கர்நாடக மாநிலம் கலபுரகியில் கிரகண நேரத்தில் சிறப்பு குழந்தைகளை குணப்படுத்துவதற்காக பெற்றோர் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
வானில் இன்று அரிய நிகழ்வாக நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஏற்பட்டது. காலை 8.07 மணி முதல் 11.16 மணி வரை இந்த நிகழ்வு நீடித்தது. இந்த கிரகணத்தை தொடர்புபடுத்தி பல்வேறு சாஸ்திர சம்பிரதாயங்கள் மற்றும் நம்பிக்கை சார்ந்த வழிபாடுகளை பொதுமக்கள் மேற்கொண்டனர்.
சூரிய கிரகணத்தின்போது பூமியில் ஒளி படாததால் ஆண்களுக்கு ஆபத்து என்றும், இதற்கு பரிகாரமாக வீட்டில் எத்தனை ஆண்கள் இருக்கிறார்களோ அதற்கு ஏற்ப வீட்டின் முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்றும் வதந்தி பரவியது. அதனை நம்பி பல்வேறு பகுதிகளில் பெண்கள் தங்கள் வீடுகளின் முன்பு விளக்கேற்றி வழிபட்டதை காண முடிந்தது.
இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில், கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது.
மாற்றுத்திறன் கொண்ட 3 குழந்தைகளை, கழுத்து மட்டும் வெளியில் தெரியும் வகையில் மண் மற்றும் ஆட்டு எருவில் புதைத்துள்ளனர். கிரகண நேரத்தில் இவ்வாறு செய்வதால் குழந்தைகளின் குறைபாடு நீங்கப்பெற்று குணமடைவார்கள் என்ற நம்பிக்கையில், அவர்களின் பெற்றோர் இவ்வாறு செய்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள், அப்பகுதிக்குச் சென்று குழந்தைகளை மீட்டுள்ளனர். அத்துடன், குழந்தைகளின் உடல்நிலை குணமடைவதற்கு இதுபோன்ற மூடநம்பிக்கை தீர்வு அல்ல என்றும் பெற்றோர்களிடம் விளக்கினர்.