மாட்டுச் சாணத்துடன் வெளியேறும் கழிவு நீரை சேமித்து வைப்பதற்காக, தமது வீட்டுத் தோட்டத்தில் வெட்டி வைக்கப்பட்டிருந்த குழிக்குள் விழுந்து இரண்டரை வயதான ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
மஸ்கெலியா- ப்ரௌண்ஸ்வீக் தோட்டத்தைச் சேர்ந்த ஜெயசுந்தரம் சுலக்ஷன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று (29) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டுக்குள் இருந்த குழந்தையை காணாது தேடிய பெற்றோர்,குழந்தை வீட்டுத்தோட்டத்திலுள்ள சாணியைக் கொட்டுவதற்கான கழிவுக்குழியில் விழுந்திருப்பதை கண்டு, மீட்டுள்ளதுடன் மஸ்கெலியா வைத்தியசாலைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.
குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சடலம், மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.