தகவல் தொழில்நுட்பத்தின் உச்சகட்ட பரிணாம வளர்ச்சியின் அடையாளமாக இந்தியாவுக்கு வர இயலாமல் போன மாப்பிள்ளைக்கும் மணமகளுக்கும் இஸ்லாமிய முறைப்படி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்த ‘ஹைடெக்’ திருமணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் முஹம்மது ஆபித். சவுதி அரேபியா நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவருக்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலையால் திருமண நாளான கடந்த ஐந்தாம் தேதி மணமகன் முஹம்மது ஆபித் இந்தியாவுக்கு வர இயலாமல் போனது. இதனால், பெண் வீட்டார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை குறித்த நேரத்துக்குள் நவீனகால வீடியோ கான்பிரன்சிங் முறையில் நடத்திவிட மணமகனின் தந்தையான ரேஹான் தீர்மானித்தார்.
இதையடுத்து, மணக்கோலத்தில் முஹம்மது ஆபித் சவுதி அரேபியாவில் தனது நண்பர்கள் புடைசூழ அமர்ந்திருக்கும் காட்சியுடன் அங்குள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் இந்த திருமணத்துக்கு அவரது சம்மதம் பெறப்பட்ட காட்சியும் ஷாம்லி மாவட்டத்தில் இருக்கும் மணமகள் வீட்டில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அகன்ற திரையில் ஒளிபரப்பட்டது.
அதேவேளையில், இன்னொரு கேமரா மூலம் மணமகள் சம்மதம் தெரிவிக்கும் காட்சி ஒளிபரப்பானது. இந்த திருமண விழாவுக்கு வந்திருந்த நண்பர்களும், இந்த ‘ஹைடெக்’ திருமணத்தை கண்டு வியந்ததுடன், மணமக்களை மனம்குளிர வாழ்த்தினர்.
பொதுவாக, இஸ்லாமிய திருமணங்களில் மணமகனின் நெருங்கிய உறவினர்களில் சுமங்கலியாகவும், வயதில் மூத்தவராகவும் பிள்ளைப்பேறு பாக்கியம் பெற்றவராகவும் இருப்பவர்கள்தான் மணமகள் கழுத்தில் மங்கல ஆபரணத்தை அணிவிப்பது வழக்கம்.
அதுவரை மணமக்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துகொள்ள முடியாது. மங்கல ஆபரணம் அணிவிக்கப்பட்டு மனைவியான பின்னரே மணமகன் அந்தப் பெண்ணை சந்திக்க முடியும்.
ஆனால், இங்கு முஹம்மது ஆபித் விவகாரத்தில் விமானம் ஏறி சொந்த ஊருக்கு வந்த பின்னர்தான் தனது புதுமனைவியை அவர் சந்திக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.