குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியை சட்டபூர்வமற்ற முறையில் குவைத் நாட்டிற்கு அனுப்பிய உப முகவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறித்த யுவதியின் தாய் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) என்ற யுவதி கடந்த பெப்ரவரி மாதம் குவைத் நாட்டில் உயிரிழந்தார்.
இவரின் சடலம் கடந்த மாதம் 15 ஆம் திகதி மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டு சத்துருக்கொண்டானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குவைத் நாட்டிற்கு தனது மகளை சட்ட பூர்வமற்ற முறையில் அனுப்பிய காத்தான்குடியைச் சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக அவரது தாய் சோமசுந்தரம் கீதா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், காத்தான்குடியைச் சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் ஒருவர் சர்நீதியாவின் வீட்டிற்கு வந்து குவைத்தில் நல்ல வீட்டு வேலை இருப்பதாகவும் கூடிய சம்பளம் கிடைக்குமெனவும் பொய் கூறி அவரை குவைத் நாட்டிற்கு அனுப்பினார்.
இவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமலும், இவருக்கு வெளிநாடு செல்வதற்கான காப்புறுதி செலுத்தாமலும் குறித்த உப முகவர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினூடாக வீட்டு வேலைக்கான விஸா இல்லாமல் விஸிட் விஸா மூலம் சட்ட பூர்வமற்ற முறையில் குவைத் நாட்டிற்கு அனுப்பியிருந்தார்.
உயிரிழந்த எனது மகளின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சென்று இது தொடர்பாக அறிய முற்பட்ட போதுதான் சட்டபூர்வமற்ற முறையில் எந்த பதிவுகளுமின்றி எனது மகளை குவைத் நாட்டிற்கு அனுப்பியிருந்தமை தெரியவந்தது.
எனது மகளின் சடலத்துக்கு மேலே வைக்கப்பட்டவாறு மகளின் கடவுச்சீட்டு மாத்திரமே காணப்பட்டது.
மகள் உயரமான மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்ததாக பின்னர் கிடைக்கப்பெற்ற மரணத்திற்கான காரணம் எழுதப்பட்ட அறிக்கையொன்றின் மூலம் அறிந்து கொண்டேன்.
எனது மகள் குவைத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என நினைக்கின்றேன். எனது மகளின் மரணம் தொடர்பில் எந்தவொரு நஷ்டஈடும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
ஒரு ரூபா பணம் கூட குவைத்திலிருந்தோ அல்லது அனுப்பிய முகவரிடமிருந்தோ கிடைக்கவில்லை.
எனது மகளுக்கு நான்கு வயதில் ஒரு பிள்ளை உண்டு. எனது கணவரும் யுத்தத்தினால் இறந்து விட்டார். மிகவும் கஷ்டமான குடும்ப சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
குடும்ப கஷ்டத்தின் காரணமாகவும் அவரின் குழந்தையை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காகவுமே மகள் குவைத்துக்கு சென்றார்.
எனவே, எனது குடும்ப நிலையை கருத்திற்கொண்டு எனது மகளை குவைத் நாட்டிற்கு சட்ட பூர்வமற்ற முறையில் அனுப்பிய குறித்த காத்தான்குடியைச் சேர்ந்த உபமுகவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் இவ்வாறான முறையில் வறிய பெண்களை சட்ட பூர்வமற்ற வகையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.