மாதூவின் ஊழியன்.
யாழ்ப்பாணம் மரியாள் கோயில் பெரிய கோயில் என்றும் அழைக்கப்படுகின்றது. அப்பகுதியில் புலிகள் இயக்கத்தின் நடமாட்டம் இருந்தது.
இத் தகவல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினருக்கு எட்டியது. தேடுதல் நடத்த வானகம் ஒன்றில் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர்.
வாகனத்தில் சென்றவர்கள் கீழே இறங்கியபோது புலிகள் சுட்டனர். இரு பகுதியனரும் மோதிக்கொண்டனர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் தரப்பில் அப்துல்லா (இயக்கப் பெயர்) என்பவர் கொல்லப்பட்டார். இவர் யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்தவர். புலிகள் இயக்கத்திலும் ஒருவர் கொல்லப்பட்டார்.
இச் சம்பவத்தின் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் பெரிய கோவிலுக்குள் புகுந்து தேடினர்.
பெரிய கோயிலில் ஒரு இளைஞர் பியானோ வாசித்துக்கொண்டிருந்தார். தேவாலயப் பாடல் குழுவைச் சேர்ந்த அந்த இளைஞனின் பெயர் யூட் சர்க்கரியாஸ். அந்த இளைஞனை ஈ.பி.ஆர்.எல்.எஃப் பிடித்தது.
தான் பாடல் குழுவைச் சேர்ந்தவர் என்று மன்றாடினார். அவர்கள் நம்பவில்லை. வேனில் தூக்கிப்போட்டுக் கொண்டு சென்றனர்.
தங்கள் உறுப்பினர்களைச் சுட்ட புலிகள் பெரிய கோவில் பக்கமாகத்தான் ஓடினார்கள். அதனால் கோவிலில் உள்ளவர்களுக்குப் புலிகளுடன் தொடர்பு உள்ளதெனச் சந்தேகித்தனர்.
மறுநாள் யூட் சர்க்கரியாஸின் உயிரற்ற உடல் சூட்டுக் காயங்களுடன் வீதியில் கிடந்தது. கடுமையான சித்திரவதை செய்யப்பட்ட காயங்களும் உடலில் கிடந்தன.
மாதாவின் மகிமைகளைப் பாடிவந்த ஒரு அப்பாவி இளைஞன் அநாதையாக விதியில் கிடந்தான்.
இக்கொலைச் சம்பவத்தை அப்பகுதி மக்களும் பெரியவர்களும் கடுமையாக கண்டித்தனர். யூட் சர்க்கரியாஸின் மரணச் சடங்கில் அச்சுறுத்தலையும் மீறிப் பெருமளவாக மக்கள் கலந்துகொண்டனர்.
கொலைக்கு கொலை.
யார்ப்பாணம் பாசையூரில் சுவாம்பிள்ளை குயின்ரன் என்பவரது மரணமும், அதன் பின்னர் நடந்த சம்பவங்களும் தொடர் சோகமானவை.
குயின்ரனிடம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் அவரது மினி வேனை வாங்கிச் செல்வார்கள். அவர்களுக்கு வேன் கொடுக்கக் கூடாது என்று புலிகளால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் பின்னரும் குயின்ரனிடம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் மினிவேனை வாங்கிச் சென்றனர். ஆயுதங்களுடன் வந்து கேட்கும்போது எப்படி மறுக்கமுடியும்?
கொடுத்தால் புலிகளால் பிரச்சினை. கொடுக்காவிட்டால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரால் பிரச்சினை. இரு தலைக்கொள்ளி எறும்பின் நிலைதான்.
இறுதியாக சுவாம்பிள்ளை குயின்ரன் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரொரு குடும்பஸ்தர்.
இதையறிந்த இந்தியப் படையினர் விரைந்து சென்றனர்.
குயின்ரனின் மரணச் சடங்குக்கான வேலையைச் செய்துகொண்டிருந்த குயின்ரனின் சகோதரன் அன்ரனையும், மேலும் நாலு பேரையும் பிடித்து உதைத்தனர்.
வந்த படையினருக்கு இந்திதான் தெரியும். அவர்கள் கைது செய்திருப்பது பலியானவரின் சகோதரனை எனச் சொல்லிப் புரியவைக்கவும் முடியவில்லை.
பிடித்த ஐந்துபேரையும் தமது முகாமுக்குக் கொண்டுசென்ற முறையும் கொடுமையானது.
முகாம்வரை முலங்காலில் நடந்துவருமாறு கூறிவிட்டனர். குயின்ரனின் சகோதரன் அன்ரனுக்கு சிப்பாய் ஒருவன் அடித்த அடியில் மூக்கால் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது.
அதனைப்பார்த்துப் பரிதாபப்பட்ட ஒருவர். இவர் பலியானவரின் தம்பியென ஆங்கிலத்தில் கூறினார். அவர் சொன்னது சிப்பாய்க்குப் புரியவில்லை. தன்னை ஆங்கிலத்தில் திட்டுவதாக நினைத்து ஆங்கில விளக்கம் சொன்னவருக்கு விழுந்தது அடி.
பின்னர் மேஜர் ஒருவர் வந்தபின்னர்தான் குயின்ரனின் சகோதரன் விடுதலைசெய்யப்பட்டார்.
மரண வீட்டில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் சில்வெஸ்டர் இவர் முன்பு புலிகள் இயக்க ஆதரவாளராக இருந்தவர். சில்வெஸ்டரை விசாரித்துவிட்டு விடுதலைசெய்யதனர் இந்தியப் படையினர்.
இதனையறிந்து சில்வெஸ்டரைதட தேடிச் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர். வீட்டில் சில்வெஸ்டர் இல்லையென்றதும் வீட்டிலிருந்த தளபாடங்கள், வீட்டுப்பொருட்களை அடித்து நொருக்குவிட்டுச் சென்றனர்.
பயந்துபோன சில்வெஸ்டர் கொழும்புக்குத் தப்பியோடினார். சில்வெஸ்டர் தம்மிடமிருந்து தப்பிச்சென்ற ஆத்திரத்தில் அவரது சகோதரரான எஸ். பீரியஸ் என்பவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் கடத்திச் சென்றனர்.
எஸ். பீரியஸ் கூட்டணி ஆதரவாளர். யாழ் மாநகர சபையின் உறுப்பினராகவும் இருந்தவர்.
எஸ்.பீரியசை விடுதலைசெய்யுமாறு, உறவினர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரிடம் மன்றாடினார்கள்.
எஸ். பீரியஸை தமது விசாரணைக் கூடத்தில் வைத்து சித்திரவதை செய்தனர். சில்வெஸ்டரைப் பற்றியும் விசாரித்தனர்.
‘எனக்கு ஒன்றும் தெரியாது, என்னைக் கொன்றுவிடாதீர்கள். ஆறு பிள்ளைகளும் அநாதையாகிவிடுவார்கள்’ எனக் காலில் விழுந்து மன்றாடினார் எஸ்.பீரியஸ்.
அவர்கள் இரக்கம் காட்டவில்லை. சுட்டுக்கொன்று அவரது உடலைக் கோண்டாவிலில் வைத்து எரித்தனர். எரிந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க மாகாண சபை உறுப்பினராக இருந்த பாசையூரைச் சேர்ந்த லோகன் (இயக்கப் பெயர் யசீர்) இக் கொலைக்கான சூத்திரதாரியாக இருந்தார்.
ஊருக்குள் தனது சொந்த விரோதங்களைத் தீர்த்துக்கொள்ள இயக்கப் பெயரைப் பயன்படுத்தி அத்துமீறல்களில் ஈடுபட்டவன் லோகன். இதனால் இயக்கத்துக்குள் பல முறை தண்டிக்கப்பட்டார்.
