கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கு வரும் 27 ஆம் தேதி ஒரேநேரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஊட்டி நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வரவுள்ளது.
` கூலிப்படைக்கு பல லட்சம் செலவு செய்தது, செயற்கை மின்தடை, தொலைபேசியில் பேசிய நபர் என இந்த வழக்கின் இருட்டு பக்கங்கள் வெளியில் வர வேண்டியது அவசியம்’ என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
கொடநாடு வழக்கின் அடுத்தகட்டம் என்ன?
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது.
இதுதொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வரும் வேளையில் போலீஸார் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியிருப்பது அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சயான், தனபால் வாக்குமூலங்கள்
கொடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளி எனக் கூறப்படும் சயானிடம் கடந்த 17 ஆம் தேதி நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத்தும் குன்னூர் டி.எஸ்.பி சுரேஷும் விசாரணை நடத்தினர்.
சுமார் மூன்றரை மணி நேரங்களுக்கும் மேலாக நடந்த இந்த விசாரணையில், `கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது?’ என சயான் கூறியதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாயின. நீலகிரி எஸ்.பியும், `அவர் வாக்குமூலம் கொடுத்தார்,
பதிவு செய்து கொண்டோம்’ என்று மட்டும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜின் அண்ணன் தனபாலிடம் நீலகிரி போலீஸார் விசாரணை நடத்தினர்.
அவர் தொடக்கத்தில் இருந்தே, `தனது சகோதரர் மரணம் விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை’ எனக் கூறிவந்தார்.
இந்த வழக்கு 27 ஆம் தேதி ஊட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அரசுத் தரப்பு சாட்சிகளில் ஒருவரான கோவை ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், காவல்துறையின் விசாரணைக்கு ஏற்றவாறு சாட்சி சொல்ல வேண்டும் என சிலர் கட்டாயப்படுத்துவதாகவும் இதனால் தனக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்த விசாரணையை விரைந்து முடிப்பதற்கு நீலகிரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு செவ்வாய்கிழமையன்று விசாரணைக்கு வந்தபோது, கொடநாடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று விசாரணை நடத்த வேண்டும்,
ஆனால், `மனுவை மட்டும் தாக்கல் செய்துவிட்டு விரிவான விசாரணையை நடத்துகிறார்கள்’ என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடியின் தனி டீம்
இதற்குப் பதில் அளித்த அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ` விசாரணையை விரிவுபடுத்தும் நோக்கில் நீலகிரி நீதிமன்றத்தில் மெமோ தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அது நிராகரிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சிலர், விசாரணையை விரிவுபடுத்த வேண்டும் என நீதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர்’ என்றார்.
தொடர்ந்து அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதிடுகையில், ` அனுமானத்தின் அடிப்படையில் மனுதாரர் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.
இந்த வழக்கில் விரிவுபடுத்தப்பட்ட விசாரணையை நடத்தி அந்த அறிக்கையை காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு மனுதாரர் ரவி நெருக்கமானவர்’ என்றார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் 27 ஆம் தேதிக்கு வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
வரும் 27 ஆம் தேதி ஊட்டி நீதிமன்றத்தில் சயானின் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அ.தி.மு.க வழக்கறிஞர் குழுவினர் அல்லாமல் தனி சட்டக் குழு ஒன்றை எடப்பாடி பழனிசாமி தரப்பில் அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்தக் குழுவினர், இந்த வழக்கில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய சட்டப்பணிகள் குறித்து விரிவான ஆலோசனையை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தி.மு.கவின் நோக்கம் என்ன?
இதுதொடர்பாக அ.தி.மு.க வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “ கொடநாடு வழக்கில் சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் முன்னரே எடுக்கப்பட்டுவிட்டன.
இந்த வழக்கில் 41 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இந்தச் சம்பவம் நடந்த காலகட்டத்தில் சசிகலா சிறையில் இருந்தார்.
