உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவும் கைதாகி விளக்கமறியல் உத்தரவின் கீழ் வைத்தியசாலைகளில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கட்டில் விலங்கோ அல்லது கை விலங்கோ இன்று (04) மாலை வரை இடப்படவில்லை எனவும் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய அந் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும் கட்டிலுடன் சேர்த்து பூட்டிடும் கட்டில் விலங்கு ஜோடியும் கை விலங்கு ஜோடியும் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய அவை இடப்படவில்லை எனவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ குறித்த சிகிச்சை அறையில் இருந்து கட்டணம் செலுத்தப்படும் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.