பின்னர் இந்தியப் படையினர் காலத்தில் இயக்கத்தின் முக்கிய நபர்களுள் லோகனும் ஒருவர். இவரை மாகாண சபை உறுப்பினராகவும் பட்டியலில் சேர்த்துக்கொண்டார்.
இந்த லோகனின் தகவலை நம்பி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிடிக்காத ஆட்கள் பலர் பாசையூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரால் பாதிக்கப்பட்டனர்.
தற்போது லோகன் கனடாவில் இருக்கிறார். இயக்கம் வீழ்ச்சி கண்டவுடன் தப்பியோடிவிட்டார்.
அண்ணனைத் தேடித் தம்பியைக் கொல்வது, தம்பிக்காக அண்ணனைக் கொல்வது, உறுப்பினர்களைக் கொலைசெய்வது போன்ற காரியங்களில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
இயக்க மோதல்கள் தொடங்கிய பின்னர், புலிகள் இயக்கத்தினரால் ரெலோ இயக்க உறுப்பினர்கள் வீதியில் போட்டு எரிக்கப்பட்டனர்.
அக் கோரச் செயல்களையெல்லாம் தங்கள் மனித வேட்டைகளால் முறியடித்து முன்னணியில் நின்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர்.
புலிகள் இயக்க உறுப்பினர்களைவிட, புலிகள் இயக்க ஆதரவாளர்கள், புலிகள் இயக்க உறுப்பினர்களின் குடும்பங்கள், தவறுதலாக அடையாளம் காணப்பட்டுக் கொல்லப்பட்டோர்,
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க உறுப்பினர்களின் சொந்தப் பகை காரணமாகக் கொல்லப்பட்டோர் என மனித வேட்டையொன்றே கட்டவிழ்த்துவிடப்பட்டது.
5.10.1988 அன்று நல்லூரைச் சேர்ந்த, தர்மலிங்கம் துரையம்மா (வயது 43) என்னும் பெண்மணியும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரால் கொல்லப்பட்டார்.
ஆசிரியரின் படுகொலை.
யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் ஊடாக நன்கு பிரபல்யமானவர் கிருஷ்ணானந்தம் மாஸ்டர்.
பொருளியல் கற்பிப்பதில் அதி சிறந்த ஆசிரியர் என்று மாணவர்களிடம் பெரும் மதிப்புப் பெற்றிருந்தவர் கிருஷ்ணானந்தம் மாஸ்டர்.
கிருஷ்ணானந்தம் புலிகளுக்கு ஆதரவானவர். இந்தியப் படை நடவடிக்கை தொடர்பாக அதிருப்தி கொண்டிருந்தவர்.
நல்லூரில் இருந்த கிருஷ்ணானந்தம் வீட்டுக்குச் சென்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர்.
மக்களிடம் மதிப்பும் பிரபலமும் பெற்றிருந்த காரணத்தினால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றே கருதியிருந்தார் கிருஷ்ணானந்தம்.
அவரது நினைப்பு பொய்யாக்கப்பட்டது. கிருஷ்ணானந்தனைச் சுட்டுக்கொன்றனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர்.
மக்களிடம் மதிப்புப் பெற்ற காரணத்தால், கிருஷ்ணானந்தம் கொலை செய்யப்பட்டதற்கு கதையொன்யென்றே கட்டிவிட்டனர்.
புலிகளின் விமான எதிர்ப்பு ஆயுதமான சாம் 07 இன் உதிரிப்பாகங்கள் அவரது வீட்டில் இருந்தது. அதனால்தான் அவர் கொல்லப்பட்டார் என கட்டப்பட்ட கதைகளை மக்கள் நம்பவில்லை.
கொல்லப்பட்டபோது கிருஷ்ணானந்தம் வயது 36. அவரது மரணத்தின் மூலம் நல்லவொரு கல்விமானைத் தமிழ் சமூகம் இழந்துநின்றது.
