக் கிறார்கள். அவர்களை பார்ப்பதற்கு வேறு யாருமில்லை என்று கூறினேன்.
அதன் பின்னரே அவர்கள் என்னைத் தாக்கிவிட்டு கை, கால்களை கட்டிப்போட்ட னர்.” என வாக்குமூலமளித்துள்ளார். அத்தோடு சந்தேக நபர்கள் இருவரும் உள்ளே புஸ்பாவிடம் பேசிக்கொண்டிருந்த சிலவிடயம் தனது காதுகளுக்கு எட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் இன்னும் அக்காவின் வீட்டிற்கு வேலைக்குச் செல்லவில்லையா? என்று புஸ்பா அந்த சந்தேக நபர்களிடம் கேட்டது தனது காதுகளுக்கு எட்டியதாகவும் பின்னரே புஸ்பா கதறும் சத்தம் கேட்டதாகவும் அதன் பின்னரே வீட்டிற்குள் தான் ஓடியதாகவும் பத்மசிறி கூறியுள்ளார்.
பத்மசிறியிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்ட பொலிஸார், சம்பவம் இடம்பெற்ற வீட்டைச் சுற்றியிருந்த அயலவர்களிடமும் சில தகவல்களை கேட்டறிந்துள்ளனர்.
அதனடிப்படையில் புஸ்பாவிற்கு சகோதரியொருவர் இருப்பது தெரிய வந்துள்ளதுடன் அவருடைய தொலைபேசி இலக்கத்தினையும் பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அயலவர்களிடம் பெற்றுக்கொண்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அவர்களையும் அவ்விடத்திற்கு வரவழைத்தனர் பொலிஸார். அத்தோடு அவர்கள் ஏற்கனவே பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களை மையமாகக் கொண்டே அவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதனடிப்படையில் எங்காவது அக்கா ஒருவரின் வீட்டிற்கு யாராவது வேலைக்கு வருவதாக கூறினீர்களா? அப்போது ஆமாம் தங்கை புஸ்பா எனது வீட்டிற்கு பெயின் பூசுவதற்கு இரு பாஸ்மார்களை அனுப்புவதாக கூறியிருந்தார் என்றனர்.
பொலிஸார் அவர்களிடம் மேலும் தகவல்களை கோரியுள்ளனர். அந்த பாஸ்மார்களைப் பற்றி உங்களது தங்கை வேறு ஏதாவது கூறினார்களா? பொலிஸாரின் கேள்விகள் நீண்டுகொண்டே சென்றன.
அதற்கு ஆம் வீட்டிற்கு அருகில் உள்ள வேலைத்தளமொன்றில் அவர்கள் வேலை செய்கிறார்கள். அத்தோடு எனது அக்காவின் வீட்டிற்கும் அவர்கள் பெயின்ட் பூசியதாக என்னிடம் கூறினார் என பொலிஸாரிடம் முழு தகவல்களையும் அவர்களும் வழங்கியுள்ளார்கள்.
இவ்வாறு சகல தகவல்களையும் பெற்றுக்கொண்ட பொரலஸ்கமுவ பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எச்.எச். ஹெரிசன் உடனடியாக ஆறு புலனாய்வு உத்தியோகத்தர்களை அந்தப் பகுதிகளிலுள்ள வேலைத்தளங்களை சோதனையிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். அதனடிப்படையில் புலனாய்வு உத்தியோகத்தர்களும் தமது பணியை தொடங்கினர்.
விகாரை மாவத்தைக்கு சற்று தொலைவிலுள்ள வேலைத்தளமொன்றிற்கு புலனாய்வு உத்தியோகத்தர்கள் சிலர் சென்று அங்கிருந்த தலைமை பாஸிடம் குறித்த இரு பெயின் பாஸ்மார்களைப் பற்றி விசாரித்துள்ளனர்.
அதற்கு அந்த தலைமை பாஸ் ஆம். இங்கும் அப்படியான இரு பெயின்ட் பாஸ்மார்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேலையொன்று வெளியில் இருப்பதாக கூறிவிட்டு இன்று காலையில்தான் சென்றார்கள் என்று கூறியதுடன் ஏன் ஏதாவது பிரச்சினையா? என்றும் கேட்டுள்ளார்.
உடனடியாக அத்தகவலை பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரிக்கு தெரிவித்த புலனாய்வினர் உடனடியாக குறித்த தலைமை பாஸை அழைத்துச்சென்று பொறுப்பதிகாரியை சந்திக்கச் செய்தனர்.
பொறுப்பதிகாரி ஹெரிசன் அந்த தலைமை பாஸிடம் மேற்கொண்ட விசா ரணையின் மூலம் காயமடைந்த புஸ்பாவின் வீட்டில் பெயின்ட் பூசியது அந்த தலைமை பாஸின் வேலைத்தளத்தில் பணியாற்றிய இருவரே இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
ஆனால் அந்த இருவரது தொலைபேசி இலக்கங்களோ வீட்டு விலாசமோ அந்த தலைமை பாஸிடம் இருக்கவில்லை. அதாவது பத்திரிகை விளம்பரத்தினூடாகவே அந்த இருவரையும் வேலைக்குச் சேர்த்துக்கொண்ட தால் அவர்கள் பற்றிய வேறு தகவல்கள் எதுவும் இல்லையென்று கூறிய தலைமை பாஸ் அவர்களில் ஒருவரது அம்மாவின் வீடு, நுகேகொடை பகுதியில் இருப்பதாகவும் அதை தன்னால் காண்பிக்க முடியுமெனவும் பொறுப்பதிகாரியிடம் கூறியுள்ளார்.
உடனடியாக அந்த தலைமை பாஸை அழைத்துக்கொண்டு இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள். நுகேகொடைக்கு விரைந்தனர். அவர்கள் சிவில் உடையணிந்து அந்த வீட்டிற்கு சென்றனர். பெயின் வேலையொன்றிற்கு மகனை அழைத்துச் செல்லவந்தோம் என அந்த தாயிடம் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதற்கு அந்த தாய் சுமார் இரு வாரங்களுக்கு முன்னர் மகன் வந்து சென்றார். அதற்கு பின்னர் வரவில்லை என பதிலளித்துள்ளார். எனவே பொலிஸாருக்கு அங்கும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த வீட்டை கண்காணிக்க அப்பகுதியில் சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் போடப்பட்டிருந்தார்.
சம்பவத்தினத்திற்கு அடுத்த தினமான செப்டெம்பர் 23 ஆம் திகதி காலை பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்துக்கு தகவலொன்று வந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த புஸ்பா மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரையில் இச்சம்பவம் பற்றிய எவ்வித வாக்குமூலங்களையும் புஸ்பாவிடம் பொலிஸாரால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே பல்வேறு சவால்களுக்கு மத்தியில் விசாரணைகள் தொடர்ந்தன.
இவ்வாறான நிலையில் சந்தேக நபர்களில் ஒருவரது தொலைபேசி இலக்கத்தினைப் பொலிஸாரால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. ஆனால் அந்த தொலைபேசி இலக்கமானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.
எனவே பொலிஸார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு குறித்த தினத்தில் உள்வந்த மற்றும் வெளிவந்த அழைப்புக்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டனர்.
குறித்த தினத்தில் சந்தேக நபருடைய தொலைபேசியிலிருந்து யுவதியொருவருடைய கையடக்கத் தொலைபேசிக்கு 36 குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன் தொலைபேசி அழைப்பும் சென் றுள்ளது.
ஆனால் அன்றைய தினம் அந்த யுவதியின் தொலைபேசியிலிருந்து எவ்வித அழைப்புக்களும் சந்தேக நபருக்கு சென்றிருக்கவில்லை. ஆனால் அடுத்த நாள் காலையில் யுவதியினுடைய தொலைபேசியிலிருந்து சந்தேக நபருக்கு அழைப்பு வந்துள்ளதுடன் அந்த அழைப்பு பியகம பகுதியிலிருந்து வந்தமையை பொலிஸார் உறுதி செய்துகொண்டனர். எனவே அதனடிப்படையில் விசாரணைகளைத் தொடர்ந்தனர்.
பியகம ஆடைத்தொழிற்சாலைப் பகுதியிலுள்ள டவர் ஒன்றினூடாகவே அவ்வழைப்பு சந்தேக நபருக்கு வந்துள்ளது. ஆனால் பொலிஸார் உடனடியாக அந்த யுவதியினுடைய தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அந்த யுவதி பயந்து சந்தேக நபரிடம் ஏதாவது கூறினால் அடுத்த கட்ட நகர்வுகளை எடுக்க முடியாது என்பதற்காகவே பொலிஸார் அப்படிச் செய்தனர்.
பியகம காமன்ட் பகுதியிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு இச்சம்பவம் பற்றி பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். அதற்கு அவர் அப்பகுதியில் 54 ஆடைத் தொழிற்சாலைகள் இருப்பதாகவும் அதில் பல்லாயிரக்கணக்கான யுவதிகள் வேலை செய்வதாகவும் கூறியதுடன் அந்த யுவதியை அவ்வளவு இலகுவாக இனங்காண முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
வாகனத்தில் ஒலிவாங்கியை கட்டிக்கொண்டு அப்பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலைகளை அண்மித்த பகுதிகளில் அந்த யுவதியை தேடலாம். ஆனால் அது சாத்திமில்லை. ஏனென்றால் ஏனைய யுவதிகள் பதற்றமடையத் தொடங்குவார்கள். அத்தோடு அந்த யுவதிக்கும் அது அவ்வளவு சரியில்லை. எனவே பொரலஸ்கமுவ பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி விசேட திட்டமொன்றை வகுத்துள்ளார்.
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை அந்த யுவதியினுடைய தொலைபேசி எண்ணுக்கு பேசச் செய்து அவர் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டு அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுப்பதே அத்திட்டம். பொலிஸ் கான்ஸ்டபிள் நண்பி ஒருத்தி பேசுவதைப் போல தொலைபேசியில் பேசத் தொடங்கினார்.
‘ஹலோ என்னை ஞாபகம் இருக்கிறதா? நான் பியகம பகுதியில் ஆடைத்தொழிற்சாலையொன்றிற்கு வேலைக்கு வந்தேன். ஆனால் தங்குவதற்கு ஒரு இடமில்லை. தயவு செய்து ஒரு இடம் தேடித்தரமுடியுமா?’ இப்படியாக அந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கேட்க ‘ஐயோ எனக்கு உன்னைத் தெரியாது ‘ என குறித்த யுவதி கூறினாள்.
‘என்னடி என்னை ஞாப கம் இல்லை என்கிறாய் இதற்கு முன்னர் நாம் சந்தித்து இருக்கிறோம்’ என பெண் கான்ஸ்டபிள் மீண்டும் கூறியுள்ளார். அதற்கு அந்த யுவதி ‘ சரி பரவாயில்லை. உன்னை நேரில் பார்த்தால் அடையாளம் காணமுடியும்.
நான் இரண்டு மணிக்கு வேலைக்கு வருவேன். காமன்ட் நுழைவாயிலில் நில்’ என்று கூறியுள்ளார். அத்தோடு குறித்த காமன்ட் இருக்கும் இடத்தையும் யுவதி தெளிவாக கூறியுள்ளார்.
அந்த யுவதி கூறிய இடத்திற்கு இரண்டு மணிக்கு முன்பதாக அந்த பெண் கான்ஸ்டபிள் சென்றிருந்ததுடன் அந்த காமன்டிற்கு சற்று தொலைவில் பொலிஸார் சிவில் உடையணிந்து வாகனத்துடன் இருந்துள்ளனர்.
அந்த யுவதி தனது அக்காவுடன் வந்துள்ளாள். அந்த இருவருட னும் கதைத்த பெண் கான்ஸ்டபிள் ஒரு முக்கியமான விடயம் பற்றி விசாரிக்க வேண்டும். நாங்கள் பொலிஸார் எனக் கூறி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
அந்த யுவதி அழகானவள் என்று சொல்ல முடியாது. கறுத்த மெலிந்த தேகமுடையவள். எப்படியோ அவளையாவது கண்டுபிடிக்க முடிந்தது என்ற மகிழ்ச்சியில் பொலிஸார் ஆறுதல் அடைந்தது டன், அவளிடம் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
‘சேர் நான் அவரை பார்த்திருக்கிறேன். ஆனால் அவர் என்னைப் பார்த்ததில்லை. நான் வேலை செய்த தொழிற்சாலையில் இதற்கு முன்னர் வேலை செய்த யுவதி ஒருத்திதான் எனது தொலைபேசி இலக்கத்தை அவருக்கு கொடுத்துள்ளாள். அவர் எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவார். கோல் பண்ணுவார். ஆனால் இதுவரை நேரில் கண்டு பேசியதில்லை. ‘
இப்படியாக அந்த யுவதி பொலிஸாரிடம் கூறினாள்.
‘நாங்கள் அந்த நபரை ஒரு விசாரணைக்காக தேடுகின்றோம். எனவே எங்களுக்கு சற்று உதவுங்கள். அவருக்கு எஸ்.எம்.எஸ். பண்ணியாவது, கோல் பண்ணியாவது அவரை கொழும்புக்கு வரவழைக்க வேண்டும்’ என பொலிஸார் கூறியுள்ளனர்.
அதனடிப்படையில் அந்த யுவதியும் குறித்த சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நாளை உங்களை சந்திக்க முடியுமா? எனக் கேட்டுள்ளார். உடனே அந்த நபர் எங்கே எப்போது சந்திப்பது என கேட்க கொழும்பில் சந்திக்கலாம் என கூறியுள்ளார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த அந்த நபர் அடுத்த நாள் காலை கொழும்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு வருவதாக கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார்.
அடுத்த நாள் காலையில் பொலிஸார் அந்த யுவதியுடன் கொழும்பு பஸ் தரிப்பு நிலையத்திற்கு சென்றனர். அந்த யுவதி பெரிய அழகில்லாததால் அந்த நபர் அவ ளைக் கண்டதும் அப்படியே திரும்பி விடு வார் என்ற காரணத்தால் பெண் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரை பஸ் தரிப்பு நிலையத்தில் கையடக்க தொலைபேசியுடன் நிற்கச் செய்து பொலிஸார் அந்த யுவதியுடன் தொலைவில் நின்றனர்.
