தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி அல்ல. எனவே அரசியல் தீர்வு அல்லது 13 ஆவது திருத்தச் சட்ட விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கத்துக்கு நேரடியாக பேச்சுவார்த்தைகளை நடத்தவே முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி ரமபோஷா இலங்கைக்கு வருகை தந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குவந்தால்தான் தீர்வு சாத்தியம். கூட்டமைப்புடன் மட்டும் தனித்து பேச்சுவார்த்தை நடத்தினால் அது ஏனைய கட்சிகளுக்கு செய்கின்ற அநீதியாகிவிடும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:
தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பானது தமிழ் கூட்டமைப்பு…
மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. எனவே அரசியல் தீர்வு விவகாரம் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் தனித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அதற்கான சாத்தியங்களே இல்லை.
வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான கட்சியாக இருக்கலாம். ஆனால் இந்த நாட்டைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூற முடியாது.
இந்நிலையில் ஏக பிரதிநிதிகள் அல்லாத கூட்டமைப்புடன் அரசாங்கம் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தாது என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றோம். அந்தவகையில் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை ஆராய்வதற்கு கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கே வரவேண்டும்.
தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதி சிரில் ரமபோஷா அடுத்தவாரம் இலங்கை வருகின்றார். ஒரு நாடு நேர்மையான முறையில் உதவிக்கரம் நீட்டும்போது அதனை நாங்கள் வரவேற்போம். ஆனால் ரமபோஷாவின் நிகழ்ச்சி நிரல் குறித்து எனக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எவ்வாறெனினும் ரம போஷா இலங்கைக்கு வருகை தந்தாலும் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுககு வந்தால்தான் தீர்வு சாத்தியம் என்பதனை தெளிவாக குறிப்பிடுகின்றோம்.
கேள்வி: வடக்கில் கூட்டமைப்பு ஏக பிரதிநிதிகள் தானே?
பதில்: யாழ்ப்பாணத்தில் மட்டும் பிரதான கட்சியாக இருக்கலாம். ஆனால் முழு நாட்டினதும் தமிழ் மக்களை பொறுத்தமட்டில் கூட்டமைப்பு ஏக பிரதிநிதிகள் அல்ல.
கேள்வி: மூன்றாம் தர்புக்கு இடமில்லை என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. தற்போது தென்னாபிரிக்க தலையீடு?
பதில்: நேர்மையான முறையில் உதவி செய்ய முன்வருகின்றனர்.
கேள்வி: ஆளும் கட்சியில் உள்ள சில கட்சிகள் ரமபோஷாவின் விஜயத்தை எதிர்த்துள்ளனவே?
பதில்: ஒரு நாடு உதவிக் கரம் நீட்டும்போது அதனை நாங்கள் வரவேற்போம். எவ்வாறெனினும் ரமபோஷாவின் நிகழ்ச்சி நிரல் எனக்கு தெரியாது. வெளிவிவகார அமைச்சு என்ககு அறிவித்ததும் நான் கூறுகின்றேன். உதவிகளையும் ஆலோசனைகளையும் பெறுவோம். ஆனால் பிரதான விடயத்தில் நாங்களே தீர்மானம் எடுப்போம்.
கேள்வி: ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை விசாரணையை நடத்தப்போகின்றது. இலங்கை என்ன செய்யப்போகின்றது?
பதில்: நவநீதம் பிள்ளையின் அறிக்கையையும் பிரேரணையையும் நாங்கள் எதிர்த்துவிட்டோம். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அதனை பகிரங்கமாக கூறிவிட்டார். இந்நிலையில் அவ்வாறு எதிர்த்ததன் பின்னர் நடக்கின்ற எந்த விடயத்துககும் நாங்கள் பொறுப்பாக முடியாது.
கேள்வி: சாட்சி வழங்குகின்றவர்கள் பழிவாங்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட்சியம் வழங்குகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்: அதன் சட்டத்தன்மை குறித்து ஆராயவேண்டும்.
