சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ரகசிய வாக்குமூலம் அளிக்க இருக்கிறார் பிலால்.
இவர், நுங்கம்பாக்கத்தில் படுகொலையான சுவாதியின் நண்பர். ‘ கொலையாளியைப் பற்றி அவருக்கு முன்பே தெரியும். பிலாலுடன் சுவாதியின் தோழியும் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளிக்க இருக்கிறார்’ என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி.
இந்த வழக்கில் சந்தேகிக்கப்பட்ட ராம்குமார் என்ற இளைஞரை நெல்லையில் கைது செய்தது தனிப்படை. கழுத்தில் காயத்தோடு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராம்குமாரிடம், மாஜிஸ்திரேட் ராமதாஸ் ரகசிய வாக்குமூலம் வாங்கினார்.
‘ சுயநினைவு இல்லாமல் மயக்கத்தில் இருப்பவரிடம் எப்படி ரகசிய வாக்குமூலம் வாங்க முடியும்’ எனக் கேள்வி எழுப்பினர் ராம்குமாரின் வழக்கறிஞர்கள்.
இதையடுத்து, ‘சுவாதி கொலையை ராம்குமாரோடு முடித்துவிட போலீஸார் முயற்சி செய்கிறார்கள்.
கொலைக்கு முன்பு ஒருநாள் ஆந்திரா சென்றிருக்கிறார் ராம்குமார். அங்கு யாரை சந்தித்தார்? கூலிப்படையினரின் கை வரிசையா?’ என அடுக்கடுக்கான சந்தேகங்கள் கிளப்பப்பட்டன.
படுகொலையின் சந்தேகங்கள் எதுவும் தீர்க்கப்படவில்லை. சுவாதியின் நண்பர் என்று சொல்லப்படும் பிலாலை தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
‘ பிலாலுக்கும் சுவாதிக்கும் உள்ள தொடர்பு வெறும் நட்பு மட்டும் இல்லை. சுவாதியைப் பற்றிய சில முக்கியமான விஷயங்களை போலீஸ் திட்டமிட்டே மறைக்கிறது’ என ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் சந்தேகம் எழுப்பி வந்த நிலையில், கொலை வழக்கை வலுப்படுத்த காவல்துறை தீவிரமாகக் களமிறங்கியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர். ” சுவாதியை வெட்டிக் கொலை செய்தது ராம்குமார்தான் என்பதற்கு டிஜிட்டல்பூர்வமாக ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
அரசுத் தரப்பு சாட்சியாக பிலால், சுவாதியின் தோழி மற்றும் நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கடை வைத்திருப்பவர் உள்பட சிலர் உள்ளனர்.
வழக்கிற்கு வலு சேர்க்க இவர்களின் சாட்சியங்கள் போதுமானதாக உள்ளன. நாளை நீதிமன்ற விசாரணையின்போது, சாட்சிகள் பிறழ் சாட்சியாகிவிடக் கூடாது என்பதற்காக பிலால் மற்றும் சுவாதியின் தோழி ஆகிய இருவரிடம் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 164 சட்டப்பிரிவின்படி ரகசிய வாக்குமூலம் வாங்க இருக்கிறோம்.
குறிப்பாக, சுவாதி கொல்லப்படுவதற்கு முன்பு ராம்குமாரைப் பற்றி அறிந்து வைத்திருந்தார் பிலால்.
சுவாதியின் அருகில் ராம்குமார் பலமுறை நின்றிருந்ததை பிலால் பார்த்திருக்கிறார். ‘ கறுப்பாக, ஒல்லியாக இருக்கும் ஒருவன் என்னைப் பின்தொடர்கிறான்’ என பிலாலுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறார் சுவாதி.
அந்த நேரத்தில் சுவாதியின் செல்போன் டவரும் ராம்குமாரின் செல்போன் டவரும் ஒரே பாதையைக் காட்டுகின்றன.
இதுதவிர, சுவாதி வேலை பார்த்த பரனூர் தொடங்கி, சூளைமேடு வீடு இருக்கும் பகுதி வரையில் ராம்குமாரின் செல்போன் பயணித்ததை லொக்கேஷன் டவர் தெளிவாகக் காட்டுகிறது.
வழக்கின் மிக முக்கியமான ஆதாரங்கள் இவை. இவை தவிர, வெளியில் வராத முக்கியத் தகவல்களும் இருக்கின்றன.
இதை ரகசிய வாக்குமூலமாக அளிக்க இருக்கிறார் பிலால். வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துவிட்டோம். குற்றப்பத்திரிகை தயாரிக்கும் வேலைகளைத் தீவிரப்படுத்த இருக்கிறோம்” என்றார் விரிவாக.
‘ நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதியை, ராம்குமார் பின்தொடர்ந்ததாக செல்போன் டவர் ஆதாரம், சி.சி.டி.வி காட்சிகள் என டிஜிட்டல் ஆதாரங்களை நம்பியே வழக்கை நடத்த இருக்கிறது காவல்துறை.
நீதிமன்ற விசாரணையில் டிஜிட்டல் ஆதாரங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதற்கு பல வழக்குகள் உதாரணங்களாக இருக்கின்றன.
இந்நிலையில், பிலாலின் ரகசிய வாக்குமூலம் எந்த வகையில் துணை நிற்கப் போகிறது?’ எனக் கேள்வி எழுப்புகிறார்கள் வழக்கறிஞர்கள் சிலர்.
-ஆ.விஜயானந்த்