எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் ஐ.தே.கவின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாஸவுக்கு தனது பூரணமான ஆதரவை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தரப்பான இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அக்கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை அலுவலகமான ‘தாயகம்’ பணிமனையின் பிரதான கேட்போர் கூட்டத்தில் நடைபெற்று வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறும் இந்த மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதஸவை ஆதரிப்பதற்கான காரணங்கள் மற்றும் ஜனதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் பங்களிப்புச் செயற்றிட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் ஆரயாப்பட்டு வருகின்றன.
இக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராசம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரட்ணசிங்கம், சிறிநேசன்,சி.யோகேஸ்வரன், சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராயா, யாழ், மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை தலைவர்களான ஆர்னோல்ட், தி.சரவணபவன், வடமாகாண முன்னாள் அவைதலைவர் கே.சிவஞானம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான கே.சயந்தன், குருகுலராயா ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.