சந்தேக நபர் கொழும்பு வந்தவுடன் அந்த யுவதிக்கு அழைப்பை ஏற்படுத்தி னார். அப்பொழுது அதற்கு பதிலளித்தவர் பெண் பொலிஸ் கான்ஸ்டபில். ஆனால் அவரே தனது காதலியுடன் கதைப்பதைப் போலவே அன்பாக நடித்துள்ளார். சரி உங்களை நான் இதற்கு முன்னர் கண்டதில்லை.
நீங்கள் என்ன நிற ஆடை அணிந்திருக்கிறீர்கள் என சந்தேக நபர் கேட்க காதலியை போல நடித்த பெண் கான்ஸ்டபில் அவர் அணிந்திருந்த ஆடை பற்றிய தகவலைக் கூறியுள்ளார்.
எனவே பஸ்ஸிலிருந்து இறங்கிய அந்த நபர் தொலைபேசியில் பேசியவாறே பெண் பொலிஸ் கான்ஸ்டபில் அருகே வந்துள்ளார். “எப்படி இருக்கீங்க வாங்க வேறு எங்காவது போய் பேசலாம்” என பெண் பொலிஸ் கான்ஸ்டபில் கூறியுள்ளார்.
அவர் காதலிதான் என்ற எண்ணத்துடனும் மகிழ்ச்சியுடனும் பஸ்தரிப்பிடத்திலிருந்து சுமார் 10 மீற்றர் தூரம் வரை சென்றனர். உடனே சுற்றியிருந்த பொலிஸார் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
“சேர் ஏன் என்னை கைது செய்கிறீர் கள்?” என அந்த நபர் கேட்ட போது ” உனக்கு தெரியாது என்ன? என்று முழு கதையையும் பொலிஸார் கூறிய போது அந்த நபர் அதிர்ந்து போயுள்ளார். அத்தோடு குற்றத்தையும் ஒத்துக் கொண்டுள் ளார்.
எனவே பொலிஸார் மற்றைய சந்தேக நபர் எங்கே? என கேட்க அவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளதாக கூறியுள்ளார். அத்தோடு அவர் ஏற்கனவே கொலைக் குற்றத்திற்காக ஒன்றரை வருடம் சிறையில் இருந்து பிணையில் வந்தவர் எனவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.
சரி அதுவெல்லாம் பரவாயில்லை அவனுக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி எங்காவது வரச் சொல்ல என பொலிஸார் கூறினர். அதற்கிணங்க அந்த இரண்டாவது சந்தேக நபரும் பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ளார். இருவரிடமும் மேற்கொண்ட விசார ணைகளின் அடிப்படையில் அவர்கள் புஸ்பாவை கொலை செய்தது நிரூபணமா கியுள்ளது.
அன்றைய தினம் புஸ்பாவின் வீட்டிற்கு சென்றதாகவும் அப்போது அவரிடம் 1000 ரூபா பணம் கேட்டதாகவும் அதற்கு அவர் கடுமையாக தம்மை பேசியதால் அருகிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து தலையில் தாக்கி பின்னர் கத்தியால் கழு த்து பகுதியை குத்தியதாகவும் சந்தேக நபர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
பின்னர் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கழற்றி விட்டு காதணியை கழட்ட முயன்றதாகவும் கழட்ட முடியால் போகவே இரு காதுகளையும் கத்தியால் வெட்டி பொலித்தீன் பையில் சுற்றி காற்சட்டையில் போட்டு கொண்டு கொழும்புக்கு சென்றதாகவும் மற்றைய சந்தேக நபர் கூறியுள்ளார்.
கொழும்பில் லொஜ் ஒன்றில் இருவரும் தங்கியதாகவும் அங்கு காதணிகளை கழட்டி விட்டு இரு துண்டு காதுகளையும் மலசலகூட குழியில் போட்டதாகவும் கூறியுள்ளனர். அதன் பின்னர் பொலிஸார் குறித்த லொஜ் இல் மறைத்து வைக்கப் பட்ட கத்தியையும் மீட்டுள்ளனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டு சந்தேக நபர்கள் இருவரும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம் பவத்தால் அப்பாவி பெண்ணொருவர் பலியானதும் அவசர முடிவால் இருவர் சிறைக்குச் சென்றதுமே மிச்சம். எந்த வொரு குற்றத்தையும் செய்துவிட்டு நிரந்த ரமாக தப்பிக்க முடியாது என்பதை இந்த சம்பவமும் எடுத்துக் காட்டியுள்ளது.
எம்.நேசமணி