சென்னை: சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியான திருப்போரூரில் கந்தசுவாமி கோயில் உள்ளது. ஆதரவற்றோருக்கு அடைக்கலம் தரும் கடவுளாக நினைத்து ஏராளமானோர் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
மகன்களால் கைவிடப்பட்ட பெற்றோர், மருமகள் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறிய மாமியார், குடும்பத்தை வெறுத்து வந்த பெரியவர் என இங்கு கோயில் வாசலில் அமர்ந்திருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை உண்டு.
திருப்போரூர் பகுதியிலேயே சொந்த வீடு, மனை இருந்தும் அதை விற்று விட்டு பிச்சை எடுக்கும் பெண், மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் வாடகை பணம் வரும் அளவிற்கு வீடு, 2 மகன்கள், மருமகள்கள், பேரன் பேத்திகள் இருந்தும் வீட்டை விட்டு வெளியேறி பிச்சை எடுக்கும் உள்ளூர் பெண்மணி என பல சோக கதைகளுடன் இக்கோயிலில் தவமிருக்கின்றனர்.
இப்படி பலருடன் ஒருவராக அமர்ந்திருந்த ஒரு பெரியவரை, ஒரு குடும்பமே சூழ்ந்து கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுததை பார்த்ததும், அங்கு கடை வைத்திருப்போர் என்னவென்று விசாரித்தனர்.
அப்போது கடந்த 3 மாதங்களாக பிச்சை எடுத்து கொண்டிருந்தவர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் – செஞ்சி சாலையில் உள்ள தீவனூர் கிராமத்தை சேர்ந்த கோடீஸ்வரர் நடராஜன் (60) என்பதும், பல நூறு ஏக்கர் தோட்டம், 4 வீடுகள் என வசதியுடன் வாழ்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
குடும்ப உறுப்பினர்கள் உரிய மரியாதையுடன் நடத்தாததால், வீட்டை விட்டு வெளியேறிய அவர், திருப்போரூர் முருகன் கோயில் வாசலில் பிச்சை எடுத்து கிடைத்ததை உண்டு வாழ்ந்ததும் தெரியவந்தது.
அவருடைய 3 மகன்களும் அவரை தேடி பல இடங்களுக்கு சென்றுள்ளனர். வெளியே தெரிந்தால் அசிங்கம் என்பதால் போலீசிலும் கூட புகார் செய்யவில்லை.
கணவர் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் திருப்போரூர் கோயிலில் பூஜைகள் செய்து விட்டு வெளியே ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது கோயில் வாசலில் வரிசையாக அமர்ந்து பிச்சை எடுத்து கொண்டிருந்தவர்களில் ஒருவரை பார்த்ததும் அவர்களுக்கு பொறி தட்டியது.
அருகில் சென்ற பார்த்ததும் அது தங்களது தந்தை என அறிந்து அவரை கட்டிப்பிடித்து 3 மகன்களும் அவரிடம் மன்னிப்பு கேட்டு கதறினர். காரில் உட்கார்ந்திருந்த அவரது மனைவியும், இதை அறிந்து ஓடி வந்து கணவரின் காலில் விழுந்தார்.
இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள், பெரியவரிடம் பேசி மகன்கள் மற்றும் மனைவியுடன் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அவரது மகன்களிடமும் பெரியவரின் மனம் கோணாமல் கவனிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து அவரின் மகன்கள் அருகில் உள்ள சலூன் ஒன்றில் அவரை அழைத்து சென்று தாடி, மீசையை எடுத்து குளத்தில் குளிப்பாட்டி மீண்டும் கோயிலுக்கு அழைத்து சென்று வழிபட்டனர். பின்னர் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.