மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.5 கிலோ தங்கக் கட்டிகளை சுங்க அதிகாரிகள் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 26 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு ஊழியர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பைத் தொட்டி ஒன்றில் பிளாஸ்டிக் பை அழுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவர் பார்த்தார்.
சந்தேகமடைந்த அவர், அந்தப் பையை எடுத்து பார்த்தபோது அதில் தங்கக் கட்டிகள் இருந்தன. இதுபற்றி சுங்க அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். உடனடியாக அங்குவந்த சுங்க அதிகாரிகளும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகளும் தங்கக் கட்டிகளை கைப்பற்றினர்.
அவற்றின் எடை 10.5 கிலோ என்பது தெரியவந்தது. அதன் மதிப்பு மதிப்பு சுமார் ரூ. 26 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தங்கத்தை வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்து, அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் இருப்பதற்காக இவ்வாறு குப்பைத் தொட்டியில் யாரோ வீசியிருக்கலாம் என்ற அடிப்படையில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.