இந்துக்கள் நேற்றையதினம் கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாடிய வேளை, வடக்கு, கிழக்கில் கார்த்திகைத் தீபத்திருநாள் கொண்டாடப்பட்டபோது அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதனை குழப்பும் வகையில் செயற்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம்
நேற்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் நேற்று மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.
அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.
எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.
தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்த நிலையில் அதனையும் மீறி தீபம் ஏற்றிய மாணவன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், திருக்கார்திகைக்காக யாழ். பல்கலைக்கழக வாயியில் தீபமேற்றிய சமயத்தில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மாணவன் எம்.தர்ஷிகனை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஈடுபட்டார்.
மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்ட துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, மாணவனை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் செல்லும் வாயில்கள் மூடப்பட்டதால் பரமேஸ்வரன் ஆலயத்தில் தீபம் ஏற்ற முடியாத நிலையில் மாணவர்கள் இவ்வாறு பண்பாட்டு வாயிலின் வெளியே தீபங்களை ஏற்ற முற்பட்டனர்.
இந்நிலையில் 7.45 மணியளவில் தீபம் ஏற்றிய விஞ்ஞான பீட மாணவன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், வி.மணிவண்ணன் இருவரும் மாணவனை விடுவிக்க பொறுப்பதிகாரியுடன் பேச்சு நடத்தினர்.
மாணவனிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் பொலிஸார் அவரை விடுவித்தனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையில்,
மாணவன் கைது விடயம் தொடர்பில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். இந்துக்களின் நிகழ்வை நடத்த முடியாது தடுத்ததுடன், மாணவனை கைது செய்தமை தவறு என்று சுட்டிகாட்டினேன்.
மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று இந்துக்களின் கார்த்திகை தீபத்திருநாள் என்று தான் அறிந்திருக்கவில்லை என்றும் மாணவனை உடனடியாக விடுவிப்பதாகவும் உறுதியளித்தார்” என்றார்.
கிளிநொச்சி
கிளிநொச்சியில் கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர் இருவர் மிரட்டப்பட்டு விளக்குகளும் தூக்கிவீச்சப்பட்டதாக சம்மந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வழமைபோல கார்த்திகை விளக்கீட்டிற்காக விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. வீட்டு முற்றத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில் வீட்டு வளவின் உள்ளே வந்தவர்கள் விளக்குகளை தூக்கிவீசியுள்ளனர்.
அதன் பின்னர் வயோதிபரை துப்பாக்கியால் தாக்க வந்தததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரந்தன் இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் இராணுவ சீருடையில் இவ்வாறு அச்சுறுத்தியதுன் தாக்க முற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நேற்று பரந்தன் பகுதியில் குறித்த இராணுவத்தினரே ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதுடன் ஒளிப்பதிவு செய்த காட்சிகளை அழித்தமையும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் இந்து மக்களால் கொண்டாப்படும் கார்த்திகை விளக்கீடு மக்களின் வீடுகள் ஆலயங்களில் கொண்டப்பட்டுள்ளது.
இருப்பினும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்களின் வீடுகளுக்கு சென்ற படையினர் பொலிஸார் வீடுகளில் முன்னால் நிறுத்தப்பட்ட வாழைக்குற்றிகளை புடுங்கி எறிந்துள்ளதுடன் விளக்கீட்டு பந்தங்களையும் அகற்றி அட்டகாசம் புரிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
விளக்கீடு கொழுத்தக்கூட தங்களுக்கு சுதந்திரம் இல்லைய எனமக்கள் முள்ளிவாய்க்கால் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
மாவீரர் நாள் அன்றும் பீல்பைக்மோட்டார்சைக்கில்களில் துப்பாக்கி ஏந்திய படையினர் வீடுகளின் முன்னால் ஒழுங்கைகள் தோறும் பாரிய சத்தத்துடன் சுத்தி சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் முள்ளிவாய்க்கால் மக்களை அச்சுறுத்தும் விதமாகவே படையினர் பொலிசார் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை உடையார் கட்டு தெற்கு மற்றும் குரவில் பகுதியில் படையினரின் முகாம்களுக்கு அருகில் உள்ள மக்கள் கார்த்திகை விளக்கீட்டினை செய்யமுடியாத நிலையில் படையினர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.