தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து பாஐக மத்திய அமைச்சர்கள் ஒரே நாளில் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான மேனகா காந்தி சென்னையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான தடையை நீக்குவதைவிட மத்திய அரசுக்கு வேறு பல முக்கியமான பணிகள் இருப்பதாகவும் தமிழகத்தில் வெகு சிலரே ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வேண்டுமென கூறுவதாகவும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடையை மதிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், 2017ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுடன் பொங்கல் விழா நடக்குமென தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் யார் சொல்வதையும் கேட்கும் நிலை தமிழக மக்களுக்கு இல்லையென்றும் அவர் கூறினார்.
பாஐக மத்திய அமைச்சர்களின் மாறுபட்ட கருத்தினால், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஐக இரட்டை நாடகம் போடுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது.