இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான சர்வதேச இருபது 20 தொடரின் 3ஆவது போட்டி லாகூரில் நேற்றிரவு நடைபெற்றது. இப்போட்டிக்காக, இலங்கை அணியினர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கடந்த சனிக்கிழமை பின்னிரவு லாகூரை சென்றடைந்தனர்.
எட்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை அணியினர் பயணம் செய்த பஸ் மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் டெஸ்ட் விளையாடும் பிரதான நாடொன்றின் அணி அங்கு பயணித்தமை இதுவே முதல்தடவையாகும்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் லாகூருக்குச் சென்ற இலங்கை அணியினருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
துபாயிலிருந்து சென்று லாகூர் அல்லாமா இக்பால் விமான நிலையத்தை சென்றடைந்த இலங்கை அணியினர் ஹோட்டலுக்கு குண்டு துளைக்காத பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இலங்கை அணியினர் பயணித்த சுமார் 14 கிலோமீற்றர் தூரமான வீதிகள் ஏறத்தாழ மூடப்பட்டிருந்ததுடன், பொலிஸ் கொமாண்டோ வாகனங்கள் சூழ இலங்கை அணியினர் பயணித்தனர்.
ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கு நிகரானதாக இலங்கை அணியினருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு இருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஹோட்டலிலிருந்து கடாபி சர்வதேச அரங்குக்கு இலங்கை அணியினரை அழைத்துச் செல்வதற்காக பாகிஸ்தான் இராணுவம், பரா இராணுவத்தினர், பஞ்சாப் பொலிஸ் உட்பட பாதுகாப்புப் படையினர் பாரிய ஒத்திகையிலும் ஈடுபட்டிருந்தனர்.
இலங்கை அணியினரை வரவேற் கும் பதாகைகள் சிங்கள மொழியிலும் காணப்பட்டன.