இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என தெரிவிக்கப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் (வயது 32), அப்பன் என்றழைக்கப்படும் நவரத்னம் நவநீதன் மற்றும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான தேவியன் (36 வயது) ஆகிய மூவரும் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
வவுனியா, நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பிரதேசங்களில் இம்மூவரும் மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நேற்றிரவு (10) அப்பிரதேசங்களைச் சுற்றிவளைத்த இராணுவ புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபர்கள், இராணுவத்தினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கிப் பிரயோகத்திலேயே கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர் என்று இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.
சம்பவத்தை அடுத்து நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பிரதேசங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோபி உள்ளிட்ட குழுவினர் இராணுவத்தினரால் சுட்டுக்கொலை?
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் கோபி உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இவர்கள் மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சம்பவத்தில் இராணுவ வீரர் ஒருவரும் பலியாகியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேலுபிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர் புலிகள் இயக்கத்தின் தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபனைத் தேடி வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் விசேட தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அப்பகுதியில் இராணுவத்தினருக்கும் கோபி குழுவினருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலம் இன்று காலை பதவியா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து சந்தேகநபர்களான கோபி உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்த தப்பி வேறு இடத்துக்குச் சென்றதாகவும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ள இராணுவத்தினர் அவர்கள் மீது இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து கோபி உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், உயிரிழந்த மூவரின் சடலங்கள் தொடர்பில் இரர்ணுவத்தினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அவ்வாறு உயிரிழந்தவர்களில் கோபியும் அடங்குகின்றாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளுக்கு புத்துயிரளித்த 65பேர் கைது
11-04-2014
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கி அவ்வியக்கத்துக்கு புத்துயிரளிக்கும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 65 பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதாகியுள்ளவர்களில் 10 பெண்கள் அடங்குவதாகவும் கைதானவர்களில் 5பேர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
எஞ்சியுள்ள 60 பேரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
கடந்த இரண்டு மாதங்களாக நடத்தப்பட்ட சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போதே மேற்படி 65 பேரும் கைது செய்யப்பட்டனர்.
புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்க முயன்றார்கள், அவ்வியக்கத்துக்கு நிதியுதவிகளை வழங்கினார்கள் மற்றும் தனித் தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அஜித் ரோஹண தெரிவித்தார்.
கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போதே இவர்கள் கைதானார்கள்.
கைதான 65பேரில் ஐவருக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் அற்ற நிலையிலேயே அந்த ஐவரும் விடுவிக்கப்பட்டனர். ஏனையவர்கள் அரசாங்கத்தின் தடுப்பு ணிகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று நம்பப்படும் கோபி என்ற கே.பி.செல்வநாயகம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அஜித் ரோஹண மேலும் கூறினார்.