முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பகுதியில் 80 ஆவது நாளாக தொடர்ந்து இராணுவ வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன், இராணுவ முகாமுக்குள் சென்று இராணுவத்தினருடன் பேச்சுக்களில் ஈடுபட்ட பின்னர் மக்களை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணிவிடுவிப்பு தொடர்பில் நீங்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் தொடர்பில் நாம் இராணுவத்தினருடன் பேசியிருக்கின்றோம். இதற்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினருடனும் காணி விடுவிப்பு தொடர்பில் பேசியிருந்தோம்.
இதனடிப்படையில் தற்போது இராணுவம் கூறுவதைப் பார்க்கின்ற போது 243 ஏக்கர் காணியை உடனடியாக அவர்கள் விடுவிப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் 189 ஏக்கர் காணியை விடுவிப்பதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறாக 432 ஏக்கர் காணி தவிர, 111 ஏக்கர் காணியை ஆறுமாத காலத்திற்குள் விடுவிப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதனை விடுவிக்க 10 கோடி ரூபா நிதி தேவை எனவும் அவர்கள் கூறுகின்றார்கள். இந்தக் காணியை பேசி விரைவாக விடுவிக்க செய்ய முடியும் எனக் கருதுகின்றேன்.
அத்துடன் மக்களின் வீடுகள், ஆலயங்கள் அமைந்திருந்த 70 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் தயாராகவிருப்பதாக தெரியவில்லை. அதனை விடுவிப்தாக இருந்தால் தமக்கு 400 மில்லியன் ரூபா நிதி தேவை எனக் கூறுகிறது.
இந்த அடிப்படையில் நாம் இராணுவ முகாமுக்குள் சென்று காணிகளைப் பார்வையிட்டுகின்றோம்.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஜனாதிபதி, பிரதமருடன் பேசி விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவையேற்படின் மீண்டும் கேப்பாப்புலவு காணியை நாம் பார்வையிட வருவோம் எனவும் தெரிவித்தார்.
இதன்போது இராணுவ வசமுள்ள 70 ஏக்கர் காணியின் பெறுமதி தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் போராட்டதில் ஈடுபட்ட மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதில் அளித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், எமது காணிகளுக்கு பெறுமதி தேவையில்லை. அவற்றின் பெறுமதி எம்மைப் பொருத்தவரை அதிகமானதே.
நாம் வாழ்ந்த மற்றும் எம்மை வாழ வைத்த மண் இது. இதனை நாம் இராணுவத்தினரிடம் வழங்கமாட்டோம்.
பெறுமதி கேட்டு அந்தக் காணியை இராணுவத்திற்கு வழங்குவதற்கு எமக்கு தலைமைகள் தேவையில்லை. எமக்கு எமது காணிகளை விடுவிக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதேவேளை, இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் இராணுவ முகாமுக்குள் சென்று காணிகளை பார்வையிட்டிருந்ததுடன் மக்களையும் சந்தித்திருந்தார்.
அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோரும் மக்களைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.