நடிகர் ரஜினிகாந்த் காவி அரசியலை முன்னெடுத்தால், அவருடன் கூட்டணி அமைக்க மாட்டேன்” என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வருடாந்திர இந்தியர்கள் மாநாட்டில் உரையாற்றிய அவர், இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:
தன்னிறைவு பெற்ற, சுயச் சார்புடைய கிராமம் உருவாக வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார். அவரது சிந்தனைப்படி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், ஒரு கிராமத்தை தத்தடுத்து, அவற்றை உலகின் மிகச் சிறந்த கிராமமாக வளர்த்தெடுப்பேன்.
முதலில் ஒரே ஒரு கிராமத்தில் தொடங்கி, பின்னர் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு கிராமம் தத்தெடுப்பேன்.
வரும் 21-ஆம் úதி முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறேன். மக்களின் முன்னேற்றத்துக்காக, உலகமெங்கும் வாழும் தமிழச் சமூகம், எனக்குப் புதிய யோசனைகளை வழங்க வேண்டும்.
தமிழகத்தின் அரசியல் நிலைமை எதுவும் சரியாக இல்லை. இந்த நிலைமையை மாற்ற வேண்டும்; சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதே நான் அரசியல் கட்சி தொடங்கியற்கு உண்மையான நோக்கமாகும்.
புதிய அரசியல் கட்சி மூலமாக, மக்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்; அரசியல் தலைவர்களுடன் அல்ல என்று கமல்ஹாசன் கூறினார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல் அளித்த பதில்:
எனக்கும், ரஜினிக்கும் இடையே தேர்தல் கொள்கைகள், சிந்தனைகள் ஆகியவை ஒரே மாதிரியாக இருந்தால், தேர்தல் கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.
ஆனால், அவரோ தனது பாதை ஆன்மிக அரசியல் என்று கூறுகிறார். அது, ஆன்மிக அரசியலா?, காவி அரசியலா? (பாஜக ஆதரவு நிலைப்பாடு) என்று தெரியவில்லை. அவர் காவி அரசியலை முன்னெடுக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.
ஒருவேளை, அது, காவி அரசியலாக இருந்தால், ரஜினியுடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பில்லை. எனினும், அவருடன் கூட்டணி அமைப்பதற்குத் தயாராகவே இருக்கிறேன்.
ஒரு தேர்தலில் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் அடுத்த தேர்தல் வரை காத்திருப்பேன். ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைக்க மாட்டேன். அதுவரை எதிர்க்கட்சியாகவே செயல்படுவேன் என்றார் அவர்.