”நான் சிங்கள, பௌத்த தலைவன். இதனை தெரிவிப்பதற்கு நான் ஒருபோதும் தயங்குவது கிடையாது. பௌத்த சித்தாந்தங்களுக்கு அமையவே நான் இந்த நாட்டை ஆட்சி செய்வேன்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வில் நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அனைத்து சமயங்களுக்கும், அனைத்து இனங்களுக்கும் உரிய கௌரவத்தை அளிக்கும் அஹிம்சையும், அமைதியும் கொண்ட பௌத்த தத்துவத்தில், நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்கும் அனைத்து இனங்களுக்கும் நாட்டில் அமலில் உள்ள சட்ட கட்டமைப்பிற்குள் சரி சமமான சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை உள்ளது எனவும் அவர் கூறினார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நாட்டிலுள்ள பல்வேறு இனத்தவர்களுக்கு இடையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, வறுமையை முற்றாக ஒழித்து, பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவவதற்கான சவால் தமக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டின் தேசிய மரபுரிமைகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், தேசியம் மற்றும் தேசப்பற்று ஆகியன கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், பலவீனமுற்றிருந்த தேசிய பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்தி, தாய்நாடு எதிர்கொண்ட சவால்களை வெற்றிக் கொள்வதற்காகவே தனக்கு மக்கள் வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என கூறிய ஜனாதிபதி, இந்த நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளுக்கும் சமவுரிமை உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இனம் அல்லது மதம் என்ற அடிப்படையில் பிரஜைகளை பிரிக்க முயற்சிப்பதனை தான் நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன், ஒரு சட்டம் என்ற கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.
தாம் சட்டத்தின் ஆட்சியை மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தன்வசம் கிடைத்துள்ளதாக இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
குறித்த அறிக்கையில் காணப்படுகின்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அதேபோன்று, இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு தான் சட்ட மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
”நீங்கள் கேட்ட தலைவன் நான். நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் குறைவின்றி நிறைவேற்றுவேன்.” என கூறி ஜனாதிபதி தனது உரையை நிறைவு செய்தார்.
இலங்கையின் 73வது சுதந்திர தினம்
நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்த முறை சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முப்படை தளபதிகள், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்விற்கு வருகைத் தந்த ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தின நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதையடுத்து, தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் இசைக்கப்பட்டது.
கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை இசைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதிலும், இந்த ஆட்சியில் அதற்கு முழுமையாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சுதந்திர தின உரையை தொடர்ந்து, இராணுவ அணி வகுப்புக்கள் இடம்பெற்றிருந்தன.
சிறுபான்மை கட்சிகளை புறக்கணித்து சுதந்திர தின நிகழ்வு
இலங்கையில் 73வது சுதந்திர தின நிகழ்வை, நாட்டிலுள்ள பெரும்பாலான சிறுபான்மை கட்சிகள் நிராகரித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இலங்கைக்கு கிடைத்த சுதந்திரத்தின் உண்மையான அர்த்தங்களை, சகல சமூகங்களும் அனுபவிக்காத ஒரு சூழ்நிலையில், சிறுபான்மை சமூகங்கள் சுதந்திர தின நிகழ்வுகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே பார்ப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.
73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிஷாட் பதியூதீன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டு பிரஜைகள் ஒவ்வொருவரும் அரசியல், மதம், சமூக, பொருளாதார, வாழ்வியல் உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்கவே, வெளிநாட்டு சக்திகளிடமிருந்து நாட்டை மீட்க போராடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் சுதந்திரத்திற்கு அனைத்து இனத்தவர்களும் அர்ப்பணிப்புடன் போராடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினம், ஒரு சமூகம் மற்றும் மதத்துக்கான சுதந்திரம் தானோ? என எண்ணும் அளவிற்கு சிறுபான்மை சமூகம் ஓரங்கட்டப்படும் நிலைதான் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மறுக்கப்பட்டதன் ஊடாக, நாட்டு பற்றில் சிறுபான்மை சமூகங்களுக்கு உள்ள அளவுக் கடந்த ஆர்வத்தை உதாசீனம் செய்வது ஊர்ஜிதமாகின்றது என ரிஷாட் பதியூதீன் குறிப்பிடுகின்றார்.
அரசியல் நோக்கங்களுக்காக சிறுபான்மை சமூகம் ஒதுக்கப்பட்டாலும், நாட்டுப் பற்றை கைவிடும் மனநிலையில் சிறுபான்மை சமூகம் இல்லை என தாம் ஆணித்தரமாக கூற விரும்புவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.
மனோ கணேசனின் டுவிட்டர் பதிவு
”இந்நாடு எமக்கும் உரித்தானது என்ற உணர்வை தமிழ் பேசும் மக்களிடம் ஏற்படவே, 1949ம் ஆண்டோடு கைவிடப்பட்ட சுதந்திர தினத்தில் சிங்களம், தமிழ் மொழிகளில் தேசிய கீதம் பாடும் வழமையை, 2016ம் ஆண்டு நாம் மீண்டும் கொண்டு வந்தோம்.
இன்று இவ்வரசு நாட்டை மீண்டும் இருளுக்குள் கொண்டு செல்கிறது,” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களின் கரிநாள்
இலங்கையின் 73வது சுதந்திர தினத்தை முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு கரிநாளாக அனுஷ்டிக்க வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீர்மானித்திருந்தனர்.
இதை அந்த அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்தார்.
சுதந்திர தினமான நேற்று, வடக்கு கிழக்கு பகுதிகளில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கறுப்பு கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், நீதிமன்ற உத்தரவையும் பொருட்படுத்தாது, வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள், பிப்ரவரி 4ம் திகதி தமிழ் தேசிய மக்களின் மறக்க முடியாத கரிநாள் என கூறியுள்ளனர்.