கேள்வி: கூட்டமைப்பு சாட்சியம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே?
பதில்: எமக்கும் அறியக் கிடைத்தது.
கேள்வி: விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்காததன் மூலம் புலிகள் செய்த அட்டூழியங்கள் மறைக்கப்படுகின்றதே?
பதில்: புலிகள் கள மட்டத்தில் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். அதுமட்டுமல்ல அவர்கள் செய்த அட்டூழியங்களை நாங்கள் உலகுக்கு காட்டிவிட்டோம். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை ஒன்று அவசியம் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும். தற்போது முடிந்த போன புலிகளின் கதையைக்கொண்டு வந்து எங்கு வரப்பார்க்கின்றனர் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
கேள்வி: கே.பி. அரசாங்கத்துடன் உள்ளதால் இவ்வாறு கூறுகின்றீர்களா?
பதில் 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டனர். முன்னாள் போராளிகள் பாராளுமன்றத்தில் உள்ளனர். யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள விடயங்கள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இந்நிலையில் விசாரணை செயற்பாடுகள் அவசியமில்லை என்றே கூறுகின்றோம்.
கேள்வி: 153 பேருடன் கப்பல் ஒன்று தத்தளித்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றதே? அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
பதில்: இது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது. கடற்படை தளபதியை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. தகவல் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும். எவ்வாறெனினும் அவர்களை பெற்றுக்கொள்ள கடற்படை தயாராக இருக்கின்றது.
கேள்வி பாகிஸ்தான் புகலிட கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பவேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதே?
பதில்: அது தொடர்பில் ஆராயப்படவேண்டும். பாகிஸ்தானுடன் உள்ள உடன்படிக்கை எவ்வாறானது என்று பார்க்கவேண்டும். அதன்படியே இவை இடம்பெறும்.
கேள்வி முஸ்லிம் தீவிரவாதிகள் இருப்பதாகவும் அரசாங்கம் கவனத்திற்கொள்ளாமல் இருப்பதாகவும் ஞானசார தேரர் குற்றம் சாட்டியுள்ளாரே?
பதில்: முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணை நடத்தப்படும்.
கேள்வி இந்த விவகாரம் குறித்து இந்தியாவும் முறைப்பாடு கூறியுள்ளதா?
பதில்: இராஜதந்திர மட்டத்தில் முன்வைக்கப்பட்டால் ஆராயப்படும்.
கேள்வி: பேருவளையில் நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் என்ன விடயங்கள் பேசப்பட்டன?
பதில்: அது ஒரு திறந்த கலந்துரையாடல் என்று கூறலாம். பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசப்பட்டன. கருத்துக்கள் பறிமாறப்பட்டன. அபிவிருத்திகள் அரசியல் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. அது ஒரு சிறந்த கலந்துரையாடல் என்று கூறலாம்.
கேள்வி பாராளுமன்றத்தின் காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதா?
பதில் ஒருபோதும் இல்லை.
கேள்வி: கச்சதீவை மீட்பது குறித்தும் மீண்டும் இந்தியாவில் பேசப்பட்டுள்ளதே?
பதில்: கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதனை இந்திய மத்திய அரசாங்கம் தெளிவாக குறிப்பிட்டுவிட்டது. அரசியலுக்காக எதனையாவது கூறிக்கொண்டிருப்பார்கள்.
கேள்வி ஊவா மாகாண சபை எப்போது கலைக்கப்படும்?
பதில்: விரைவில் கலைக்கப்படும்.
கேள்வி: எப்போது தேர்தல் நடத்தப்படும்?
பதில்: அடுத்த தேர்தல் ஊவா மாகாண சபைத் தேர்தலேயாகும்.
கேள்வி தேசிய மட்டத் தேர்தல்களில் பாராளுமன்ற தேர்தலா? அல்லது ஜனாதிபதித் தேர்தலா? து முதலில் நடத்தப்படும்?
பதில் முதலில் ஊவா மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும்.