பேச்சு கூட இன்னும் சரியாக வராத இந்த 2-வயதுக் குழந்தை தான் இந்தியாவின் மௌக்லி சிறுவன். 20-க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் இவனது நண்பர்கள்!
ஆங்கில எழுத்தாளர் மற்றும் கவிஞரான ருத்யார்ட் கிப்லிங் எழுதிய ‘தி ஜங்கிள் புக்’ கதையில் ஒரு மனித குழந்தை குரங்குகளைத் தனது குடும்பமாகவும், காட்டில் உள்ள மற்ற மிருகங்களை நண்பர்களாகவும் நினைத்து வளரும்.
அதே போல் இந்தக் குழந்தையும் தினமும் குரங்குகளுடன் விளையாடுவது, சாப்பிடுவது எனப் பொழுதை கழிக்கிறான். குரங்குகளும் இவனை தங்களில் ஒருவனாகவே ஏற்றுக் கொண்டுள்ளன.
சமர்த் பங்கரி என்பது அந்தக் குழந்தையின் பெயர், முதல் முதலாக சில இளைஞர்கள் இவன் இரண்டு குரங்குகளுடன் வயல் வெளியில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குரங்குகள் குழந்தையை தாக்கி விடுமோ என்று பயந்த அவர்கள், அங்கு நடந்ததைப் பார்த்து ஆச்சரியப் பட்டுள்ளனர்.
அந்த இரண்டு குரங்குகளும் மிகவும் சாந்தமாக குழந்தையின் அருகில் அமர்ந்து விளையாடி உள்ளன.
பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த சமர்த்தின் பெற்றோர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர்.
ஆனால் குரங்குகள் பொதுவாக மனிதர்களைப் பார்த்தால் சீறுவதைப் போல் எதுவும் பண்ணாமல் குழந்தையுடன் சாதாரணமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்து வியந்துள்ளனர்.
இந்தக் குரங்குகள் ஒரு நாள் விடாமல் வயலுக்கோ அல்லது இந்தக் குழந்தையின் வீட்டிற்கோ வந்து விளையாடும். ஒருவேளை இவன் தூங்கிக் கொண்டிருந்தால் எழுப்பி விளையாட அழைத்துச் செல்லும்.
குரங்குகளுடன் இவனுக்கு இருக்கும் இந்த உறவையும், அன்பையும் பார்த்து அந்தக் கிரமமே இவனை அதிசயமாகப் பார்க்கிறது.
பேச்சு கூட வராத இந்தக் குழந்தை குரங்குகளைப் போல் ஒலி எழுப்பி அவற்றுடன் பேசுகிறான். இது சமர்த்தை மிகவும் பிரபலமடையவும் செய்துள்ளது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.