மாநிலத்தில் அரிசி பற்றாக்குறை இல்லை. அதேபோன்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூன்று மாதத்துக்குத் தேவையான அரிசி கொடுக்கப்பட்டுள்ளது.
அருணாசலப் பிரதேசத்தில், சாப்பாடு இல்லாத காரணத்தால் காட்டில் உள்ள பாம்பை வேட்டையாடிச் சமைக்க முயன்ற இளைஞர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாட்டில் 144 தடை உத்தரவு நடைமுறையாகியுள்ளன. இந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் தவளை மற்றும் பூச்சிகளை உண்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், தற்போது அருணாசலப் பிரதேசத்தில் மூன்று இளைஞர்கள் பாம்பை வேட்டையாடி உணவு சமைத்து சாப்பிட முயன்றுள்ளனர்.
அதற்குச் சமைப்பதற்கு அவர்கள் பிடித்து வந்த கருநாகத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அவ்வாறு பகிரப்பட்ட இந்த வீடியா வைரலான நிலையில், இதை அறிந்த போலீஸார் அந்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாகப் பேசிய அந்த இளைஞர்கள், `சாப்பாட்டுக்கு அரிசி இல்லாத காரணத்தால் காடுகளில் உணவுக்காகத் தேடி அலைந்ததாகவும், அதன்பிறகு இந்தப் பாம்பை உணவுக்காக வேட்டையாடியதாகவும்’ கூறியுள்ளனர்.
இந்த இளைஞர்களின் கருத்துக்கு அருணாசலப் பிரதேச அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் அரிசி பற்றாக்குறை இல்லை. அதேபோன்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் மூன்று மாதத்துக்குத் தேவையான அரிசி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த இளைஞர்கள் சட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளது. இதையடுத்து, அந்த மூன்று பேர் மீதும் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இளைஞர்கள் வேட்டையாடியிருப்பது ராஜ கருநாகம், இது மிகவும் அரிதான வன உயிரினம் என்பதால், ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவு இந்த இளைஞர்கள்மீது பதிவு செய்துள்ளனர்.