நடப்பு அரசியல் சூழ்நிலைகள் காரணமாகக் கூவத்தூர் புகழ் எம்.எல்.ஏக்களில் ஒரு தரப்பினர் பாண்டிச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் , தங்கத் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழு கண்காணித்துப் பராமரித்து வந்தது.
இந்த எம்.எல்.ஏக்கள் வெளியிலுள்ள பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி வாக்கிங், நொன்வெஜ் பிரேக்பாஸ்ட், அறுசுவை லன்ச், அசத்தல் டின்னர், போரடித்தால் செஸ், உல்லாசத்திற்கு ஊஞ்சல், டென்ஷன் குறைய ஸ்பாவில் மஸாஜுடன் வலம் வருவதாகச் செய்திகள் வெளியாகி வந்தன.
இது பற்றி மேலும் தகவல் அறிய பாண்டிச்சேரி அரசி யல் பிரமுகர் ஒருவரைச் சந்தித்த போது தான், யார் என்ற அடையாளம் தெரிய வேண்டாம் என்ற குறிப்போடு பேச ஆரம்பித்தார்.
முதலில் அந்த ரிசார்ட்டைப் (விடுதி) பற்றிக் கூறியே ஆகவேண்டும். பாண்டிச்சேரி சின்ன வீராம்பட்டினத்தில் வங்கக்கடல் எதிரே இருக்கும் மற்றொரு புறம் பேக் வாட்டர் எனப்படும் ஆறும், கடலும் சங்கமிக்கும் பகுதி. சுற்றிலும் தென்னை மரங்கள், நகர நெரிசல் இல்லாமல் மனதை ரிலாக்ஸாக வைக்கும் இடத்தில் இந்த ரிசார்ட் (விடுதி) உள்ளது.
தனி நீச்சல்குளம், பொது நீச்சல்குளம் என தனித்தனியே உண்டு. அனைத்துவித உணவுகளும் கிடைக்கும் ரெஸ்டாரெண்ட், மஸாஜ் ஸ்பா என மிகவும் ரம்மியமான இடம்.
எம்.எல்.ஏக்களுக்கு இங்கு அறைகள் வேண்டும் எனக் கேட்டவுடன் முதலில் நிர்வாகத்தினர் பயந்தனர். அ.தி.மு.க. எம்.பி.யான கோகுலகிருஷ்ணன்தான் நிர்வாகத்துடன் பேசி, 20 அறைகளை புக் செய்து கொடுத்தார்.
நிர்வாகம் அறைகளை ஒதுக் கும் போதே, 25ஆம் தேதி மதியம் காலி செய்ய வேண்டும் என அறிவுறுத்திவிட்டுதான் அறைகளைக் கொடுத்தனர்.
இரண்டு நாளில் பிரச்சினை தீர்ந்து விடும் என்று தான் எம்.எல்.ஏக்கள் நினைத்தனர். 23ஆம் தேதி காலையிலேயே தங்கச் தமிழ்ச்செல்வன் சில எம்.எல்.ஏக்களோடு உற்சாகமாகக் கடற்கரையோரத்தில் வாக்கிங் சென்றார்.
பெண் எம்.எல்.ஏக்களான ஜெயந்தி பரந்தாமன், சந்திர பிரபா, உமா மகேஸ்வரி ஆகியோர் தங் கள் கணவர்களோடு வந்திருந்தனர். மற்ற ஆண் எம்.எல்.ஏக்கள் தங்கள் இஷ்டம்போல ரிசார்ட்டில் உலா வந்தனர். விடுதியின் வாசலில் தனியார் செக்யூரிட்டியும் புதுச்சேரி பொலிஸாரும் பாதுகாப்புக்கு இருந்ததால் எந்தக் குறையும் இல்லாமல் எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.
23 மற்றும் 24 ஆம் தேதி விதவிதமான கடல் உணவுகள், விலையுயர்ந்த வெளிநாட்டு உற்சாக பானங்களோடு ரிசார்ட் களை கட்டியது. ரிசார்ட்டில் உள்ள ஆட்கள் நின்று விளையாடும் செஸ் போர்டில் எம்.எல்.ஏ.க்கள் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர்.
சிறுவர்கள் விளையாடுவதற்காக அங்கே வைக்கப்பட்டிருந்த ஊஞ்சல், சறுக்கு, விளையாட்டுகளில் எம்.எல்.ஏ.பெரிசுகள் அமர்ந்து விளையாடி உல்லாசமாகப் பொழுதைப் போதையுடன் கழித்தனர்.இந்த உல்லாசம் இரண்டு நாட்கள்தான் நீடித்தது.
25ஆம் தேதி ரிசார்ட் நிர்வாகம், நாங்கள் ஒன்லைன் மூலம் புக்கிங் செய்து விட்டோம். எனவே அறைகள் கிடையவே கிடையாது என விரட்டியது.
வேறு வழியில்லாத எம்.எல்.ஏக்கள், தமிழகத்தில் உள்ள சில ஹோட்டல்களுக்குப் பேசினர். ஆனால் தினகரனோ பாண்டிச்சேரியில் தான் தங்க வேண்டும் என உத்தரவு போட்டுவிட்டாராம்.
இதனால் புதுச்சேரி சட்டமன்றக் கட்சி தலைவரான அன்பழகன், தம்பி பாஸ்கர் எம்.எல்.ஏ.வின் உதவியை நாடினர். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த அன்பழகனும் அவர் தம்பி பாஸ்கரும் இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பினர்.
