ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உச்சகட்டத்தை நெருங்கியிருக்கின்றது.
வருமானத்திற்குப் பொருந்தாதவகையில் சொத்துகள் சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் அரசு வழக்கறிஞர் பவானிசிங், சாட்சிகளின் அடிப்படையில் முன்வைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில் ஜெயலலிதா – சசிகலா தரப்பின் சொத்து மதிப்பு 5000 கோடி இந்திய ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-1996 ஆம் ஆண்டு காலபகுதியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா முன்னிலையில் நடக்கும் இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் 24-ந் தேதி முதல் நான்கு நாட்கள், சாட்சிகளின் சாட்சியங்களை அரசு வழக்கறிஞர் பவானிசிங் முன்வைத்தார்.
‘இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆவர். இவர்களில் முதலாவது குற்றவாளியும், இரண்டாவது குற்றவாளியும் ஒரே வீட்டில் வசித்தார்கள் என் பதற்கான 9 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
இவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் என்பதற்கான ஆவணங்கள் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
அதன் மூலம் நான்கு குற்றவாளிகளும் கூட்டுச்சதி செய்து, முதல் குற்றவாளி முதலமைச்சராக இருந்தபோது, அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவருக்காகவும் அவரைச் சேர்ந்த 3 குற்றவாளிகளுக்காகவும் தங்களது வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைச் சேர்த்திருக்கிறார்கள்’ என்று வழக்கறிஞர் பவானிசிங் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்த செய்திகளை தமிழக நாளேடுகள் வெளியிடாமல் மறைத்துவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
திங்கட்கிழமை பெங்களூரில் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்ற போது, அரசு வழக்கறிஞரான பவானி சிங் அவர்களே ஆஜராகி, ஏற்கனவே அளிக்கப்பட்ட சாட்சியங்களின் விவரங்களை நீதிபதியின் முன்னால் எடுத்துரைத்திருக்கிறார்.
அப்போது ஜெயலலிதா தரப்பினர் வாங்கிய சொத்துக்கள் பற்றியும், அதன் தற்போதைய மதிப்பு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்குமென்றும் பல ஆதாரப்பூர்வமான தகவல்களை எடுத்துக் காட்டியிருக்கிறார்.
இந்த செய்தி தமிழகத்தின் முக்கிய செய்தித் தாள்களில் வெளியாகியுகவில்லை என மு.கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.