கொரோனா வைரஸ் தொற்றால் உத்தர பிரதேச தொழில்துறை கல்வி அமைச்சர் கமலா ராணி உயிரிழந்துள்ளார்.
62 வயதான இவருக்கு கடந்த ஜுலை 18 ஆம் தேதி கொரோனா தொற்று வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் மையத்தில் உயிரிழந்தார் என்கிறது உத்தர பிரதேச அரசின் அறிக்கை.
கமலா ராணியின் இறப்புக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த அவர் மக்களுக்காக உழைத்தவர், மக்களால் மதிக்கப்பட்டவர்,” என குறிப்பிட்டுள்ளார்.
கமலா ராணியின் இறப்புக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உத்தரபிரதேச அரசில் எனது சக அமைச்சர் கமலா ராணி அவர்களின் மரணம் குறித்த தகவல்கள் கவலை அளிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் விழாவுக்கான தனது அயோத்தி பயணத்தையும் யோகி ஆதித்யநாத் ரத்து செய்துள்ளார்.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
“கொரோனா தொடக்க அறிகுறிகள் தென்பட்டதால் , பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. எனது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால் மருத்துவர்கள் அறிவுரைக்கேற்ப மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்“ என அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.
இந்தியத்தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அமித் ஷா ஈடுபட்டார்.
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக டெல்லி அரசுடன் இணைந்து தொடர் அலோசனை கூட்டங்கள் நடத்தியது, மருத்துவமனைகளில் ஆய்வு செய்ததது என களத்தில் இறங்கி அமித் ஷா பணிகளை மேற்கொண்டார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால் தமிழக ஆளுநர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக கடந்த ஜூலை 29-ம் தேதி ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது.
தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உள்ளதாக அவருக்கு பரிசோதனை செய்த காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஆளுநருக்கு பல்வேறு சோதனைகள் செய்ததில், அவர் உடல்நலன் சீராக இருப்பதாகவும், வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ள உள்ள ஆளுநரை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் அமிதாப் பச்சன்
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்ததை அடுத்து இன்று (ஆகஸ்டு 2) வீடு திரும்பினார்.
கடந்த மாதம் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோருக்கு தங்களுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதை ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்திருந்தனர்.
T 3613 – I have tested CoVid- have been discharged. I am back home in solitary quarantine.
Grace of the Almighty, blessings of Ma Babuji, prayers & duas of near & dear & friends fans EF .. and the excellent care and nursing at Nanavati made it possible for me to see this day . pic.twitter.com/76jWbN5hvM— Amitabh Bachchan (@SrBachchan) August 2, 2020
இந்த நிலையில், மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அமிதாப் பச்சனுக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனது ரசிகர்களுக்கும், மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.