இந்தியாவைச் சேர்ந்த யுவதியொருவர், கைகள் இல்லாததால், தனது கால்களால் கார் செலுத்துகிறார்.கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்த ஜிலுமோல் மேரியட் தோமஸ் எனும் 28 வயதான யுவதியே இவ்வாறு கால்களால் வாகனம் செலுத்துகிறார். இவர் பிறக்கும் போதே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர்.
நாள்தோறும் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதே கடினமான விஷயமாக இருக்கும் ஜிலுமோல் பிறக்கும் போது வேண்டுமானால் பலரது பரிதாபப் பார்வைக்கும் ஆளாகியிருக்கலாம். ஆனால் இன்று அவர் பலரும் வியந்து பேசும் லட்சியப் பெண்ணாகியுள்ளார்.
கார் செலுத்துவது என்பது இவருக்கு வாழ்நாள் கனவாம். தனக்குப் பிடித்த வீதிகளில் எல்லாம் இவர் தனியாக வாகனத்தை இயக்கி மகிழ்ந்து வருகிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘பயத்தை விட்டொழித்தால் எதையும் சாதிக்கலாம் என்று முடிவு செய்தேன். அந்த தைரியத்தோடுதான் கால்களால் கார் செலுத்தப் பழகினேன்.
சாரதி உரிமத்துக்காக மண்டல போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்ற போது, அங்கே ஒரு சவால் காத்திருந்தது.
இந்தியாவில் கால்களால் கார் செலுத்தி யாரேனும் சாரதி அனுமதிப் பத்திரம்; வைத்திருந்தால், அதன் நகலை இணைக்குமாறு சொன்னார்கள். இந்தியா முழுக்க தேடியதில், விக்ரம் அக்னிஹோத்ரி என்பவர் கால்களால் கார் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றிருப்பது தெரிய வந்தது.
2018ம் ஆண்டு ஜிலுமோல் சொந்தமாகக் கார் வாங்கி, அதனை தனக்கேற்ற வகையில் மாற்றி அமைத்துக் கொண்டார்.
எனது குடும்பத்தில் யாருக்குமே கார் ஓட்டத் தெரியாது. நானே எனது சொந்த முயற்சியில் கார் ஓட்டப் பழகினேன்’ என்கிறார் ஜிலுமோல் மேரியட் தோமஸ்தற்போது ஒரு அச்சக நிறுவனத்தில் கிறஃபிக் டிசைனராகவும் பணியாற்றுகிறார் ஜிலுமோல்.
‘நான் என் சொந்த சம்பாத்தியத்தில்தான் கார் வாங்கினேன். கார் ஓட்டுவதற்கு முன்பு எனது பெற்றோரை கஷ்டப்பட்டு சமாதானம் செய்தேன். தற்போது வரை இந்த வாகனத்துக்கு பதிவு பெறவில்லை. சாரதி அனுமதிப்பத்திரமும் கிடைக்கவில்லை. இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்.
இந்திய மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கிவிட்டது. மாநில அரசும் இது குறித்து பரிசீலித்து வருகிறது. எனது கனவை நனவாக்க நான் தொடர்ந்து போராடுவேன் என்று அதே தன்னம்பிக்கையோடு பேசுகிறார்’ ஜிலுமோல் மேரியட் தோமஸ். (நன்றி தினமணி)
வீடியோ: