சாதி மாறி காதலித்த தலித் இளைஞர் தலை துண்டித்து படுகொலை- ; 6 பேர் கைது
சாதி மாறி காதலித்ததாக தலித் இளைஞர் ஒருவரை கடத்தி கொடூரமாக படுகொலை செய்த 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் கடந்த 7 நாட்களுக்கு முன் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பில் தெரியவந்துள்ளதாவது, கோகுல்ராஜும் நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
சம்பவ தினத்தில் கோகுல்ராஜும் அந்த பெண்ணும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது ஒரு காரில் வந்தவர்கள் கோகுல்ராஜை மட்டும் அங்கிருந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த காட்சிகள் யாவும் அந்த கோயிலின் சி.சி.டி.கெமராவில் பதிவாகியுள்ளன.
கோகுல்ராஜ் கடத்தப்பட்ட தகவலை அந்த பெண் தம் நண்பர்களிடத்தில் கூறியதையடுத்து கோகுல்ராஜை அவர்கள் தேடியுள்ளனர்.
இந்நிலையில் கோகுல்ராஜ் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சினையில் கோகுல்ராஜ் கொலைசெய்யப்பட்டதாக கூறி கொலை வழக்கு பதிவு செய்யவேண்டுமென வலியுறுத்தி அவரது சடலத்தை பொறுப்பேற்க அவரது உறவினர்கள் போராட்டம் நடத்திவந்தனர்.
அவர்களுக்கு ஆதரவாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சாதி அமைப்பை நடத்தி வரும் யுவராஜ் என்பவரது ஆட்கள்தான் கோகுல்ராஜை கடத்திச் சென்று கொலை செய்ததாக அவர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோகுல்ராஜின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கையை மருத்துவமனை வழங்கியுள்ளது.
மருத்துவமனை அறிக்கையின் அடிப்படையில் கோகுல்ராஜ் மரணம் தற்போது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோகுல்ராஜை கடத்திப் படுகொலை செய்ததாக 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி யுவராஜை பொலிஸார் தேடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கோகுல்ராஜின் உடலைப் பெற்றுக் கொண்ட அவரது உறவினர்கள் நேற்று நல்லடக்கம் செய்தனர்.
‘நீ மட்டும் வீட்டுக்குக் கிளம்பு…’ மலைக்கோயில் டு ரயில்வே டிராக்… எப்படி செத்தார் கோகுல்ராஜ்?
‘வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியும்
செத்துக்கொண்டே
வாழவும் முடியும்
அதற்காகவேணும் காதலித்துப்பார்…’ என்று வைரமுத்து எழுதினார். இனி காதலித்தால் வாழவே முடியாதுபோல! கோகுல்ராஜின் மரணம் அதைத்தான் சொல்கிறது.
தர்மபுரி இளவரசனை அடுத்து, ஓமலூர் கோகுல்ராஜும் தன்னோடு கல்லூரியில் பயின்ற ஓர் உயர் சாதி பெண்ணைக் காதலித்ததால் தண்டவாளத்தில் தலை தனியாக, உடல் தனியாக சிதறி மர்மமான முறையில் இறந்துள்ளார்.
நடந்தது என்ன?
சேலம் மாவட்டம் ஓமலூர் சாஸ்தா நகரைச் சேர்ந்த வெங்கடாசலம், சித்ரா தம்பதியினருக்கு கலைச்செல்வன், கோகுல்ராஜ் என்ற இரண்டு மகன்கள். வெங்கடாசலம் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். மகன்களை கஷ்டப்பட்டு இன்ஜினீயரிங் படிக்கவைத்தார் சித்ரா.
இளைய மகன் கோகுல்ராஜ் திருச்செங்கோடு கல்லூரியில் இ.சி.இ படித்துள்ளார். அதே துறையில் சக மாணவியாகப் பயின்றவர் பரமத்திவேலூர் அருகே உள்ள நடந்தை கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகள் ஸ்வாதி.
‘‘கடந்த 23-ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் கோகுலும் ஸ்வாதியும் பேசிக்கொண்டிருக்கும்போது தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜுடன் ஏழு பேர் வந்து சூழ்ந்தனர். கோகுலையும் ஸ்வாதியையும் மிரட்டி, அவர்களிடம் இருந்த செல்போன்களைப் பறித்துக்கொண்டனர்.