12.11.1988 அன்று கிருஷ்ணானந்தம் கொல்லப்பட்டார். சங்கானையைச் சேர்ந்த சுப்பிரமணியம் ரவீந்திரா (வயது 22) என்னும் விஞ்ஞான ஆசிரியரையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் சுட்டுக்கொன்றனர். 25.10.1988 இல் இக்கொலை நடந்தது.
தென்மராட்சிப் பிரஜைகள் குழுத்தலைவராக இருந்தவர், ராசசங்கரி. இவர் புலிகள் இயக்கத்தினருக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் சந்தேகப்பட்டது.
26.10.1988 அன்று ராசசங்கரி சாவகச்சேரியில் வைத்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வணபிதாவுக்கு நடந்த கதி.
மட்டக்களப்பு பிரஜைகள் குழுத் தலைவராக இருந்தவர் வணபிதா சந்திர பெர்ணான்டோ அடிகளார்.
இந்தியப் படையினர் மட்டக்களப்பில் நடத்திய அத்துமீறல்களை துணிந்து கண்டித்துக் குரல்கொடுத்தவர்.
அன்னை பூபதியின் உண்ணாவிரதத்தின் பின்னர், சந்திர பெர்ணான்டோ அடிகளார் மீது இந்தியப் படையினரும் கோபமாகவே இருந்தனர். ஆயினும் அவரது உயிருக்குத் தீங்கிழைக்க நினைத்தார்களில்லை.
இந்திய அதிகாரிகளை அடிக்கடி சந்தித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக வாதாடினார். இந்தியப் படையினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்கவும் பாடுபட்டார்.
இந்திய ருடே சஞ்கிகை 1988 ஜீன் மாதத்தில் அவரைப் பேட்டிகண்டது. அப் பேட்டியில் தனது கருத்தை அழுத்தம் திருத்தமகக் கூறியிருந்தார் வணபிதா சந்திர பெர்ணான்டோ அவர்கள்.
‘மக்களுள் பலர் இந்திய அமைதிப்படையைச் சகித்துக்கொண்டாலும், தங்கள் சொந்த மண்ணிலேயே இந்தியப் படைகளால் தாங்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவதைக் கண்டு அவர்களின் நெஞ்சம் வெந்துகொண்டிருக்கிறது.
உதவி நடவடிக்கைகள் பலவற்றால் அதனை மாற்ற இந்தியப் படை முயற்சிகளைச் செய்தாலும், மக்கள் அவர்கள்மீது காட்டும் அன்பு நிலையானது அல்ல.’
மட்டக்களப்பில் தங்கள் இயக்கத்தினருக்கு எதிரானவர்களை மட்டுமல்லாது, இந்தியப் படையினருக்கு எதிராவர்களையும் தீர்த்துக்கட்டுவதில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் முன்னின்றனர்.
வணபிதா சந்திர பெர்ணான்டோ மீதும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் கோபங்கொண்டனர்.
06.06.1988 அன்று மட்டக்களப்பில் கிறிஸ்தவ துறவிகள் தங்கியிருந்த மடாலயத்தினுள் புகுந்தனர் ;ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர்.
அங்கிருந்த ஆயர் உட்பட அனைவரையும் மடாலய முற்றத்தில் நிறுத்தி வைத்தனர்.
அத்தனைபேரும் செய்வதறியாது பார்த்துநிற்க, வணபிதா சந்திர பெர்ணான்டோவைச் சுட்டுக்கொன்றனர்.
நிழல்கொடுத்த மரம் சாய்ந்தது போல மண்ணில் விழுந்தார். அவர் மக்களுக்கா ஓயாது உழைத்த ஒரு மதகுருவின் குருதி மண்னை நனைத்தது. தூய வெள்ளை அங்கி செங்குருதியில் தோய்ந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் இக் கொலையில் சம்மந்தப்பட்டவர்களில் ஒருவர் ராசிக். சொந்தப் பெயர் கணேசமூர்த்தி.
இந்த ராசிக்கைத்தான் பின்னர் மத்திய குழு உறுப்பினராக அறிவித்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப். தற்போது ராசிக் மட்டக்களப்பில் இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டுவருகிறார்.
ராசிக் குழுவினர் தம்மோடு இல்லையென்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் கூறுகிறது. ஆனால் மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எஃப் பொறுப்பாளர்ருக்கு ராசிக் நிதியுதவி செய்வதாகத் தெரிகிறது. மறைமுகமாகச் சம்மந்தம் இருந்துவருகிறது.
கண்ணீர் அஞ்சலி.
வணபிதா சந்திர பெர்ணான்டோ அவர்கள் பிறந்தது 9.8.1941. மக்கள் சேவையில் மரணித்தது, 6.6.1988ல். 21.09.1972ல் வணபிதா சந்திர பெர்ணான்டோ அவர்கள் குருத்துவம் பெற்றுக்கொண்டார்.
கவிஞர் பாண்டியூரன் எழுதிய கவிதை ஒன்றை கல்முனைப் பிரஜைகள் குழுவினர் கண்ணீர் அஞ்சலிப் பிரசுரமாக வெளியிட்டிருந்தனர்.
வணபிதா சந்திர பெர்ணான்டோவின் கொலைக்குப் பொதுமக்களிடையில் பலத்த கண்டனங்கள் எழுந்தன.
இறுதிவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் அக்கொலைக்கு உரிமைகோரவில்லை.
இலங்கையிலிருந்து இந்தியப் படை வெளியேற வேண்டும் என தமிழகக் கட்சிகள் மட்டுமல்லாது, இந்தியத் தேசியக் கட்சிகளும் கோரத் தொடங்கின.
பாரதிய ஜனதாக் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இந்தியப் படை இலங்கையிலிருந்து வெளியேற வேண்டுமெனத் தீர்மானங்கள் இயற்றின.
இதனால் ராஜீவ் அரசுக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. வடக்கு-கிழக்கு மாகாண சபை முதல்வராக இருந்த வரதராஜப்பெருமாளை தமது கட்சியின் பிரச்சாரப் பீரங்கி போலவே பயன்படுத்தத் தொடங்கியது இந்திய அரசு.
வரதராஜப் பெருமாளின் பேட்டிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் தினமும் ஒளிபரப்பாகின. இலங்கையில் இந்தியப் படைநடவடிக்கை வெற்றியளித்து வருகின்றன எனக் காண்பிப்பதற்கு பெருமாளின் பேட்டிகளைப் பயன்படுத்தியது அந்திய அரசு.
இந்தியப் படை வெளியேறவே கூடாது என ஒற்றைக்காலில் நின்று பேட்டியளித்தார் பெருமாள். இந்தியப் படையை வெளியேறுமாறு கோரிய கலைஞர் கருணநிதியையும் மறைமுகமாகச் சாடினார் பெருமாள்.
ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாச பெரும் வெற்றியீட்டினார். இந்தியப் படை வெளியேறியே தீரவேண்டும் என பிரேமதாச அறிவித்துவிட்டார்.
தாம் வெளியேற நேர்ந்தாலும் வடக்கு-கிழக்கு மாகாணசபை தாக்குப்பிடிக்கக் கூடியதாக, ஒரு திட்டத்தை வகுத்துக்கொடுத்தனர் இந்தியப் படையினர்.
அதுதான் மக்கள் தொண்டர் படை. இந்தியப் படையினருக்கு நினைத்தது ஒன்று. நடந்தது வெறொன்று. மக்கள் தொண்டர் படைக்கு நடந்த ஆட்திரட்டல் மாகாணசபை ஆட்சியின் மீதே மக்களுக்கு வெறுப்பூட்டுவதாக மாறியது.
ஆட்திரட்டலுக்கான வேட்டைகள் சுவாரசியமானவை.
தொடரும்…….
அரசியல் தொடர் அற்புதன் எழுதுவது