இதுதொடர்பாக, அவர் புகார் கொடுக்கவில்லை. மேலாளர் பொறுப்பில் இருந்த நடராஜனிடம் விசாரித்துவிட்டனர்.
இதில் இரண்டு பேர் மட்டும்தான், `எடப்பாடி சொல்லித்தான் செய்தோம்’ என்கிறார்கள். அதாவது, `இந்த வழக்கில் எடப்பாடியை சிக்க வைத்தால் மட்டுமே தாங்கள் தப்பிக்க முடியும்’ என்ற நோக்கில் அவர்கள் இருவரும் செயல்பட்டனர்” என்கிறார்.
தொடர்ந்து பேசியவர், “ கொடநாடு வழக்கில் கைதானவர்களுக்காக தி.மு.கவின் முக்கிய வழக்கறிஞர் ஒருவர்தான் ஆஜராகி வருகிறார்.
இந்த வழக்கின் மூலம் எடப்பாடி பழனிசாமியை ஆட்டம் காண வைக்கலாம் என நினைக்கின்றனர்.
சட்டப்பிரிவு 173(8)ன்படி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த பின்னர் விசாரணையும் முடிந்த பிறகு மேலதிக விசாரணையை எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரையில் அதனை செய்யலாம். இதற்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றம் அனுமதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள் அப்படி எந்த அனுமதியையும் பெறவில்லை.
சயானிடம் வாக்குமூலம் பெற்ற தகவல் செய்தியாக வெளிவந்ததால், தனக்கு நெருக்கடி ஏற்படுவதாகக் கூறி சட்டமன்றத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார்.
இதைப் பற்றியே அனைவரும் பேச வேண்டும் என்பது தி.மு.கவின் தந்திரமாக உள்ளது. கொடநாடு வழக்கை அவ்வளவு எளிதாக முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் தி.மு.க உறுதியாக உள்ளது. நாங்கள் இந்த வழக்கை சட்டப்படியாக சந்திப்போம்” என்கிறார்.
திமுக-வின் நோக்கம். அதிமுக கேள்வி.
103 சாட்சிகள்; சஜீவனை ஏன் விசாரிக்கவில்லை?
“ இது முழுக்க முழுக்க காவல்துறை நடவடிக்கைதான். கோடநாடு வழக்கில் மொத்தம் 103 சாட்சிகள் உள்ளன.
அதில், 40 சாட்சிகளை மட்டும் விசாரித்துள்ளனர். இந்த வழக்கில் எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்பட பலரை விசாரித்துள்ளனர். இன்னமும் சசிகலாவை விசாரிக்கவில்லை.
அங்கே இருந்த பொருள்களில் என்னவெல்லாம் காணாமல் போனது என்பது சசிகலாவுக்குத்தான் தெரியும்.
அடுத்ததாக, காவலாளி கிருஷ்ண பகதூர் என்பவர் முக்கியமான நேரடி சாட்சியாக இருக்கிறார்.
அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அதேபோல், சஜீவன் என்பவரின் பெயரை பல சாட்சிகள் குறிப்பிட்டுள்ளனர். அவரிடம் விசாரணையே நடத்தப்படவில்லை” என்கிறார், தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் வீ.கண்ணதாசன்.
தொடர்ந்து பேசியவர், “ இந்த வழக்கில் தொடர்புடைய சயானின் மனைவியும் குழந்தையும் பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் இறந்தனர்.
அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்காமல் அவர்களை கோவையில் சேர்த்தனர். இதில், `விபத்தைப் பற்றி மட்டுமே பாலக்காடு போலீஸ் விசாரிக்க வேண்டும்’ என அப்போது எடப்பாடியின்கீழ் இருந்த காவல்துறை தெரிவித்துள்ளது.
இவையெல்லாம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. 2019 ஆம் ஆண்டில் இருந்தே இந்த வழக்கில் எடப்பாடியின் தொடர்பு பற்றி பேசப்பட்டு வந்தது.
