வடமாகாண கல்வியமைச்சு கவனிக்குமா? குண்டும் குழியுமாக என்ற மரபுச்சொற்றொடரைக் கேட்டவுடன் பொதுவாக வீதிதான் உங்களுக்கு ஞாபகத் திற்கு வரும். ஏனெனில் வீதிகளில்தான் குண்டும் குழியும் காணப்படும். ஆனால் வகுப்பறையொன்றிற்குள் இவ்வவல நிலை நிலவுகின்றது என்றால் நம்புவீர் களா?
நம்பித்தான் ஆகவேண்டும். இலங்கைத்தமிழர் ஆசிரியர் உயர்மட்டக்குழுவொன்று பொதுச்செயலாளர் சரா. புவனேஸ்வரனின் வழிகாட்டலில் கடந்தவாரம் அங்கு விஜயம் செய்தது.
யுத்தத்தின் பின்னரும் இந்நிலையா? என்று வேதனையுடன் கேள்வியெழுப்பவேண்டியுள்ளது. குண்டும் குழியுமாகவுள்ள வகுப்பறையொன்றை நேரடியாகப் பார்க்கநேர்ந்தது. எனவே அத்தடங்கள் பதிவுக்காக அதனை கமராவுக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ளது அது வேறெங்குமல்ல.
வடமாகாணத்திலுளள கிளிநொச்சி வலயத்தின் கண்டாவளைக்கோட்டத்திலுள்ள 1சி பாடசாலையான பரந்தன் இந்து மகா வித்தியாலயத்திலேயே இவ்அவல நிலை நிலவுகிறது.
அங்கு க.பொ.த.உயர்தரம் கலை, வர்த்தகப் பிரிவு வரை சுமார் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் போதுமான வகுப்பறைக்கட்டடங்கள் இல்லை. ஆதலால் மாணவர்கள் ஆபத்தான வசதிகுறைந்த கொட்டிலில் இருந்து படிக்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது.
எந்நேரமும் முட்டு விழலாம். அப்படி முட்டு கழன்று கூரை வீழ்ந்தால் பாதிக்கப்படப்போவது ஆசிரியரும் அப்பாவி மாணவருமே. இதில் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கமுடியாது.
தனிக்களியால் மேடையொன்று போடப்பட்டுள்ளது. அதில் புழுதி எழும்புகிறது. அழுக்கும் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் சீருடை, பாதணியின் பாவனையை சிந்தித்துப் பாருங்கள்.
போதுமான தளபாடங்களுமில்லை, 1சிபாடசாலையான இங்கு மேடையுடன் கூடிய மண்டபமோ பிரிக்கப்பட்ட வகுப்பறைகளோ இல்லை. வன்னி மாணவர்கள் இன்னமும் வசதியீனங்களுக்கு மத்தியில் படிக்கவேண்டிய கட்டாயமுள்ளது என்பதை இது உணர்த்தி நிற்கின்றது.
கல்வியியலாளர்களின் கருத்துப்படி பாடசாலைகள் பிள்ளை நேயமாக இருக்க வேண்டும். வகுப்பறைகள் மகிழ்ச்சியாக கற்பதற்கு உவப்பானதாக இருக்க வேண்டும். உண்மைதான். இதுவும் ஒரு பிள்ளை நேய பாடசாலைதான்.
ஆனால் இங்கு அவை வெறும் ஏட்டளவில் அல்லது பேச்சளவில் தானுள்ளது. வன்னியில் தொடரும் கல்விப்புல குறை பாடுகளைக் களைவது யார்? சம்பந்தப் பட் டவர்கள் கவனமெடுப்பார்களா?
இவ்வகையான கல்விசார் அவசியமான சமர்ப்பணங்கள் தொடரும்.
– வி.ரி.சகாதேவராஜா