கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் சுமார் 13 கோடி ரூபா பரிசுக்குரிய லொத்தர் சீட்டை தொலைத்துவிட்டிருந்த நிலையில், பரிசைப் பெறுவதற்கான கால எல்லை முடிவடைவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர், எதிர்பாராத வகையில் அந்த லொத்தர் சீட்டை கண்டுபிடித்து பரிசை பெற்றுக்கொண்டுள்ளனர்.
கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த நிகோல் பெட்னோல்ட் மற்றும் ரொஜர் லலோக் ஆகிய இத்தம்பதியினர் கடந்த வருடம் காதலர் தினத்தில் மேற்படி லொத்தர் சீட்டை வாங்கினர். 100 கனேடிய டொலர் (சுமார் 13,000 ரூபா) பெறுமதியான லொத்தர் சீட்டு இது. 2018 ஏப்ரல் 5 ஆம் திகதி மேற்படி லொத்தர் சீட்டிழுப்பு நடைபெற்றது.
கடந்த வார இறுதியில் தான், மேற்படி லொத்தர் சீட்டுக்கு 10 இலட்சம் டொலர் (சுமார் 13 கோடி ரூபா) பரிசு கிடைத்திருப்பதை இத்தம்பதியினர் உணர்ந்தனர்.
ஆனால், அந்த லொத்தர் சீட்டை எங்கு வைத்தோம் என்பதை அத்தம்பதியினர் மறந்துவிட்டிருந்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. வெற்றியாளர்கள் ஒரு வருட கால அவகாசத்தின்படி, கடந்த வெள்ளிக்கிழமை , அதாவது ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு முன்னர் இப்பரிசை பெற்றுக்கொள்ள வேண்டும் என லொத்தர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
தமக்குரிய 10 லட்சம் டொலர் பரிசு கிடைக்காமல் போய்விடும் என இத்தம்பதியினர் அச்சம் கொண்டிருந்தனர். எனினும், சில தினங்களுக்குமுன், நிகோல் பெட்னோல்ட் தமது பேரனின் சில பொருட்களை தேடிக் கொண்டிருந்தபோது, புத்தகமொன்றிலிருந்து லொத்தர்சீட்டு விழுவதைக் கண்டார்.
பரிசுக்குரிய லொத்தர் சீட்டுதான் அது என்பதை அறிந்து அத்தம்பதியினர் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.
நேற்றுமுன்தினம் அவர்கள் தமது பரிசுப் பணத்தை பெற்றுக்கொண்டனர்.