சென்னையில் 42 இடங்களில் மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் டிக்கெட்டுகள் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி 18-ந் தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணம் செய்ய, மாதம் 10 இலவச பஸ் டிக்கெட்டுகள் வழங்கப்படும்”, என்று அறிவித்தார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி 24-ந் தேதி இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இலவச டிக்கெட்டுகளை பெற மூத்த குடிமக்கள் ஆர்வத்துடன் வந்தனர். அவர்களுக்கு இலவச பயண அடையாள அட்டை கொடுக்கப்பட்டு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்களுக்கான இலவச பஸ் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. மாதத்துக்கு தலா 10 டிக்கெட்டுகள் வீதம் 40 டிக்கெட்டுகள் அன்றைய தினம் வினியோகிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜூலை வரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 622 பேர்களுக்கு இலவச பயண அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இதனைதொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்துக்கான இலவச பஸ் டிக்கெட்டுகள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
சென்னை கோயம்பேடு, பெரம்பூர், பிராட்வே, அயனாவரம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், அண்ணா சதுக்கம் உள்பட 42 இடங்களில் உள்ள பஸ் டெப்போக்களில் இலவச பஸ் டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன.
இந்த இலவச டிக்கெட்டுகளை மூத்த குடிமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து பெற்று சென்றனர். நேரில் வரமுடியாதவர்கள் சார்பில் அவர்களது உறவினர்கள் அடையாள அட்டையை காட்டி இலவச பஸ் டிக்கெட்டுகளை பெற்று சென்றனர்.
இதுகுறித்து மூத்த குடிமக்கள் சிலர் கூறியதாவது:-
மூத்த குடிமக்களுக்காக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டம் உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் மாதம் தலா 10 இலவச பஸ் டிக்கெட்டுகள் எங்களுக்கு கிடைக்கிறது. பஸ் பயண கட்டணத்துக்காக யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இலவச டிக்கெட்டுகள் எண்ணிக்கை இன்னும் அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும். எனவே கூடுதல் டிக்கெட்டுகள் வழங்க தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச மாதாந்திர பஸ் பாஸ் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். இதை எங்களது கோரிக்கையாக அரசுக்கு முன்வைக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.