தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த வார இந்திய விஜயத்தின் போது பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த ஒரு விடயம் நடைபெறாமல் போய்விட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கூட்டமைப்பின் எம்.பி.க்கள் சந்திக்கப்போகின்றார்கள் என்பதுதான் அந்த எதிர்பார்ப்பு.
இந்த எதிர்பார்ப்பு இடம்பெறாத நிலையில்தான் கூட்டமைப்பு இப்போது நாடு திரும்பியுள்ளது. இந்த இடத்தில்தான் முக்கியமான ஒரு கேள்வி எழுப்பப்படுகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கூட்டமைப்பினரால் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகப் பேச முடிந்துள்ளது.
ஜெயலலிதாவைத்தான் சந்திக்க முடியவில்லை. அந்தளவுக்கு ஜெயலலிதா பிஸியாக உள்ளாரா?
ஜெயலலிதாவின் இலங்கை அரசியலைப் புரிந்துகொண்டவர்களுக்கு இது புதுமையானதல்ல. புதுடில்லி சென்ற கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சென்னை விரைகின்றார்கள்.
ஜெயலலிதாவை சந்திக்கத் திட்டம் என்ற செய்தி வெளிவந்த போதே ஜெயலலிதாவின் அரசியலைப் புரிந்துகொண்ட நண்பர் ஒருவர் சொன்னார்: இவர்கள் சென்னை சென்று காலத்தை வீணாக்கப் போகின்றார்கள் என்று.
தமிழக முதல்வரை உண்மையிலேயே சந்திக்க முடியும் என்ற எதிர்பார்ப்புடன் கூட்டமைப்பின் தலைவர்கள் சென்னை சென்றிருந்தால் அவர்கள் ஜெயலலிதாவின் அரசியலைப் புரிந்துகொள்ளாதவர்களாகத்தான் இருக்க வேண்டும் எனவும் அவர் சொன்னார்.
ஈழத் தமிழர் விவகாரத்தை முழுமையாகத் தன்னுடைய கைகளில் எடுத்துள்ள ஒருவர் என்றால் அது ஜெயலலிதாதான். அதிகாரத்தில் இருக்கும் போதே ஈழத் தமிழர் விவகாரத்தை கைகளில் எடுத்து மத்திய அரசுக்கு அதிகளவு அழுத்தத்தைக் கொடுக்கக் கூடிய ஒருவராக எம்.ஜி.ஆருக்குப் பின்னர் உள்ளவரும் ஜெயலலிதாதான்.
கருணாநிதியைப் பொறுத்தவரையில் எதிரணியில் உள்ளபோதுதான் அதிகளவுக்கு ஈழத் தமிழர் விவகாரத்தை கைகளில் எடுக்கின்றார். முதல்வராக இருந்தபோது குப்பைக்கூடைக்குள் போட்டிருந்த ரெசோவை அதிகாரத்தை இழந்த பின்னர்தான் அவர் தூசி தட்டி எடுத்தார்.
ஜெயலலிதாவின் தீவிர ஈழ ஆதரவு அரசியலால் தீவிரமான தமிழ் தேசிய அமைப்புக்கள் கூட அவருக்கு எதிராக செயற்பட முடியாத ஒரு நிலை உருவாகிவிட்டதை கடந்த வருடங்களில் பார்க்க முடிந்தது. தனித் தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு என சட்டசபையில் ஒரு தீர்மானத்தைக் கூட அவர் நிறைவேற்றியிருக்கின்றார்.
ஜெயலலிதாவின் இந்த கடும்போக்கின் பிரதிபலிப்பாக சிங்கள தேசியவாத அமைப்புக்களின் முதலாம் நம்பர் எதிரியாக அவர் மாறிவிட்டார். இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் அவருக்கு எதிராக கட்டுரை ஒன்று அவரை அவதூறு செய்யும் வகையிலான படத்துடன் வெளியானதும் இதன் பிரதிபலிப்புதான்.
அதாவது, சிங்களக் கடும் போக்காளர்களுக்கு இன்று சிம்ம சொப்பணமாக இருப்பவர் ஜெயலலிதாதான். தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் சிங்களவர்களுக்கு சிம்மசொப்பணமாக இருப்பது ஒன்றே அவரது செல்வாக்கை உயர்த்தக்கூடிய ஒன்றுதான். அதாவது அது அவரது அரசியலுக்கான ஒரு முதலீடு.
இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரையில் அது தன்னுடைய கேந்திர நலன்களுக்கு இலங்கைப் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொண்டாலும், தீர்வு விடயத்தைப் பொறுத்தவரையில் 13 இன் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் அதன் நிலைப்பாடு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையிலும் அந்த நிலைப்பாட்டுடன் இணங்கிப்போகின்றது. அதேவேளையில், பிளவுபடாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்பதை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அடிக்கடி சொல்லிவருகின்றார்.
இந்த நிலையில் கூட்டமைப்பைச் சந்திப்பது, தமிழ்த் தேசியவாதத்தை கையிலெடுத்து ஈழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு என்ற கோஷத்துடன் அரசியல் நடத்தும் ஜெயலலிதாவைப் பாதிக்கும். அதாவது, ஜெயலலிதாவின் இலங்கை அரசியலானது, ஈழத் தமிழர்களுக்கானதல்ல.
அது தமிழக வாக்குகளை இலக்கு வைத்த அவரது அரசியல். கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திப்பதை ஜெயலலிதா தவிர்த்துவருவதன் பின்னணி அதுதான்.
இதனால்தான் ஜெயலலிதாவைச் சந்திப்பதற்காக கூட்டமைப்பினர் காத்திருந்து அவர்கள் காலத்தை விரையமாக்குகிறார்கள் என நண்பர் சொல்லியிருந்தார்.
ஜெயலலிதாவைச் சந்திப்பதற்காக சென்னையில் கூட்டமைப்பினர் காத்திருக்கின்றார்கள் என செய்திகள் வெளிவந்த போதிலும், ஜெயலலிதாவுக்காக தாம் காத்திருக்கவில்லை என கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அழைத்தமையால்தான் தாம் சென்னை சென்று வந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
இலங்கைப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டவர்களை சந்திப்பதை ஜெயலலிதா எப்போது தவிர்த்தே வந்திருக்கின்றார். 2003 இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி என்ற முறையில் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது ஜெயலலிதாவைச் சந்தித்தார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்து சமாதானப் பேச்சுக்களை விடுதலைப் புலிகளுடன் முன்னெடுத்த காலத்தில் 2004 இல் சென்னை சென்றபோது, ஜெயலலிதாவைச் சந்திக்க முடிந்தது.
பின்னர் ரணிலின் பிரதிநிதியாகச் சென்ற மிலிந்த மொரகொடையும் ஜெயலலிதாவைச் சந்தித்திருந்தார். இந்த மூவரையும் ஜெயலலிதா சந்தித்ததில் ஒரு ஒற்றுமை இருந்தது. மூவருமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அது ஜெயலலிதாவுடனும் ஒத்துப்போயிருந்தது.
இதனைவிட தமிழ்த் தலைவர்கள் எவரும் ஜெயலலிதாவைச் சந்தித்துப்பேசியதாக தகவல் இல்லை. ஜெயலலிதாவின் அமைச்சரவையிலிருந்தவர்களும் அவ்வாறான சந்திப்புகளைத் தவிர்த்துக்கொண்டனர்.
இலங்கைப் பிரச்சினையை ஜெயலலிதா தன்னுடைய அரசியலுக்கு நன்கு பயன்படுத்திக்கொள்கின்றார். கருணாநிதி பதவியிலிருக்கும் போது ஈழத் தமிழர்கள் விடயத்தில் இழைத்த தவறுகள்தான் அவரது தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது. அது ஜெயலலிதாவுக்கும் தெரியும்.
அதனை ஜெயலலிதா தனது அரசியலுக்கு நன்கு பயன்படுத்திக்கொண்டார். இப்போது தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புக்கள் அனைத்தும் ஜெயலலிதா மீது சுட்டுவிரலை நீட்ட முடியாதளவுக்கு கட்டுண்டு போயுள்ளன.
இந்த நிலையில், சம்பந்தன் சொல்வதைப் போல ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என இறங்கிவருவது ஜெயலலிதாவின் ஆதரவுத் தளத்தையும் இறக்கிவிடும். கூட்டமைப்பின் அழைப்பை ஜெயலலிதா கண்டு கொள்ளாமைக்கு இதுதான் காரணம்!
-சபரி-