35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் இரணடாம் நாளான இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணம் சார்பாக போட்டியிட்ட சாவகச்சேரி இந்து கல்லூரியின் என். டக்சிதா புதிய போட்டி சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இப்போட்டிகளின் முதலாம் நாளான நேற்றைய தினம் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இதே பாடசாலையைச் சேர்ந்த ஏ. புவிதரன் (4.82 மீ.) புதிய சாதனை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று கோலூன்றிப் பாய்தலில் 3.35 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலம் டக்சிதா புதிய சாதனையை நிலைநாட்டினார்.
கோலூன்றிப் பாய்தலில் தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான ஜே. அனித்தா, 2014இல் மகாஜனா கல்லூரி சார்பாக போட்டியிட்டு 3.23 மீற்றர் உயரம் தாவி ஏற்படுத்திய சாதனையையே டக்சிதா இன்று முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார்.
இப் போட்டியில் டக்சிதாவின் சக பாடசாலை மாணவியான வி. விசோபிகா 3.10 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.