கொரோனா பெருந்தொற்றால், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்த தொழில்துறையும் நசிந்துள்ளது.
பா.ஜ.க ஆட்சியின் முக்கியச் சாதனைகளில் ஒன்றாக அவர்கள் சொல்லிக்கொள்வது 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பா.ஜ.க அரசு சொல்லிவரும் நிலையில், ‘2020-ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் 20,700 கோடி ரூபாயை இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கிறார்கள்’ என்ற தகவல் வெளியாகி, கறுப்புப் பணம் பற்றிய விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது.
‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணம் ஒழிந்துவிடவில்லை’ என்பதே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வைக்கும் வாதம்.
கடந்த ஜூன் மாதம் சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களும் இதையே உறுதிசெய்கின்றன.
இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2019-ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் 6,625 கோடி ரூபாயை இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள நிலையில், 2020-ம் ஆண்டு இறுதியில் 20,700 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அங்குள்ள வங்கிகளில் 2017-ல் 5,200 கோடி ரூபாயும், 2018-ல் 6,754 கோடி ரூபாயும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதை மேற்கோள்காட்டிப் பேசும் அரசியல் பார்வையாளர்களோ, “கொரோனா பெருந்தொற்றால், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்த தொழில்துறையும் நசிந்துள்ளது. நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் எட்டு சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
2020-21-ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் -7.3 சதவிகிதத்துக்கும் கீழே சென்றுவிட்டது. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டைக்கூட மத்திய அரசால் வழங்க முடியவில்லை.
இப்படியான சூழலில், 2020-ம் ஆண்டில் 20,700 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து சுவிஸ் வங்கிகளுக்குப் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கறுப்புப் பண விவகாரத்தைத்தான் மிகப்பெரிய பிரச்னையாக பா.ஜ.க முன்வைத்தது.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் 17.5 லட்சம் கோடி ரூபாய் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்தப் பணத்தை மீட்போம் என்றும் வாக்குறுதி அளித்தனர்.
அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையும் வெற்றிபெற்ற பா.ஜ.க., கடந்த எட்டு ஆண்டுகளாக கறுப்புப் பணத்தை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தது என்று தெரியவில்லை.
அவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால், இவ்வளவு பொருளாதார நெருக்கடியான நிலையிலும் 20,700 கோடி ரூபாய் நாட்டிலிருந்து வெளியேறியிருக்குமா… அது யாருடைய பணம்?” என்று கேட்கிறார்கள்.
இதற்கிடையே, ‘சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கறுப்புப் பணம் அல்ல; இந்தியாவில் செயல்படும் சுவிஸ் வங்கிகளின் கிளைகளில் வர்த்தகரீதியாக டெபாசிட் செய்யப்பட்ட தொகையாக அது இருக்கலாம்’ என்று மறுப்பு தெரிவித்திருக்கிறது இந்திய நிதி அமைச்சகம்.
“சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது கறுப்புப் பணமாக இருக்க முடியாது” என்று மறுக்கும் பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளரான பேராசிரியர் சீனிவாசன், “சுவிஸ் வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யக் கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை.
அந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் அத்தனையும் சட்டவிரோதமான பணம் என்றும் சொல்லிவிட முடியாது. சட்டரீதியான பணப் பரிவர்த்தனை அங்கு நடைபெறுகிறது.
சமீபத்தில் சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கறுப்புப் பணம் சம்பந்தப்பட்டவை அல்ல.
ஏராளமான இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து உலக அளவில் வர்த்தகம் செய்கிறார்கள். அப்படி வர்த்தகம் செய்பவர்களே சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள்.
அது கறுப்புப் பணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினால், அதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது.
அதனால், மேற்கண்ட தொகை கறுப்புப் பணமாக இருக்கும் என்று யாரேனும் சந்தேகப்பட்டால், இந்திய அரசிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விவரம் கேட்டு வாங்கலாம். எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்திலும் அது பற்றிக் கேள்வி எழுப்பலாம்” என்றார்
சீனிவாசன், சி.பி.கிருஷ்ணன்
சீனிவாசனின் கருத்தை ஆணித்தரமாக மறுத்துப்பேசும் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், “உலகிலேயே மிகவும் ரகசியம் காக்கக்கூடியவை சுவிஸ் வங்கிகள்.
அங்குள்ள வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் பெரும்பாலும் கறுப்புப் பணமாகத்தான் இருக்க முடியும்.
அந்தவகையில், இந்தியர்களால் அங்கு டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கறுப்புப்பணம்தான் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
ஏற்கெனவே தங்கள் வங்கிகளின் கணக்கு மற்றும் டெபாசிட் விவரங்களை வழங்குவதற்கு சுவிஸ் தேசிய வங்கி ஒப்புக்கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக, இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கின்றன. ஆனால், விவரங்களைத் தருவதற்கு சுவிஸ் வங்கி தயாராக இருந்தாலும், அவற்றை வெளியிட இந்திய அரசு தயாராக இல்லை. கறுப்புப் பணம் இல்லையென்றால், அந்த விவரங்களை இந்திய அரசு வெளியிடலாமே… ஏன் வெளியிடவில்லை?” என்று கேட்கிறார்.
மத்திய அரசு இது பற்றி வெளிப்படையான தகவல்களை வெளியிட்டால் மட்டுமே மேற்கண்ட சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும்!