அகடம் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானர் பிரியங்கா. பாண்டிச்சேரியை சேர்ந்த நடுத்தர குடும்பத்திலிருந்து சினிமா ஆசையில் நடிக்க வந்தவர். 18 வயதுகூட நிரம்பாதவர். அகடத்துக்கு பிறகு கங்காரு படத்திலும், சரணாலயம் என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.
தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று கோடைமழை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சங்கரன் கோவிலில் நடந்தபோது பிரியங்காவின் அண்ணனாக நடிக்கும் இயக்குனர் களஞ்சியம் கன்னத்தில் அடிக்கும் சீனில், களஞ்சியம் நிஜமாகவே அடித்துவிட அதனால் காதில் பெரும் பிரச்னை ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டுவிட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார்.
களஞ்சியம் பிரியங்காவின் கன்னத்தில் அறைந்தது யதேச்சயாக நடந்தது. அது ஒரு விபத்து என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது. அது திட்டமிட்டு நடந்த ஒரு சதி என்ற தகவலும் ஒரு பக்கம் வெளியானது.
அதனை சினிவதந்தி பகுதியிலும் வெளியிட்டிருந்தோம். இப்போது அது திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் என்பதை ப்ரியங்கா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பிரியங்கா கூறியிருப்பதாவது: கடந்த 17ந் தேதி சங்கரன்கோவிலில் ஷூட்டிங் இருக்குன்னு 16ந் தேதி இரவுதான் சொன்னாங்க. அதுவும் பஸ்சில் வரச்சொன்னாங்க. கார் கேட்டேன். நீங்களே எடுத்துட்டு வந்துடுங்க ஆனா நாங்க டோல்கேட் காசும், டீசல் பணமும் தர்றோம்னு சொன்னாங்க.
அவசர அவசரமாக கிளம்பியும் காலை 8 மணிக்குத்தான் போய்ச் சேர முடிந்தது. அவசரமாக கிளம்பி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனேன். அதற்குள் சூட்டிங் ஆரம்பிச்சிருந்தாங்க.
நான் லேட்டா போனதுக்கு காரணம் அவர்கள்தான் இருந்தும், இயக்குனர் கதிரவன் என்னை எல்லோர் முன்னாலும் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அதையும் பொறுத்துக் கொண்டு நடித்தேன்.
அங்க போனபிறகுதான் எனக்கு அண்ணனாக களஞ்சியம் நடிக்கிறதா சொன்னாங்க. என்ன ஷாட் எடுக்க போறோம்னு எதுவும் எங்கிட்ட சொல்லல. என்கிட்ட சொன்ன கதையில அண்ணன் கன்னத்துல அடிக்கிற சீனெல்லாம் கிடையாது.
சீன் ஒத்திகையப்போ திடீர்னு களஞ்சியம் என் கன்னத்துல அடித்தார். கன்னத்துல அடிக்கிறதா என்கிட்ட யாருமே சொல்லையேன்னு கேட்டேன். சீன் யதார்த்தமா இருக்கணுங்றதுக்காக முன்கூட்டி சொல்வில்லை என்றார்கள்.
அப்புறம் ஷாட் போனப்போ பலமாக கன்னத்துல அடிச்சார். அதுக்கு பிறகு என்ன நடந்ததுன்னே தெரியல. நான் ஆஸ்பத்திரியில இருந்தேன். காதுல டொய்ங்னு வர்ற சத்தம் தவிர வேறெதும் கேட்கவில்லை.
மருத்துவமனையிலகூட யாரும் வந்து பார்க்கவில்லை. சென்னை திரும்புறதுக்கும் ஏற்பாடு பண்ணல. கேட்டதுக்கு 108 ஆம்புலன்சுல போங்கன்னு சொன்னாங்க.
கார்கேட்ட ஒரே காரணத்துக்காக அதை மனசுல வச்சிக்கிட்டு என்னை அடிச்சிட்டாங்க. நான் என்னோட கேரியருக்கா இதை இப்படியே விட்டுரலாமுன்னுதான் நினைச்சேன். ஆனா தவறான செய்திகளை பரப்பி என் கேரியரையே கெடுக்க பார்க்குறப்போ இதை சொல்லாம இருக்க முடியவில்லை என்கிறார் பிரியங்கா.
இதுகுறித்து களஞ்சியம் கூறும்போது: என் தாயின் மீது சத்தியமாக வேணும்னு அடிக்கவே இல்லை. நான் ஒரு இயக்குனர் அப்படி செய்வேனா, அது எமோல்சனான சீன்.
லேசாத்தான் அடிச்சேன். நான் அடிக்கும்போது அந்த பொண்ணு கன்னத்தை திருப்பிக் கொள்ள வேண்டும். திருப்பிக் கொள்ளவில்லை அவ்ளோதான் என்கிறார்.