சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகள் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதி வழங்கியுள்ளார்.
அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் உங்களை கவனிக்கவில்லை என்பதை நான் நன்கறிவேன். பெறுமதி மிக்க பல இடங்களை மஹிந்த ராஜபக்ஸ தமது சிநேகபூர்வமானவர்களுக்கு வழங்கி, காணிகளை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றினார்கள்.
அவற்றை வேறு நபர்களுக்கு வழங்கினார்கள். அந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்தி, அந்த காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்குவோம் என இந்த சந்தர்ப்பத்தில் தெளிவாக கூறிக் கொள்கின்றேன்.
அவர்களை அனைவரையும் சட்டத்திற்கு முன்பாக கொண்டு சென்று தண்டனையை பெற்றுக்கொடுப்போம். எமது புதிய அரசாங்கத்தின் ஊடாக அனைத்து இனத்தவரும், அனைத்து மதத்தவரும் சுதந்திரமாக தமது நடவடிக்கை முன்னெடுக்க முடியும் என்பதனை நான் உறுதியாக கூறிக்கொள்கின்றேன்.
இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிறகு, ஆதரவு தெரிவிக்கும் வகையிலாக மற்றுமொரு கூட்டமொன்று அம்பாறை நகரில் நேற்று நடைபெற்றது.
அங்கு ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா கருத்து வெளியிட்டார்.
கல்விக்காக 6 ஆயிரம் கோடி ரூபாவே ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. நான்கு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அவர்களில் 25 ஆயிரம் பேர் மாத்திரமே பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றனர்.
எஞ்சிய 4 லட்சத்து 25 ஆயிரம் பேர் கல்வியை இடைநடுவில் விட்டு விட்டு வெளியேறுகின்றனர். எனினும், ஆட்சியாளர்களின் சுகபோகத்திற்காக வழங்குகின்ற உணவு, வாகனங்கள், காணிகள், இலவசமாக வழங்குகின்ற கடவுசீ்ட்டுகள், மூவாயிரம் பாதுகாப்பு படையினர் ஆகியவற்றுக்கு மேலதிகமாக 890 கோடி ரூபா ஆண்டொன்றுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவும் இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்டார்.