ஸ்வாதியை திட்டி அனுப்பிவிட்டு கோகுலை தன் காரில் ஏற்றிக்கொண்டார் யுவராஜ். அதன்பிறகு கோகுல்ராஜ் பிணமாகத்தான் மீட்கப்பட்டார்” என்பதே முதல்கட்டத் தகவல். இது அனைத்தும் ஸ்வாதியின் வாக்குமூலத்திலும் கோயில் சி.சி.டி.வி வீடியோ பதிவு மூலமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்கிறது போலீஸ்.
இதுபற்றி கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வனிடம் பேசியபோது, ‘‘என் தம்பி கல்லூரிக்குப் போவதாக கடந்த 23-ம் தேதி காலை 8 மணிக்கே கிளம்பிச் சென்றான். இரவு 7 மணி ஆகியும் அவன் வராததால் அம்மா தொடர்ந்து அவனுடைய நம்பருக்கு போன் போட்டுக்கொண்டே இருந்தார்.
ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. இரவு 8 மணிக்கு மேல் பதறிப்போய் தேட ஆரம்பித்தோம். 8.30 மணிக்கு கோகுல்ராஜ் போனில் இருந்து கால் வரவே அம்மா எடுத்து, ‘கோகுல் எங்கடா இருக்க?’ என்று கேட்க, ‘நான் திருச்செங்கோட்டுல இருக்கிறேன்.
என்னைத் தேட வேண்டாம்’ என்று பதில் வந்தது. ஆனால், பேசியது கோகுல் குரல் இல்லை. உடனே அம்மா, ‘பேசறது கோகுல் கிடையாது. நீ யாரு?’ என்று அழுதுகொண்டே கேட்க, ஸ்விட்ச் ஆஃப் பண்ணிவிட்டார்கள்.
அதன் பிறகுதான் ஏதோ இதில் மர்மம் இருப்பதை உணர்ந்து, கோகுல்ராஜ் ஃபேஸ்புக்கில் உள்ள அவனுடைய நண்பர்களைத் தேடினோம். அதில் கோகுலுடன் படித்த கார்த்திக் என்பவரின் நம்பர் வாங்கிப் பேசினேன்.
கார்த்திக், ‘கோகுலும் ஸ்வாதியும் திருச்செங்கோடு கோயிலுக்குப் போனாங்க. அங்க ஏதோ பிரச்னைபோல இருக்கு. என்னிடம் ஸ்வாதியின் அம்மா நம்பர் இருக்கு. அவரிடம் பேசி பாருங்க…’ என்று ஸ்வாதி அம்மாவின் போன் நம்பரை கொடுத்தான்.
ஸ்வாதி அம்மாவுக்கு போன் பண்ணினேன். ஸ்வாதிதான் போன் எடுத்தது. ‘நானும் கோகுலும் திருச்செங்கோடு மலைக்கோயிலுக்குப் போனோம். அப்போது யுவராஜும் அவரது ஆட்களும் எங்களை மிரட்டி எங்களிடம் இருந்த செல்போன்களைப் பறித்துக்கொண்டு, ‘நீ மட்டும் வீட்டுக்குக் கிளம்பு…’னு என்னைத் திட்டி அனுப்பிவிட்டார்கள்.
கோகுலை யுவராஜ் காரில் ஏற்றிக்கொண்டு போனார்’ என்று சொன்னார். இந்த சம்பவத்தை 24-ம் தேதி காலையில் ஸ்வாதியும் திருச்செங்கோடு காவல் நிலையத்துக்கு வந்து இன்ஸ்பெக்டர் சக்ரபாணியிடம் சொன்னார்.
இன்ஸ்பெக்டர் சக்ரபாணி, யுவராஜிடம் தொலைபேசியில், ‘நீ எங்க இருக்கிற, கோகுல்ராஜை எங்க வெச்சிருக்க, அவர்களை மிரட்ட உனக்கு யார் பவர் கொடுத்தது? உடனே ஸ்டேஷனுக்கு வா’ என்றார்.
யுவராஜ், ‘எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்றார். ‘நீ மிரட்டிய பொண்ணே புகார் கொடுத்திருக்கு. என் அருகில்தான் இருக்கிறது’’ என்று இன்ஸ்பெக்டர் சொன்னதும் யுவராஜ் போனை கட் பண்ணிவிட்டார்.
