வடமாகாண சபையில் தனது பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையின் நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
வடமாகாண சபையின் 11 ஆவது அமர்வு இன்று காலை கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. அந்த அமர்வின் போதே சிவாஜிலிங்கம் சபை நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இன்றைய அமர்வுக்கு கறுப்பு மேலாடையுடன் வந்த சிவாஜிலிங்கம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னால் முன்வைக்கப்பட்ட 3 பிரேரணைகள் இதுவரை சபை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டார்.
(என்ன வகையான பிரேரணையை எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைதார் என்பது தெரியவில்லை. அனேகமாக கோமாளித்தனமான பிரேரணையாகத்தான் இருக்கும்)
அதனை அடுத்து சக மாகாண சபை உறுப்பினரான சித்தார்த்தன், சிவாஜிலிங்கத்தின் முதுகில் தடவி சமாதானப்படுத்தி இருக்கையில் அமர செய்தவராம்.
சிவாஜிலிங்கத்தின் குறித்த 3 பிரேரணைகளும் கட்சியுடன் தொடர்புடையதாக இருப்பதனாலையே அது விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படவில்லை எனவும் கட்சியின் முடிவு தெரிவிக்கப்பட்டதும் அடுத்த அமர்வில் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இன்றைய 11 ஆவது அமர்வின் போது உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட 7 பிரேரணைகளில் 6 பிரேரணைகள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டதுடன் 1 பிரேரணை அடுத்த அமர்வுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதேவேளை மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நேற்று முதல் வாபஸ் பெறப்பட்ட பின்னர் பல்வேறு அச்சுறுத்தல்கள் விடப்பட்டுள்ளது தனது பாதுகாப்பு தொடர்பில் மாகணசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தை அனந்தி முன்வைத்தார்.
அதனை விசேட பிரேரணையாக சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது இதனை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வழிமொழிந்தார்.
அதனை அடுத்து மாகாண சபையின் 12 ஆவது அமர்வு எதிர்வரும் யூலை மாதம் 12ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வடமாகாண சபை என்பது வெறுமனே பிரேரணைகள் நிறைவேற்றும் மன்றமாகவே செயல்படுகின்றது. வடமாகாண சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள எதுவுமே இதுவரை நிறைவேற்றபட்டதாக தெரியவில்லை.
சிவாஜிலிங்கத்தின் பாதுகாப்பும் வாபஸ்
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வழங்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு புதன்கிழமை (25) நள்ளிரவுடன் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் வியாழக்கிழமை (26) தெரிவித்தார்.
இது தொடர்பாக சிவாஜிலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,
‘பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பு எனக்கு 2001 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நான் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத காலப்பகுதியிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புத் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கொழும்பிலிருந்த வந்த அறிவுறுத்தலுக்கமைய அந்தப் பாதுகாப்பு புதன்கிழமை (25) நள்ளிரவு முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளது’ என அவர்; மேலும் தெரிவித்தார்.
ஏற்கனவே வடமாகாண சபை உறுப்பினர்களாக அனந்தி சசிதரன், பாலச்சந்திரன் கஜதீபன் மற்றும் சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோரின் பொலிஸ் பாதுகாப்பினை யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் விலக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.