கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில வாரங்களாக முடக்கப்பட்டிருந்த பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதோடு, மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம அலுவலர் பிரிவொன்று புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகள்
அதற்கமைய காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 165 காத்தான்குடி கிராம அலுவலர் பிரிவு 3, 165 ஏ காத்தான்குடி கிராம அலுவலர் பிரிவு மேற்கு, 165 பீ காத்தான்குடி கிராம அலுவலர் பிரிவு கிழக்கு, 166 காத்தான்குடி கிராம அலுவலர் பிரிவு 2, 166 ஏ காத்தான்குடி கிராம அலுவலர் பிரிவு வடக்கு , 167 ஏ காத்தான்குடி கிராம அலுவலர் பிரிவு வடக்கு , 167 பீ காத்தான்குடி கிராம அலுவலர் பிரிவு வடக்கு , 167 டீ புதிய காத்தான்குடி கிராம அலுவலர் பிரிவு மேற்கு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பண்டாரகம – அழுத்கம பகுதியில் 660 ஏ எபிட்டிமுல்ல கிராம அலுவலர் பிரிவு மற்றும் 659 பீ பமுனுமுல்ல கிராம அலுவலர் பிரிவு என்பனவும் , மொனராகலை-படல்கும்புர பகுதியில் அழுபொத்த கிராம அலுவலர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசடி கிராம அலுவலர் பிரிவு இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டது.
இரு கிரிக்கட் வீரர்களுக்கு தொற்று
ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக பயிற்சி பெற்று வந்த இரு இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டள்ளது. இவர்கள் இருவரையும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது. இவர்களுடன் தொடர்புகளைப் பேணியோரை இனங்கண்டு தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இன்று வியாழக்கிழமை மாலை 10.30 மணி வரை 875 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 56,064 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 47 984 பேர் குணமடைந்துள்ளதோடு 7268 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதனன்று பதிவான மரணம்
நேற்று புதன்கிழமை நாட்டில் ஒரு கொரோனா மரணம் பதிவாகியது. அதற்கமைய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்வடைந்துள்ளது. மல்லவகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது கடந்த 20 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவால் குருதி நஞ்சானமை மற்றும் நீரிழிவு தீவிரமடைந்தமையே மரணத்திற்கான காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பதிவான கொரோனா மரணங்கள்
பேலியகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவரும், அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஆண்ணொருவருமே இவ்வாறு இறுதியாக உயிரிழந்துள்ளனர்.