அதையடுத்து 3.30 மணிக்கு ஈரோடு ரயில்வே போலீஸார் பள்ளிப்பாளையம் அடுத்த தொட்டிப்பாளையம் ரயில்வே டிராக்கில் கோகுல் பிணமாகக் கிடந்ததாகவும் ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து இருப்பதாகவும் சொன்னாங்க’’ என்று சொல்லி அழுதார்.
கோகுல்ராஜின் அம்மா சித்ரா, ‘‘அவுங்க அப்பா இல்லாத குறை தெரியாம கஷ்டப்பட்டு படிக்க வெச்சது பாழாப் போயிடுச்சே. நாங்க என்ன பாவம் செஞ்சோம்? என் மகனை துள்ளத் துடிக்க இப்படி கழுத்தை அறுத்து தண்டவாளத்துல போட்டிருக்காங்களே. இதை கேட்க யாரும் இல்லையா? என் தங்கம் கோகுல் செத்ததற்கு நியாயம் கிடைக்கணும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்’’ என்று பேச முடியாமல் கதறி அழுத்தார்.
கோகுல், ஸ்வாதியோடு படித்த சக மாணவர்களிடம் விசாரித்தபோது, ‘‘கல்லூரி படிக்கும்போது இருவரும் நண்பர்களாகத்தான் இருந்தார்கள். பிறகு இருவரும் காதலிப்பதாகத் தெரிய வந்தது. அதனால் ஸ்வாதியின் பெற்றோர்கள் இரண்டு, மூன்று முறை கோகுலை எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை’’ என்றனர்.
இதுபற்றி திருச்செங்கோடு இன்ஸ்பெக்டரும் வழக்கின் விசாரணை அதிகாரியுமான சக்ரபாணி, ‘‘ஸ்வாதியிடம் வாக்குமூலத்தைப் பெற்று முதல்கட்ட விசாரணையைத் தொடங்கினோம். தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் இவர்களிடம் இருந்து சென்போன்களை பறித்துக்கொண்டு அந்தப் பெண்ணை மிரட்டி அனுப்பிவிட்டு, கோகுலை காரில் ஏற்றிக்கொண்டு போனது தெரியவந்துள்ளது.
அதற்குப் பிறகு யுவராஜ் தலைமறைவு ஆகிவிட்டார். அவரைத் தீவிரமாகத் தேடி வருகிறோம். அவரைப் பிடித்தபிறகுதான் உண்மை தெரியவரும்” என்று சொன்னார்.
இந்த வழக்குப் பற்றி பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்டத் தலைவர் பார்த்திபன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி கோகுல்ராஜ் உடல் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சம்பத்குமார் தலைமையில் டாக்டர்கள் கோகுலரமணன், சங்கீதா ஆகியோர் அடங்கிய குழுவினர் பிரேதப்பரிசோதனை செய்துள்ளனர். இது வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, யுவராஜை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கோகுல் குடும்பத்தினர் போராடி வருகிறார்கள்.
அதனால் உடல் பிணவறையில் குளிர்சாதன வசதியோடு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னையை விடுதலைச் சிறுத்தைகள் மாநில அளவில் கொண்டு செல்ல கட்சியின் தலைமை நிலைய செய்தித் தொடர்பாளர் வன்னியரசும், திருமாவின் தனிச்செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வனும் சேலத்துக்கு வந்திருக்கிறார்கள். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் இந்தப் பிரச்னையை கையில் எடுத்திருக்கிறது.
இதுபற்றி வன்னியரசிடம் பேசியபோது, ‘‘கோகுல்ராஜ் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகின்றன. குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறைக்குத் துணிச்சல் இல்லை. ஆனால், அறவழியில் போராடும் எங்களைக் கைதுசெய்கிறார்கள்.
இதுபோன்ற சாதிய படுகொலைகள் சமீப காலங்களாக தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்டோர் மீது ஏவப்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தமிழக அரசு, யுவராஜ் மற்றும் அவருடைய ஆட்கள் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் உடனே கைதுசெய்ய வேண்டும். கோகுல்ராஜ் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவுசெய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார்.
கெளரவக் கொலைகளைத் தடுக்க இப்போதாவது தனிச்சட்டம் கொண்டு வருவார்களா?
– வீ.கே.ரமேஷ்,
படங்கள்: பா.காளிமுத்து,
ரமேஷ் கந்தசாமி