தற்போது அரசு மாறிவிட்டதால், பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். அரசுத் தரப்பு சாட்சியான ரவியை, அப்போது தனக்கு சாதகமாக காவல்துறை பயன்படுத்திக் கொண்டது. இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் இது” என்கிறார்.
மேலும், “ கொரோனா காலத்தில் எந்த நீதிமன்றமும் இயங்காதபோது ஊட்டி நீதிமன்றம் மட்டும் தொடர்ச்சியாக இயங்கியது.
தொடர் கொலைகள், கொள்ளை சம்பவத்தில் புதைந்துள்ள உண்மைகளை வெளியில் கொண்டு வர வேண்டும்.
ஜெயலலிதா மரணம் போலவே, இதிலும் உண்மை வெளியில் வரக் கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
காவல்துறை பெற்ற வாக்குமூலத்தில் அவர் பெயர் உள்ளதா என்பதைவிட, `என்ன நடந்தது’ என்பது எடப்பாடி பழனிசாமியின் மனசாட்சிக்குத் தெரியும். சட்டத்தின்முன் உண்மையான குற்றவாளிகள் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” என்கிறார்.
தொலைபேசி அழைப்பு ரகசியம்
இதையடுத்து, “ கொடநாடு வழக்கின் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும்?” என மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமிடம் கேட்டோம்.
“ கொடநாடு விவகாரத்தில் அண்ணா தி.மு.க தொண்டர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதுதான் முக்கியமானது.
இதில், தி.மு.கவின் நோக்கம் என்ன என்பது பெரிய விஷயமல்ல. அ.தி.மு.க தொண்டர்கள், ஆதரவாளர்கள், ஜெயலலிதா அபிமானிகள் உள்ளிட்டோர், `கொடநாடு என்பது மிக முக்கியமான இடம். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து முழு உண்மைகளும் வெளியில் வர வேண்டும்’ என நினைக்கின்றனர்.
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களைப் போலவே, கொடநாடு விவகாரத்திலும் உண்மைகள் வெளிப்பட வேண்டும்.
அது நீதிமன்றத்தின் மூலம் வெளியே வந்தால் நல்லதுதான். அதேநேரம், இந்த வழக்கை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்க முடியாது என்பதுதான் உண்மை” என்கிறார்.
அதிமுக தொண்டர்
அதிமுக தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம் என்கிறார் ஷ்யாம்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய ஷ்யாம், “ கொடநாட்டில் சம்பவம் நடந்த இரவில் தொலைபேசி அழைப்பு ஒன்று சென்றதாகக் கூறப்படுகிறது.
கொலை, கொள்ளைச் சம்பவத்தின்போது கார் ஓட்டுநர் கனகராஜ் உடன் சென்றுள்ளார். அவர் உயிருடன் இல்லை. அவர் எடப்பாடியின் உறவினராக இருக்கிறார்.
அந்த தொலைபேசி அழைப்பு யாரிடம் இருந்து யாருக்குச் சென்றது என்ற அழைப்பு விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.
இதில் மேலதிக விசாரணை நடக்கும்போது, முன்னர் நடந்த விசாரணையின் இருட்டு பக்கங்கள் வெளிப்பட வேண்டும்.
கூலிப்படைக்கு முதலீடு செய்தது யார்?
வெள்ளிக்கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஊட்டி நீதிமன்றத்திலும் இந்த வழக்கு வரவுள்ளது.
எந்த விசாரணையையும் நீதிமன்றம் இழுத்து மூடுவதற்கு வாய்ப்பில்லை. விசாரணை நீதிமன்றத்தில் உத்தரவு வெளியான பிறகு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என்பது வேறு விஷயம்.
ஆனால், இன்னமும் விசாரணை நீதிமன்றத்தின் பணியே முடிவடையவில்லை. இந்த வழக்கில் மொத்தம் 40 சாட்சிகளை விசாரித்துள்ளனர். இன்னும் 60 பேரை விசாரிக்க வேண்டும்.
