சபரிமலையில் இலங்கை பெண்ணொருவர் ஐயப்பனை தரிசனம் செய்ததாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இதனை பொலிஸார் உறுதிப்படுத்தினாலும், அந்தப் பெண்ணே அதனை மறுப்பதால் அவர் தரிசனம் செய்தாரா? இல்லையா? என்ற குழப்பம் நீடிக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று இரவு சசிகலா என்ற 46 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் தரிசனம் செய்தததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவலை அவரே மறுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது,“
நான் 48 நாட்கள் ஐயப்பனுக்கு விரதம் இருந்தேன். 18 படிகளில் ஏறினேன். அப்போது என்னை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் என்னால் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. நான் உண்மையான ஐயப்ப பக்தை. என்னை ஏன் பொலிஸார் தடுத்து நிறுத்தினர்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், சில ஊடகங்களில் சசிகலா பதினெட்டு படிகளில் ஏறி ஐயப்ப தரிசனம் செய்ததாகவும். அதனை கேரள பொலிஸார் உறுதி செய்தததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டெம்பர் 28 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.
குறித்த தீர்ப்பை அமுல்படுத்துவதில் கேரள இடதுசாரி அரசு முனைப்புக் காட்டிய நிலையில், சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மாச்சாரி என்பதால் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் சபரிமலை நடை திறக்கப்படும் போதெல்லாம் பிரச்சினை வெடித்தது.
இதனால் நடை திறக்கும் காலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30 ஆம் திகதி திறக்கப்பட்டது.
அப்போது, மலப்புரம் பகுதியைச் சேர்ந்த கனகதுர்கா (44), கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து அம்மினி (40) ஆகியோர் புதன்கிழமை அதிகாலை சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
இதனால் ஐயப்பன் கோவில் தலைமை தந்திரி, கோயிலின் நடையை சாத்திவிட்டு, சுத்திகலச பூசை செய்தார். பின்னர் நடை திறக்கப்பட்டது.
இந்நிலையில் ஐயப்பன் கோவிலின் ஐதீகத்தை இடதுசாரி அரசு மீறிவிட்டதாக கூறி கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம் நேற்று நடந்தது.
அதில் ஒருவர் உயிரிழந்தார். நூற்றுக்கணக்கானவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் நேற்றிரவு மேலும் ஒரு பெண் தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது.
ஆனால், சம்பந்தப்பட்ட பெண்ணோ இதனை மறுத்திருக்கிறார். பொலிஸ் மற்றும் பக்தை சொல்லும் முரண்பட்ட தகவல்களால் குழப்பம் நீடிக்கிறது.
இதனிடையே அந்த பெண் தனக்கு மாதவிடாய் நின்றுவிட்டதற்கான வைத்திய சான்றிதழை காட்டியதாகவும் சிலர் தெரிவிக்கிறார்கள்.
இருந்தாலும் அவர் பதினெட்டு படியேறி ஐயப்பனை தரிசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.