கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஊரடங்கு தொடருமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய , குறித்த பகுதிகளில் 27 ஆம் திகதி வரை தொடரவுள்ள அதேவேளை, ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்களும் மேற்கொள்ள முடியாதவாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றையதினம் கொழும்பு -12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் 24 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஏன்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சில மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் மற்றும் தளர்த்தப்படும் நேரங்கள் திருத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை வரை இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.
ஏப்ரல் 24 வெள்ளி இரவு 8.00 மணிக்கு இம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.
அந்தவகையில் வார இறுதி நாட்களான 25 சனி மற்றும் 26 ஞாயிறு ஆகிய தினங்கள் இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது அனைவருக்கும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளுதல் மற்றும் விவசாய நடவடிக்கைகள் போன்றவை தொடர்பில் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள், அறிவுறுத்தல்களில் மாற்றங்கள் இல்லை என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.