நாளொன்றுக்கு 2 பேரை விசாரித்தால்கூட அதற்கே ஒரு மாதம் தேவைப்படும். அப்புறம் குறுக்கு விசாரணை, மறு குறுக்கு விசாரணை, இறுதி வாதம் எனத் தொடர்ந்து நடந்தால் ஆறு மாதங்கள் ஆகிவிடும்.
கிரிமினல் வழக்குகளில் ஒவ்வொரு கட்டத்திலும் உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லலாம்.
முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் அதிவேக நீதிமன்றத்துக்குக்கூட இந்த வழக்கு மாற்றப்படலாம். இந்த வழக்கின் விசாரணையை அ.தி.மு.க தொண்டர்கள் ஆவலோடு கவனித்து வருகின்றனர்” என்கிறார்.
மேலும் சில விவரங்களைப் பட்டியலிட்ட ஷ்யாம், 2017ல் இந்தச் சம்பவம் நடந்தபோது வெளியான தகவல்களின் அடிப்படையில் கூலிப்படைக்கு பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று சந்தேகிக்கிறார்.
அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்த நபருக்காக, அங்கே என்ன எடுக்கப் போனார்கள் என்ற கேள்வி எழுகிறது என்கிறார் அவர்.
எடப்பாடிக்கு சிக்கல்; ஓ.பி.எஸ். நோக்கம் என்ன?
மேலும் ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரத்தை எப்படிப் பார்க்க வாய்ப்புள்ளது என்று என்பது பற்றிப் பேசிய ஷ்யாம், “அங்கே பொருள்களை எடுத்தார்களா இல்லையா என்பதைவிட என்ன திட்டத்துக்காக உள்ளே சென்றார்கள் என்பதுதான் முக்கியம்.
அங்கே தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. `நான் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அனுமதி கொடுத்தேன்’ என ஆ.ராசா கூறியிருந்தார்.
அவர் அனுமதி கொடுத்தார் என்றால், கொலைச் சம்பவத்தின்போது மின்சாரத்தை செயற்கையாக நிறுத்துவதற்கு அனுமதி கொடுத்தது யார்? மின்வாரியத்தில் உள்ள உயர் அதிகாரிதான் உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். அந்த அதிகாரிக்கு உத்தரவிட்டவர் யார் என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
சந்தேகம்தான் கிரிமினல் வழக்கின் விசாரணையில் மிக முக்கியமானது. இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியாக இருந்த ரவி என்பவர்,
அ.தி.மு.கவில் பொறுப்பில் இருக்கிறார். இந்த வழக்கில் அவர் மனு போட வேண்டிய அவசியம் இல்லை. யாருக்காக அவர் மனு போட்டார் என்பதும் கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவே அரசு விரும்பும்.
அதேநேரம், சட்டமன்றத்தில் துரைமுருகனை ஓ.பி.எஸ் பாராட்டியதையும் கவனிக்க வேண்டும். 1989 ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு நேர்ந்த துயர சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அந்தச் சம்பவத்தில் துரைமுருகனை குற்றம் சாட்டி ஜெயலலிதா பேசினார். தற்போது துரைமுருகனின் 50 ஆண்டு பொதுவாழ்வை ஓ.பி.எஸ் பாராட்டுகிறார்.
அப்படியானால், ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு மதிப்பு கிடையாதா? சட்டசபையில் துரைமுருகனை அவர் ஏன் பாராட்டுகிறார் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் வந்தால், கட்சி தன் பக்கம் வரும் என்ற கணக்குகள்தான்” என்றார்.
வரும் வெள்ளிக்கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஊட்டி நீதிமன்றத்திலும் என்ன நடக்கப் போகிறது என்பதை அ.தி.மு.க தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
நன்றி
பிபிசி செய்தி