புது தில்லி: உலகிலேயே அதிக சக்தி கொண்ட பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட் விளங்குகிறது.
கனடாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆர்டன் கேபிடல் என்ற ஆலோசனை நிறுவனம், உலகின் அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், 159 புள்ளிகளுடன் சிங்கப்பூர் பாஸ்போர்ட் முதலிடம் வகிக்கிறது.
ஏன் என்றால், சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், உலகில் 159 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்.
அதோடு, சிங்கப்பூர் கொண்டிருக்கும் சுமூகமான தூதரக உறவுகளும், மிகச் சிறப்பான வெளியுறவுக் கொள்கைகளும் காரணமாக அமைந்துள்ளன.
இதன் காரணமாகவே, முதல் முறையாக, ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் வலிமையான பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது.
சமீபத்தில் பராகுவே அரசு, சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இன்றி தங்கள் நாட்டுக்கு வரலாம் என்று அறிவித்ததை அடுத்து, சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்போர் விசா இன்றி செல்லும் நாடுகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்தது.
முன்னதாக முதல் இடத்தில் இருந்த ஜெர்மனி, 158 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், ஸ்வீடன் மற்றும் தென்கொரியா நாடுகள் 157 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளன.
அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இது சற்று கவலை தரும் செய்தியாகக் கூட இருக்கலாம்.
ஏன் என்றால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான வெளியுறவுக் கொள்கைகளால், 154 புள்ளிகளுடன் அமெரிக்கா பாஸ்போர்ட் 6வது இடத்தில் உள்ளது.
வெறும் 51 புள்ளிகளுடன் இந்தியா 75வது இடத்தைப் பிடித்துள்ளது. எனினும் கடந்த ஆண்டு 78வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு ஒரு சில புள்ளிகள் முன்னேறியுள்ளன.
22 புள்ளிகளுடன் 94வது இடத்தில் ஆப்கானிஸ்தான் இருக்கிறது. 26 புள்ளிகளுடன் பாகிஸ்தான் மற்றும் ஈராக் 93வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.