நாகப்பட்டினத்தில் உள்ள கோயிலில் வைத்து பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் நாகூர் தோப்பு அருகே உள்ள காமராஜர் காலனியைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர் கட்டட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் காமராஜர் காலனியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அந்த பெண்ணை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. பிறகு அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்ட நபர்கள் அப்பகுதியில் இருந்த கோயிலுக்குள் அவரை இழுத்துச்சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த செயலை வெளியே தெரிவிக்கக் கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டிற்கும் சென்று அந்த இளைஞர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வெளிபாளையம் போலீசார், சம்பவ நடந்ததாக கூறப்படும் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். பிறகு நடத்திய விசாரணையில் முதல் கட்டமாக, இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா பிபிசி தமிழிடம் கூறுகையில், நேற்று இரவு பெண் ஒருவர் வேலையை முடித்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர் அந்த பெண்னை மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்துள்ளனர்.
பின் கூட்டாக அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிய வந்தது. உடனடியாக வெளிபாளையம் போலீசார் துரிதமாக செயல்பட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய அருண்ராஜ், ஆனந்த் ஆகிய இருவர் மீதும் கூட்டு பலாத்காரம், தகாத வார்த்தைகளால் திட்டியது, அச்சுறுத்தி பொருட்களை பறித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பிறகு கைதுசெய்யப்பட்ட அனைவரும் நாகப்பட்டினம் சிறையில் அடைக்கப்ட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் நேற்று இரவு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த பெண் தற்போது நலமாக உள்ளார் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்தார்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் பின்தொடரும் சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இந்த காணொளி, இந்த வழக்கு விசாரணையில் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியை குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் அவரது வீட்டுக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.