எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் விடயத்தில் ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுக்குமிடையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்திருக்கின்றது.
இதில் இருவருமே தாம் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளதுடன் அதனை வலியுறுத்தியும் இருக்கின்றனர்.
இந்நிலையிலேயே இருவருக்குமிடையிலான இந்த சந்திப்பு இணக்கப்பாடின்றி முடிவடைந்திருக்கின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன் சாட்சியமளித்த பின்னர் 8 மணியளவில் மூடிய அறைக்குள் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கின்றது.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் 20 நிமிடங்கள் வரை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாகவும் சஜித் பிரேமதாஸவை பிரதமராக நியமிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
எனினும் இந்த யோசனையை நிராகரித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாகவும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
எனினும் இந்த யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்திருக்கின்றார்.
அந்தவகையில் இருவருக்குமிடையில் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு எந்தவிதமான இணக்கப்பாடுமின்றி முடிவடைந்திருக்கின்றது.
எனினும் தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்ததன் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கலாம் என இருவரும் சந்திப்பின்போது முடிவு செய்திருக்கின்றனர்.
இருவருமே ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் இந்த சந்திப்பின் போது விடாபிடியாகவே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவேண்டுமென வலியுறுத்தி எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்பில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்துவதற்கு சஜித் ஆதரவு தரப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுமார் 2 இலட்சம் மக்களை கொழும்பில் திரட்டி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக்க வேண்டுமென அழுத்தம் பிரயோகிப்பதற்கு சஜித் பிரேமதாஸ ஆதரவு எம்.பி.க்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கு என்ற கோஷத்தை முன்வைத்தே இந்த மாபெரும் மக்கள் பேரணியை நடத்துவதற்கு சஜித் பிரேமதாஸவின் ஆதரவு எம்.பி.க்கள் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டுக்கட்சிகளுக்கிடையில் கைச்சாத்திடப்படவிருந்த தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் பிற்போடப்பட்டிருக்கின்றது.
புதிய தேசிய ஜனநாயக கூட்டணி குறித்த யாப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் நிலவுகின்ற முரண்பாடுகளே இந்த தாமத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**