இறுதியில் பாஸ்கர் தன் தொகுதியின் நகரப் பகுதியில் 100 அடி சாலையில் உள்ள ஜி.ஆர்.டி. நட்சத்திர அந்தஸ்து ஹோட்டலில் 20 அறைகளை புக் செய்து கொடுத்தார்.
அங்கு வந்த எம்.எல்.ஏ.க்களைப் பாஸ்கரே முன்னின்று வரவேற்று அழைத்தும் சென்றார். ஆனால், ஏற்கனவே ரிசார்ட்டில் கிடைத்தவசதிகள், உற்சாகம் இங்கு கிடைக்கவில்லை. ஏனென்றால் இந்த விடுதியைச் சுற்றிலும் குடியிருப்புகள் அதிகம். நீச்சல்குளத்தில் குளிப்பதைக்கூட மற்றவர்கள் பார்க்க முடியும்.
இதனால் எம்.எல்.ஏக்கள் தங்கள் அறையிலேயே முடங்கிக் கிடந்தனர். இரண்டு நாட்கள் பரிதவித்து விட்டு, 27 ஆம் தேதி மீண்டும் அதே விண்ட்ப்ளவர் ரிசார்ட்டிற்கு அறையை மாற்றிக் கொண்டனர்.
அங்கு மீண்டும் வழக்கம் போலத் தங்களின் உல்லாச வாழ்வைத் தொடங்கினர். ஒரு வாரம் முழுக்க 20 அறைகளை புக் செய்து இடையூறையும் தவிர்த்துள்ளனர் என்றவரிடம், இதெல்லாம் சரி நாங்கள் உல்லாசமாக இல்லை.
தொண்டர்களின் உணர்வை வெளிப்படுத்தவே கட்டுண்டு கிடக்கிறோம் என எம்.எல்.ஏக்கள் பேட்டி கொடுத்தார்களே, கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தியும் வந்திருந்தாரே அதில் ஏதாவது விசேஷம் உண்டா? என்று கேட்டதும் அவர் தொடர்ந்து பேசினார்………
காலை உணவுக்குப் பின், மாலை சிற்றுண்டிக்குப் பின் என இரண்டு வேளை பேட்டி கொடுக்க வேண்டும் என்பது தங்கத் தமிழ்ச்செல்வனுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை போலும்.
அதன்படி அன்றன்று அவருக்கு அளித்த உத்தரவுப்படி அவர் பேட்டி கொடுத்துவிடுவார். நூற்றுக்கணக்கில் காத்துக்கிடக்கும் நிருபர்களும் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது வாக்கிங் வரும் எம்.எல்.ஏக்களும் சில வார்த்தைகளை வீசி அ.தி.மு.க. எனும் கோட்டை சரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தச் சிறைவாசம் என நீலிக் கண்ணீர் வடித்தனர்.
குறிப்பாகக் கம்பம் ஜக்கையன் இவர் இப்போது எடப்பாடி பக்கம் சென்று விட்டார். பூந்தமல்லி ஏழுமலை, பெரியகுளம் கதிர்காமு ஆகியோர் ஸ்லீப்பர் செல் விங்கின் தலைவர்கள் போலக்காட்டிக் கொண்டனர்.
இன்னும் ஏழு எம்.எல்.ஏக்கள் வருகிறார்கள். இன்னும் ஒன்பது எம்.எல்.ஏக்கள் வருகிறார்கள் என்று கூறி நிருபர்களை ஏமாற்றிக்கொண்டே இருந்தனர்.
கர்நாடக மாநிலச் செயலாளரும் தினகரனின் தினக்கூலியுமான புகழேந்தி ரொம்பவும் பரப்பரப்போடு இருந்தார். அ.தி.மு. க.வின் பொதுச் செயலாளர்போலச் செல் லும் இடமெல்லாம் பேட்டி கொடுப்பவர், புதுச்சேரியை மட்டும் விட்டுவிடுவாரா என்ன? இங்கும் வந்தார்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இரண்டு பேருக்குமே ஆம் என்று சொன்னவர் சின்னம்மாதான். தற்போது அவரை நீக்கப் பார்க்கிறார்களா? கலவரம் வெடிக் கும். ஆட்சியைக் காப்பாற்றக்கொள்ள இறங்கித்தான் வரவேண்டும்.
ஆட்சி நீடிக்க வேண்டுமானால் தினகரனிடம் பேச வேண்டும். ஓ.பி.எஸ்.ஸும் வேண்டாம், இ.பி.எஸ்.ஸும் வேண்டாம். அப்படியென்றால் வேறு யார் முதல்வராக வேண்டும்? என்றதும், சபாநாயகர் தனபால் பக்கம் கையை காட்டிவிட்டார்.
தனபால் நீண்ட நாள் கட்சிக்காரர். தலித் சமூகத்தை சேர்ந்தவர். அவர் முதல்வராகிட தினகரன் கைகாட்டினால் நாங்கள் வரவேற்போம் என்று ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார்.
இதைத் தங்கத் தமிழ்ச் செல்வனும் மற்ற எம்.எல்.ஏக்களும் வரவேற்று ஆரவாரம் செய்த னர். எது எப்படியோ தமிழ்நாட்டு அ.தி.மு.க. பிரச்சினை தீரும் வரை 18 எம்.எல்.ஏ.க்களும் தினகரனின் தங்கக்கூண்டில் அடைப்பட்ட கிளிகள் தான் என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அரசியல் பிரமுகர்.
சபாநாயகர் தனபாலால் தகுதி நீக்கம் செய் யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் தொடர்ந்த வழக்கு, ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தகவல்கள்: ஷண்